Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 30 October 2018

பணி ஓய்வும் பக்க விளைவுகளளும்


ஜாலியாத்தான் இருக்கு, மொள்ள எந்திரிச்சு மொள்ள டிக்காக்ஷன் காப்பிய உறிஞ்சி  எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா  பகவான எழுப்புற விடியக்காலத்துல கொறட்ட வுட்டுட்டு  நேரங்கெட்ட நேரத்துல சுப்ரபாதம் கேக்குறது...என்னா இருந்தாலும் சமஸ்கிருதத்துல இருக்க கொழவு தமிழ்ல பாடும்போது இல்லண்ணு நொட்டசொல்லிகிட்டு  நம்ம கிட்ட ராகம் இல்லியா மெட்டு இல்லியா இந்த இளையராஜா மேற்கித்தி மெட்டுல திருவாசகத்த ஏன் பாடித்தொலச்சிருக்காருண்ணு பொலம்பினாலும் அதயும் விடாம கேக்குறது இப்பிடியா...... ரிட்டையர் ஆகி இருக்குறதும்  சுகானுபவந்தான்... 'இதுற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.' அவர்  மனசு துள்ளிக்குதித்தது.
"ஐயா பேன நிறுத்துறங்க,.ஊடு பெருக்கோணும்" பதிலொண்ணுக்கும் காத்து கெடக்காம  டொக்குண்ணு ஒரு சத்தம் மட்டுந்தான்! பொத்துக்கொண்டு வந்தது அவருக்கு !!
"என் ஆபீஸ்ல முட்டும் இது நடந்திருந்துச்சுண்ணா அவன் சீட்டு அண்ணைக்கே கிழிபட்டுருக்கும்.
என்ன மரியாத எனக்கு, என்ன பவ்யம்!  எத்தன கொள்ள சலாம் காலமற காட்டியும்!! என்னா பணிவா டிரைவர் கார் கதவ தொறந்து வச்சிகிட்டு நிப்பான்!!  அட்டாச்சி கேச தூக்குற பவுசு என்ன? லிப்ட்ல நான் நொழஞ்சா  ஒரு பய ஏற மாட்டான் அவ்வளவு மரியாத  எவ்வளவு பெரிய எடத்துக்கும் நான்  ஒரு வார்த்த போட்டா  போதும்,. காரியம் முடிஞ்ச மாதிரிதான்.   இண்ணைக்கி?  வேல செய்யுற பொம்பள அநாவசியமா என்னத் தூக்கில்ல  எறியுது? இவருக்கு புசு புசுண்ணு வந்துச்சு எல்லாம் இந்த வீட்டம்மா  குடுக்குற எடம், அததுகள வைக்க வேண்டிய  எடத்துல வைக்கணும்.. 
"அந்த பொம்பளைக்கி மத்தியான சாப்பாடு குடுக்குறத நிறுத்து... ரெண்டு பேரும் ரிட்டையர் ஆயிட்டோம்.. இனிமே வரவு செலவ பாத்து பண்ணணும்"
"ம்ம்ம்ம்" பொதுவான ஒரு பதில் அந்த பக்கமிருந்தது!! இப்ப போயி இவரு கிட்ட "நம்பிக்கையான ஆளு  கெடைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்ப்பாண்ணு கேக்க முடியுமா என்ன? நேரம் வரும்போது மொள்ளதான்அவுத்து வைக்கணும்” சாணக்கியத்தனம் சாதாரண விஷயத்துக்கூட தேவையாத்தான் இருக்கு!! 
இப்படி சின்ன சின்ன விஷயங்களெல்லாம் அவரை மட்டம் தட்டுவதாகவே  மனசுநிறைய  கூத்தாட அவருக்கு எல்லாமே சப்பிட்டுப்போயிற்று எம்.எஸ். சுப்புலஷ்மியும் இளையராஜாவும் கூட அலுத்துப்போனார்கள்.
தாத்தா காலத்து கடிகாரங்களுக்கு தினப்படி சாவி கொடுக்காவிட்டால் ஸ்பிரிங்தொளதொளத்துப்போவது போல.... 
காத்துபோன டயர் தார் ரோட்டோடு ஒன்றித்து போவதைப்போல அவர் மனசுக்குள் உளச்சல்!
"அம்மா ஒங்கிட்ட தனியா பேசணும்மா." தெருவின் சலவைக்காரர் ஜனா
"ஐயா குளிக்கிறாருப்பா வேல செய்யுறவங்களும் இன்னம் வருல."
"அம்மா ஐயாவ மார்கெட்டுக்கு அனுப்பாதம்மா."
"ஏம்ப்பா ஐயா ரிடையர் ஆயிட்டாங்க... மார்கெட்டுக்கு நடந்து போறதெல்லாம் ஒரு எக்சர்சைஸ்தானே?
"அம்மா கூடத்தான் ரிட்டையர் ஆயிட்ட  இன்னா  நான் சொல்றது.கரிட்டா? நீ போயம்மா மார்கெட்டுக்கு"
"ஜனா அண்ணைக்கி பாரு. ஐயா மொளக்கீர கட்டு எட்டு ரூவாய்க்கு வாங்கிகிட்டு வர்றாரு... நான்  போனா கட்டு பத்து ரூவாய்க்கு கொறைய மாட்டங்குறாங்க."
 சிக்கலே அங்கதாயம்மா யம்மா இந்த ரெண்டு ரூவாகாசு  இன்னா பொறும். நீயி சொல்லு பாக்கலாம்... பிச்சக்காரங்கூட நம்மள மதிக்கமாட்டான்...  இத்த வாங்கற்த்துக்கு ஐயா இன்னான்னா சொல்றாரு தெரியுமா உன்க்கு?
இவுரு பதவி பவுஷல்லாம் பேசுறாரு யம்மா .... நான் ஒரு போன் போட்டா இந்த எட்த்துல உங்கடையே காணாப்பூடும்ங்கிராரு யம்மா! ஏற்கனவே போலிசு கெடுபுடி அத்தோட இது வேறையாண்ணு மனசு காஞ்சி போயித்தான்  கறிகாய குடுக்குதுக. பேசாம ஐயாவ பெசன்ட் நகர் பீச்சுக்கு அனுப்பி வுட்டுடு யம்மா  ஐயா மாதிரி பெரிய மனுசாளுக வர்ற எடம் அவுருக்கு தோதா இருக்கும்." 
"அவுரு வீரப்பிரதாபங்கள கேட்டு கேட்டு அலுத்துப்போன  அந்த பீச் குருப்பு அவுர  ஓரங்கட்டிடுச்சு"ண்ணா ஜனா கிட்ட சொல்ல முடியும்?!      
"சரிப்பா... நான் பாத்துக்கிறேன்" பொதுவில் சொல்லிவிட்டு அந்த அம்மா உள்ளே போய்விட்டார்கள்.
"சார் நல்லாருக்கிங்களா? பொண்ணுக்கு கலியாணம் கூடி வந்திருக்கு.... சாரும் அம்மாவும் வந்து கொழந்தகள ஆசிர்வதிக்கணும்." ஆபிசில் வேலை பார்க்கும் சக ஊழியர்
"வாப்பா வாப்பா. நல்லாருக்கியா? வாங்கம்மா" ஆபிசில் அவருக்குக்கீழே வேலை பார்த்தவர். தம்பதி சமேதரராய் பத்திரிக்கை வக்க வந்திருக்கிறார்கள்....
"என்னப்பா ஆபீசெல்லாம் நல்லபடியா போவுதா?"
"என்னமோ போவுது சார்.... ஆனாலும் நீங்க இருந்தமாதிரி இல்ல சார்"
ரிட்டையர் ஆனவருக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டுமே!!
மனசு குளிர்ந்து போய் பத்திரிக்கையைப் பிரித்தவருக்கு
"ஆஹா இவன் எப்படி டவரி குடுக்கப்போகிறான்.?" என்ற உதைப்பு
பொண்ணு மாப்பிள்ளை பின்னாடி ஒரு டிகிரியையுங்காணாம். இவனுக்கும் பெரிய சம்பளம் இல்ல  ஓய்பும் வீட்டோட இருக் கவங்கதான். நாங்க ரெண்டு பேர் சம்பாரிச்சே பொண்ணு கல்யாணத்துக்கு முழி பிதுங்கிப்போனோம்
என்னப்பா பொண்ண படிக்க வச்சிரிக்கியா..?
ஆமா சார் அமெரிக்கன் கம்பனியில வேல பாக்குறா
நான் கூட அமெரிக்காவுக்கு டெபுடேஷன்ல போனனே ஞாபகம் இருக்கா..? 
என்ன சார் அப்புடி கேட்டுட்டிங்க? நாங்கள்ளாம் உங்கள வழி அனுப்ப ஏர்போர்ட்டுக்கு வந்தமே..?
"யப்பப்பா அமெரிக்காவுல என்னா உபசரணஎன்னா கவனிப்பு  5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சு... நம்ம இங்கிலிஷ்ல அவனுக அசந்துதான் போயிட்டானுக.... "
"ஒங்க கெட்டிக்காரத்தனம் யாருக்கு வரும் சார்?"
"பொண்ணை நல்லா படிக்க வச்சிருக்கலாமேப்பா பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி டிகிரி     ஒண்ணையும் காணாமே... ம்ம்?"
"அந்த கூத்த ஏன் சார் கேக்குறிங்க சார்? அப்பா அம்மா கஷ்டப்பட்டு  கடன ஒடன வாங்கிபடிக்க வச்சா  இந்த காலத்து பசங்க " படிப்பெல்லாம் பின்னாடி போட்டுகிட்டா அசிங்கம்பாங்குதுக... அதப்போட்டா அம்மா அப்பாவுக்கு பெரும இல்லியா சார்?"
சரி சரி வுடு பொண்ணு அமெரிக்கன் கம்பெனியில என்னா வேல பாக்குறா..?
"டெக்னிக்கல் கோஆர்டினேட்டரா இருக்கா சார். மாசம் ஒரு தடவ அமெரிக்காவுக்கு பறந்தே ஆகணும்... ஹில்டன் ஹோட்டல்ல  ஒரு ரூம் அவளுக்கு எப்பயுமே ரிசர்வ்டாம்."
சார் மூஞ்சியில் ஈ ஆடவில்லை. தாத்தா காலத்து சாவி தீர்ந்த கடிகாரமாக பங்கச்சர் ஆன கார் டயராக அமுங்கித்தான் போய்விட்டார்! காபி குடுத்து  உடல்நலம் விசாரித்து கல்யாண கதை கேட்டு சூழ்நிலையை சுமுகமாக்கினது  வீட்டுக்கார அம்மாவின் பொறுப்பாகிப்போனது உண்மை ! 
அவ்வப்போது  அவருக்கு  அழைப்பிதழ்கள் வருகையில் கோட்சூட் டை சகிதம் ஜம்மென்றுதான் கிளம்புவார். அன்றும் அப்படித்தான் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்க இருந்த விழாவிற்கு லிப்டிற்கு காத்திருக்கையில் அரைக்கால் டிரவுசரோடு பசங்க அவனுகளோடு கூட   பொம்பள பிள்ளைகள் ஏகத்துக்கும் சத்தம் போட்டுகிட்டு கூத்தும் கும்மாளமுமா பெரிய கூட்டம். முட்டியடிச்சி என்னோட லிப்ட்ல ஏறுதுக....நாசூக்கான ஹோட்டல்ண்ணு ஒரு விவஸ்தயே இல்லாம .... இது தெருவோர டீக்கடையா என்ன.?
எல்லாம் இந்த ஐடி கம்பெனிகாரனுக குடுக்கிற எடம் வேலையில சேந்த ஒடனே அஞ்சு லக்கத்துல  சம்பளம். அதெல்லாம் நான் பாக்கறதுக்கு ஜென்மமாச்சு ... ம்ம்....   பெருமூச்சுமட்டுந்தான்   அவருக்கு மிச்சமாச்சு.
"குட் மார்னிங் சார்..? சௌக்கியமா.. வாங்க வாங்க உள்ள வாங்க." நம் ஹீரோதான் அவர்
வீட்டு கேட்டில்.
"குட் மார்னிங் சார் ...நல்லா இருக்கிங்களா?  அவசரமா பேங்க் முட்டும் போகணும்."
"சார் பேங்க்காரன் நமக்காகத்தான் சார்  இருக்கான் அவனுக்காக நாம இல்ல. அப்படித்தான் ஒரு தடவ பாருங்க." 
வந்தவருக்கு என்னடா இது காலமகாட்டியும் இவர் கிட்ட வசமா மாட்டிகிட்டமேண்ணு ஒதப்பு. இவர் வெற்றி சரித்திரங்களை கேட்டு முடிக்க கொறஞ்சது அர மணி நேரமாவது ஆவும். அடுத்த தடவையிலிருந்து பக்கத்து தெரு வழியா போயிரணும்... கொஞ்சம் சுத்தானாகூட  பரவாயில்ல
ஒரு நாள் கோவிலுக்கு போயிட்டு வேப்பமரத்து காத்து வாங்கிக்கொண்டு ரெண்டு பேரும் திரும்ப வருகையில் "சார் சௌக்கியமா இருக்கிங்களா... நான் ஏர்போர்ட் ராஜதுரை. அப்பல்லாம் ஐயாவ ஸூட் கோட்டோட பாக்கும்போது இங்கிலீஷ் தொரமாதிரி கம்பீரமா நடையில  போவிங்க. நாங்க பவ்யமா ஒதுங்கி நிப்போம். எப்பிடியாச்சும் ஒரு தரம் ஐயா கைய  குலுக்குமுண்ணு பெரிய ஆச.... ஒரு நா மனச தெடப்படுத்திகிட்டு ஒங்குளுக்கு குட் மார்னிங் சொல்லி   கை குடுத்தேன்... சிரிச்சுகிட்டே ஐயா எனக்கு கை குடுத்தது என்னோட பெரிய பாக்கியம் சார்...
"சந்தோஷம் ராஜதொர... ஒங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் வாங்க வீட்டுக்கு வாங்க .... நிதானமா பேசலாம்." பர்சிலிருந்த 500 ரூபா நோட்டு  ராஜதுரைக்கு  அன்பளிப்பாய் ஆகிப்போனது
"தேங்க்ஸ் சார்.. கட்டாயம் வர்றேன் சார்"  சொல்லிக்கொண்டே ராஜதுரை ஸ்டார்ட்டிங்கிலிருந்த  பஸ்ஸைப்  பிடித்தார்!
"திருடன் சார்.. சரியான திருடன் சார். அந்த ஆளு.  கத உடுறதில கில்லாடி.  கொழயடிதான் .... கொஞ்சம் மின்னாடி வந்திருந்தா அந்த ஆள நாலு கேள்வி கேட்டிருப்பேன்...  ரூபா கை மாறினப்பதான் அவன அடையாளம் கண்டுகிட்டேன்.  
நானும் ஒருதடவ இவன்கிட்ட வசமா மாட்டிகிட்டேன் சார்சாமி புண்ணியத்துல எம் பர்சிலஅண்ணைக்கி இருந்தது பத்தே ரூபாதான்... தப்பிச்சேன் போங்க...
பேச்சில மயங்கின அவமானம் ஒரு பக்கம். பொண்டாட்டிக்கு முன்னாடி 500 ரூபாய கோட்டவுட்டது அத விடப்  பெரிய மூக்குடைப்பு!!
மனசுல பாரம் ஏற ஏற ஒடம்புக்குள்ள ஆயிரம் நோவுகள் ஒரு கட்டத்தில் அவர் நடையும் குறைந்து போய் வீல் சேர் அவர் ஆசனமாகியது வீடே நிரந்தரமாகிப் போயிற்று..
அவரது வங்கி கணக்கில் ஏதோ தகராறாம்... அவர் நேரடியாக வந்தால்தான் ஒழுங்கு பண்ண முடியுமாம். பேங்க் மேனேஜர்  பணம் எடுக்கப்போன வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.
"மரியாத தெரியாத மடப்பசங்க சீனியர் சிட்டிசன எவ்வளவு நேரம் காக்க வப்பானுக... உள்ள போன அவளும் காணாப் பொயிட்டா... எல்லா பாமும்தான்அப்பயே பில் அப் பண்ணி குடுத்தாச்சே " எரிச்சலோடு வீல் சேரில் உட்கார்ந்திருந்தார் அவர்!
"இல்ல நீங்க வந்து சொல்லுங்க.... நான் சொன்னா கோவிச்சுக்குவாரு ." வீட்டுக்காரம்மா பேங்க் மேனேஜரோட தர்க்கம் பண்ணிக்கொண்டே இவரிடம்  வந்தார்.
"வணக்கம் சார்சார் தப்பா எடுத்துக்கக் கூடாது.... சார் கையெழுத்து மாறிப்போயிருக்கு ...
சார் கைநாட்டுவச்சிட்டிங்கண்ணா எங்குளுக்கு ரொம்ப சௌரியமா இருக்கும்”
என்னத்த சொல்றான் இவன். ஒண்ணும் புரியிலையே....
"திரும்பச்சொல்லு.”      
மேனேஜர் கிளிப்பிள்ளையான அந்த நொடியில் அவர் துர்வாசமுனியானார்.
"எவண்டா நீ....  என் கையெழுத்த சரிபார்க்கிறவன்.? நான் என்னா படிச்சிருக்கேண்ணு தெரியுமாடா?   பழைய எஸ். எஸ்.எல்.சி யாக்கும்
நாண்ணு ஜனங்க காலர தூக்கிவுட்டுகிட்டு திரிஞ்ச அந்த காலத்துலேயே நான் எம்.ஏ. படிச்சவண்டா  ஆயிரமாயிரம் கையெழுத்த போட்டவண்டா நானு.... என்னப்போயி கைநாட்டு வைக்க சொல்றியா நீ? ஒன்ன கோர்ட்டுக்கு இழுத்து கிட்டு போய் சீப்பட வைக்கில.. 
இப்படியாக ரிட்டயர்டு வாழ்க்கையை சிக்குக்கோலமாய் ஆக்கித் தடுமாறுபவர்களை உங்கள் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம் 
"என் கடன் பணி செய்து கிடப்பதே." என் பணியில் இன்று  ஒரு மாற்றம் என் நோக்கில் மாற்றம் எதுவும் இல்லை.வாழ்க்கையிலேயே கிடைத்தற்கரிய போனஸ் இன்று என் கைவசம்! அணுஅணுவாய் இதை சுகிக்க வேண்டும்." என் எண்ணும் சுகவாசிகள் அதிர்ஷ்ட்டக்காரர்களே!           

Sunday, 14 October 2018

என்று தணியும் இந்த பாலிதீன் மோகம்


பப்பாளி பழத்துக்கு நான் துணிப்பையை நீட்டுகையில் என்னை அதிசயமாகப்பார்த்தார் பழக்கடைக்காரர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சுதாகரித்துக்கொண்ட அவர்   
"அம்மா....... வாங்குறவங்க எல்லாம் ஒங்களாட்டமே இருந்துட்டா ஒரு நாளைக்கி எனக்கு ஐநூறு ரூவா மிச்சம்." கை எடுத்துக் கும்பிட்டார்.
"பப்பாளிக்கி ஒண்ணு கொய்யாவுக்கு ஒண்ணு சப்போட்டாவுக்கு ஒண்ணு வாழைப்பழத்துக்கு  ஒண்ணு இது பத்தாதுண்ணு இதெல்லாத்தையும்  உள்ள போட்டுக்க இன்னொரு பையி .......இப்படித்தான் தாயி இன்னைய கத ஓடுது .....
 ஆனாலும்  அம்மா..... இந்த பாலிதின்னு பையி முட்டும் இல்லண்ணு வச்சிகிங்க என் வியாரம் முட்டும் இல்ல........ காய் கட அரிசி மளிகக்கட சொச்ச மிச்ச வியாவாரமும் படுத்துதான் போயிரும்." யதார்த்தத்தை விளம்பினார் அவர்.
அவர் சொல்லுவதும் சரிதான். பாலிதீன்பையில் ஒரு முடிச்சு போட்டு வைத்து விட்டால் சிப்ஸோ வற்றலோ எப்போதும் மொற மொறதான். மாளிகையும் அதற்குள் இருக்கும்போது எப்பவும் புதுசுதான்!
ஆனால் வைர ஊசி என்றால்  கண்ணைக் குத்திகொள்ள முடியுமா என்ன?
சுற்றுப்புற சூழ்நிலையை,பூமியை சமுத்திரங்களை  நீர்நிலைகளை மாசு படுத்திக்கொண்டே இருக்கும் இந்த வஸ்துவை நாம் தவிர்க்க வேண்டாமா என்ன?  
சூப்பர்மார்கட்டுகளை முடிந்த வரையில் தவிர்த்து  துணிப்பைகளை தூக்கிக்கொண்டு சாதாரண மளிகைக்கடைக்குப்  போகும் நான்  அங்கு மளிகை வாங்க வரும் மக்களுக்கு ஒரு விநோதப்பொருளே! "கடைக்காரர்தான் வேண்டிய பை குடுக்க தயாரா இருக்காரே..... நீங்க எதுக்கு வேல மெனக்கெட்டு வீட்லேருந்து பைய தூக்கிகிட்டுவர்ரிங்க?" பக்கத்தில் நின்று கொண்டு என் பை விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா வினாவினார்கள்.  பேச்சுப்போக்கில் அவர்கள் சென்னை புற நகர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணி புரிகிறார் எனத்தெரிந்து கொண்டேன். ஆகவே பிளாஸ்டிக் குறித்து என் கருத்துக்கள் அழுத்தமாகவே வெளியே வந்தது."நாம  சாப்புடுற சாப்பாடு ஆறு மணிலேருந்து எட்டு மணி நேரத்துக்குள்ள செரிச்சுப்போயிருது ஆனா நாம தூக்கி  எரியிற பிளாஸ்டிக் பைக பூமியில மக்கிப்போறத்துக்கு 400லேருந்து  1000 வருஷங்கள் ஆவுது. பூ வாங்குனா பையி காய் வாங்கினா
பையிண்ணு ஒரு நாளைக்கி எவ்வளவு பைகள நாம விட்டெறியுறோம்?" என்னுடைய செய்தியின் வேகம் ஓங்க ஓங்க அவர்களின் கிரகிப்பு அதிகமாவதை என்னால் உணர முடிந்தது. என் கையை இறுகப்பிடித்து "மேடம் எங்க இஸ்கூல் பசங்களுக்கு ஒரு நா இதப்பத்தி பேசுவிங்களா?" என்றார்கள்
"கூப்பிடுங்கள் கட்டாயம் வருகிறேன்."
செல் நம்பரை வாங்கிக்கொண்டவர்கள் வேலைப் பளுவில் என்னை மறந்துதான் போயிருக்க வேண்டும். ஆயினும் என் மனசுக்குள் ஒரு நப்பாசை.  பிளாஸ்டிக் தவிர்த்தலைப் பற்றி அவர்கள் மாணவருக்கு எடுத்துக்கூறி அவர்கள் பள்ளி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா  பூமியாக மாற்றியிருப்பார்களோ?!!
தடபுடலான வரவேற்பு! சென்னையிலேயே வெகு பிரபலமான மட்டன் பிரியாணி, சிக்கன்65!
சைவ சமயலும் வெகு தடபுடல்!
நெய் ஒழுகும் இனிப்புகள் இரு வகை! ஒசத்தியான ஐஸ்கிரீம்.
அதிருசியான சமையல்தான்!! குறை ஒன்றும் இல்லை!
பச்சைப்பசேலேன்ற இலைதான்! ஆனால் அது வாழை இலை அல்ல! பிளாஸ்டிக் இலை!  வெள்ளை வெளேரென்ற கிண்ணிகளில்தான் சிக்கன்......  ஆனால் அது நிஜக்கோப்பை அல்ல... தெர்மகோல் கிண்ணிகள்! இரு பிளாஸ்டிக் கிண்ணிகளில் நெய்யொழுகும் இனிப்புகள்! இன்னும் பெரிய தெர்மகோல் கிண்ணிகளில் பழத்துண்டுகளோடு  ஐஸ்கிரீம்!! இதோடு கூட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் அணிவகுப்பும்! 
எங்களுக்கு விருந்து படைத்தவர்களின் நிலைப் பாடுதான் விளங்கவில்லை. இந்த விருந்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு நூற்றில்  ஒரு பங்கு இல்லை.... இல்லை...... ஆயிரத்தில் ஒரு பங்கு செலவு செய்து தலை வாழை இலை பாக்குக்  கிண்ணிகள் சகிதம் விருந்தளிக்க முடியாமல் போயிற்றா...? இல்லை பிளாஸ்டிக்கின் பின் விளைவு பற்றிய  அறியாமையா...? இல்லை எதில் கொடுத்தாலென்ன  சாப்பாடு அருமையாக இருந்ததா என்ற ஒருதலைக்  கோட்பாடா.....?
நண்பர்கள்தாம்..... விருந்து உபசரணை செய்து கொண்டே அவர்கள் எங்கள் இலைக்கு வந்தபோது பலமாக தலையாட்டிவிட்டு வந்தோமே தவிர  அந்த குதூகலமான நேரத்தில் இதைப்பற்றி சொல்லும் தைரியம் வரவில்லை.... ஆனால் இன்னொரு கல்யாண பத்திரிக்கையோடு  அவர்கள் வீட்டிற்கு வந்தபோது  அவர்களைத் தெளிவு படுத்தினேன்.
 "ஆகா இந்த நல்ல விஷயம் எங்களுக்கு அன்று விளங்காமல் போயிற்றே...... இந்த கல்யாணத்தில் பாருங்கள்.... கட்டாயம் ஜமாய்த்து விடுகிறோம்... அதுமட்டுமில்ல......  எங்கள் சுற்றங்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த செய்தி போய் சேரத்தான் போகிறது......."
என் காதில் தேன் பாய்ந்தது!!
அந்த திருமண வரவேற்பில் தாம்பூலப்பைக்கு பதிலாக மண்டபத்திற்கு வெளியே மரக்கன்றுகள்!!
 "வேண்டிய கன்றுகளை எடுத்துக்கொள்ளுங்கள்." கைகூப்பி அவர்கள் செடிகளை தூக்கிக்கொடுத்த பாங்கு அந்த கல்யாணத்திற்கே கிரீடம் வைத்தாற்போல் இருந்தது!!   
நண்பர்கள் எங்களை அசத்திதான் விட்டார்கள்!
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பாலிதீன் பையில்  அன்போடு எங்களுக்குப் பூவும் பழங்களும்  கொண்டு வருகையில் அவர்கள் பிரியத்தை சுகிர்த்தாலும் மனதுக்குள் கூசிப்போவேன். அந்தபைகள் சேர்த்து வைக்கப்பட்டு  ஒரு முறை இரு முறை  பல முறை  உபயோகித்தில் இருந்து கொண்டேததான் இருக்கும். குப்பை போடும் கூடையில் கறுப்பு பாலிதீன் அணைகட்டி குப்பை வண்டியில் கொண்டு போய் கடாசும் பழக்கமும் என் வீட்டில் இல்லை. காய்கறி மற்ற உணவு சம்மந்தப்பட்ட கழிவுகள் என் சின்னத்தோட்டத்திற்கு எருவாகி விடுகிறது. வீட்டில் வேலை செய்பவர்களும் இந்த கோட்பாட்டுக்கு உட்பட்டு செயல் படுவதுமட்டுமில்லை அவர்கள் வீடுகளிலும் இதைப்பின் பற்றுவது என் மனதிற்கு இதமான விஷயம். சிறு துளி பெரு வெள்ளம்தானே?! 
அமெரிக்காவிலிருந்து வந்த நெருங்கிய சொந்தம் குடும்பம் அனைத்தும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு  மூன்று நாட்களுக்கு ஒரு அழகான இடத்தை ரிசர்வ் செய்திருந்தது. காலை சாப்பாடு அங்கேயே கொடுத்துவிடுவார்களாம். மதியமும் இரவும் வெளியே வாங்கிக்கொள்ளலாம் என்று திட்டம்.  "ஆகா   அக்கு தொக்கு இல்லாமால் கதை பேசிக் கொண்டு  சீட்டுகட்டு விளையாட்டோடு  சினிமா பார்த்து  செல்பி எடுத்து.....மூணு  நாளைக்கி......." யோசனையே சுகமாகத்தான் இருந்தது!!
"குட்மார்னிங்....... ஒங்க பிரேக்பாஸ்ட் ரெடி மேலே அனுப்பிவிடவா.." ரிசப்ஷனின் அழகிய குரல் கூப்பிட்டது. அவசரமாக பல்லை விளக்கிய கூட்டம் டைனிங் டேபிளை சுற்றிக் கூடித்தான் போயிற்று!!
தேவதை ஒத்த வெண் ட்ரேக்களில் அதே வெண்ணிற மூடியோடு பதினைந்திற்கு மேற்பட்ட தெர்மகோல் தட்டுகள் சீர்வரிசைபோல் வந்தபோது எனக்கு தலை சுற்றியது. கேசரி வடை இட்லிக்கு  தோதாக சாம்பார் தேங்காய் சட்னி காரச்சட்னி கூடவே பொடி எண்ணெய்....... இத்யாதிகளைக் கண்ட கூட்டம்  புகுந்து விளையாட ஆரம்பித்தது. நானும் தான் கூட்டத்தோடு கூட்டமாக!! ஆனால் சின்ன ஒரு அழுத்தத்தோடு........
 அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் சின்ன குப்பைத்தொட்டி ரொம்பி வழிந்தது. சுத்தம் செய்யும்  ஆளைக்கூப்பிட்டால் சாயங்காலமாகத்தான் சுத்தம் செய்வார்களாம். அந்த சாயங்காலமும் கழிய  அடுத்த நாள் காலை தெர்மகோல் தட்டுகளும் சேர்ந்து கொள்ள அங்கு பழைய வாடையோடு கூடிய ஒரு தெர்மாகோல் மலை எங்கள் உபயத்தால் உருவாகி இருந்தது!
என்னுடைய தம்பி பையன் ஒரு ஐ.டி. நிபுணன். இன்றைய மதிய உணவு அவனது என்றான். 
"இந்த மாதிரி சுடான ருசியான வீட்டு சாப்பாடு .... ஆபீஸ விட்டு வெளிய வந்தோம்ணா எங்குளுக்கு தெனமும் கெடைக்கிது அத்த....." என்றான்! கூடியிருந்த குழுவின் நாவுகளில் ஊற்றுகள் கிளம்பி வழிந்தது உண்மையே!
தூக்க முடியாமல் பை நிறைய சாப்பாடு வந்தது  ஒரு சாப்பாட்டை மூன்று பேர் பகிர்ந்துகொள்ள முடிவுபண்ணி அளவாகத்தான்வாங்கிக்கொண்டோம். டைனிங் டேபிளில் பிரித்து வைக்கையில் எனக்கு ஏதோ ஒன்று சுர்ரென்று உள்ளிறங்கி குடைசல் பண்ண ஆரம்பித்தது. சாதத்துக்கு சாம்பாருக்கு வத்தல் குழம்புக்கு ரசத்திற்கு தயிருக்கு அப்பளத்திற்கு ஊறுகாய்க்கு என  பல சைஸ் பாலிதீன் பைகள்  டேபிளை அடைத்து நின்றன!! கையேந்தி பவன் சாப்பாடாம்! சுவை என்னமோ நிறைவுதான். ஆனாலும் மனசு நிறைய  குற்ற உணர்வு...?
எல்லோரும் உட்கார்ந்தபோது பாலிதீன் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.... அதைத்தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் அங்கு யாருக்கும் வேறுபாடு இல்லை.... ஆனால் இந்த மூன்று  சாப்பாட்டை சுகானுபவமாய் மாற்றுவது எப்படி என்பதுதான் கேள்வி!  மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்ற கருத்து மூன்று வேளையும் டிரஸ் செய்து சின்னதுகளையும் கிளப்பி... ம்ஹும்.........
சாப்பிடுவதற்காக மட்டுந்தான் இங்கு கூடியிருக்கிறோமா  ......??!!!
கேள்வி எழுந்து நிற்க ஐடியா உடனடியாகக் கிடப்பில் போடப்பட்டது. 
 கடைசியில் அமெரிக்க மருமகளின் ஐடியாதான் நிலைத்தது. அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் பண்ணுகிறாராம். போன் செய்து பார்ப்போம் என்ற முயற்சியில் வெற்றி கிடைக்க பாலிதீன் கோட்டை ஒன்றை உருவாக்காமல் பெரிய தூக்குகளில் அறுசுவை உணவும் பாக்குத்தட்டுக்களும் எங்கள் கூடலை  இனிதாக்கியது!!
மாலையில் சென்னை மக்கள் வீடு திரும்பும் வேளையில் ரயில்வே ஸ்டேஷன்களில் பஸ் ஸ்டாண்டுகளில் நாம் அனைவரும் இந்த காட்சியை கட்டாயம் பார்த்திருப்போம். சின்ன சின்ன பாலிதீன் பைகளில் தினுசு தினுசான காய்கறிகள் அடைக்கப்பட்டு ஒரு பை பத்து ரூபாய் என நம்மைக் கூவிக் கூவி அழைக்கும்.." காய்கறியே பிள்ளைக திங்கமாட்டங்குதுக" என்ற கலாச்சார சிக்கலில்  பெற்றோர்கள் மாட்டிக்கொண்டிருக்கும் இன்றைய கட்டுப்பாடான குடும்பங்களுக்கு இந்த அளவு போதுமான ஒன்றே!
அன்றன்றைக்கு தேவைப்படுவதை பச்சென்று அன்றன்றைக்கே வாங்கிக்கொள்ளலாம்....பிரிஜ்ல அடைக்க வேண்டிய அவசியமும் இல்லை! புதுசுக்கு புதுசு....... சிக்கனத்திற்கு சிக்கனமும் கூட!!
இந்த சென்னை மாநகரின் பத்து கோடி மக்களில் ஐம்பது சதம் இந்த கண்ணோட்டத்தில் பதிந்து போயிருந்தால் பூமித்தாயின் கையறு நிலையில்   நாம்தான்  பேரழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நமது சிறிய நிறுவனத்தில் அனைத்து வருடக் கொண்டாட்டங்களும் 'குழுவின் வெற்றியே நமது' என்ற எண்ணத்தில் செயல்படும். பெற்றோர்களும் குடும்பங்களும் ஒன்று சேரும் அந்த ஒரு நாள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்த ஒன்று.
ஐநூறிலிருந்து எழுநூறு வரையான மக்களின்
கூட்டம். விழாவிற்கான திட்டம் மிக நுணுக்கமாக பாலிதீன் பொருட்களை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியும் காணும் அந்த நேரம் ஒரு சுகானுபவமே!
பரிசுப்பொருட்கள், அவைகள் கொடுக்கப்படும்  பைகள். விருந்து உபசாரம்  எல்லாமே பாலிதீன் உறவைத் தவிர்த்தே நிற்கும்! நாடகங்களும் இயற்கைமேல்  ஈடுபாடு கொள்ள வைக்கும் சீரிய  கருத்துக்களே! 
தமிழ் நாடு அரசு 2019 ஜனவரியிலிருந்து பாலிதீன் உபயோகத்தை வெகுவாகக் குறைக்க அரசாணை பிறப்பித்துள்ளது ஒரு அருமையான விஷயம். செயல் படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் அரசு திட்டமிடல் மிக அவசியம்.
நம் நண்பர்களில் அநேகர் பாலிதீனை தவிர்த்து வாழ முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்கள் வழிமுறைகளை இப்பதிவில் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு அது ஒரு முன்னோடியாக இருக்கும். பகிர்ந்துதான் பாருங்களேன்.