Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 17 November 2015

பை படுத்திய பாடு

வா மனு.. வா வா....... உக்காரு..... சும்மா வர்ர ஆளு இல்லியே  நீ..... என்னா விசேஷம் வீட்ல..?
ஆண்ட்டி எங்க வீட்ல இந்த வருஷமும் திரும்பவும் சர்ச்ச..... நீங்க பலகாரம் அனுப்பிச்சவொடனே அது ஆரம்பமாகிப்போவுது.......
வருஷா வருஷம் இந்த மனுஷி அதையேதான் அனுப்புது... இவுங்களுக்கு அந்த நெய்யுருண்ட முறுக்கு அதிரசம் வுட்டா வேற எதுவும் புதுசாத்தெரியாதாண்ணு பேசிக்கிட்டிங்களாக்கும்.......
ஐய்யயோ... ஆண்ட்டி.....தயவுபண்ணி ஒங்க மெனுவ மட்டும் மாத்திராதிங்க... இந்த மூணு அயிட்டமும் எப்படா வரும்முண்ணு பாத்துகிட்டு இருக்க ஆளுங்க நாங்க..... சர்ச்ச வெஷயமே வேற... ஒங்க ஏரியாவுக்கு நாங்க வந்து 5 வருஷமாவுது...... இந்த அஞ்சு வருஷத்லயும் நீங்க பலகாரம் அனுப்புற பையி ஒங்க அயிட்டங்களாட்டமே மாறவே இல்ல.... லல்லு சொல்லுது  இந்த பைக ஏதோ நிண்ணு போன கலியாணத்தோட தேங்கா பழம் பையாட்டம் இருக்கு... யாரு கண்டா...? வரதஷண பிரச்னயா இல்ல காதல் விவகாரமா... இப்படித்தான் ஏதாவது இருக்கும். ஆண்ட்டியும் அந்த கல்யாணம் பண்ணுனவங்களும் நண்பர்களா இருந்திருக்குணும் இவுங்க ப்ளாஸ்டிக்க பைய உபயோகிக்கமாட்டாங்க..... அதனால இந்த நல்ல பை வீணாப்போகுதேண்ணு நெறய பைய உபயோகிக்கிற அவுங்ககிட்ட இதயெல்லாம் குடுத்துருப்பாங்க.. அந்த வகையிலதான் நமக்கு அஞ்சு வருஷமா அதே பை வருதுங்குது அந்த துப்பறியும் பொண்ணு!
“நீ என்னப்பா சொன்ன?”
நான் சொன்னேன் “நீ சொல்ரதெல்லாம் சரியாவே இருக்கட்டும்.. ஆனா  நீ சொல்றமாரி  நிண்ணு போன கலியாணமா மட்டும் இருக்காது.... அந்த மாரிப்பைய யாரும் குடுக்கமாட்டாங்க....கல்யாண ஏற்பாட்ட கவனிச்சுகிட்ட ஏதோ ஒரு சொந்த பந்தம்  மானாவாரியா பைகள வாங்கி தள்ளியிருக்குணும்.
இந்த விஷயம் வருஷாந்திர பட்ஜெட் மாதிரி எங்குளுக்கு வருஷாந்திர வாக்குவாதமா போயிருது....... சரி அரிச்சிகிட்டே கெடக்குற இந்த சந்தேகத்தை இண்ணைக்கி பைசல் பண்ணிடணும்னுணுதான் ஒங்கள அநாவசியமா டிஸ்டர்ப் பண்ணுறேன்..”
“நீ எங்க வீட்டுக்கு எப்ப வந்தாலும் சரி எப்டி வந்தாலும் சரி எங்குளுக்கு சந்தோஷம் தான் மனு... என்னா ஒண்ணு லல்லுவும் வந்திருந்தா நான் சொல்லப்போற கதய எல்லாரும் பச்ச டீ குடுச்சுகிட்டே இன்னம் ஸ்வாரஸ்யமா ஆக்கியிருக்கலாம்....”
“வாழ்க்கையில பல பேர் கொள்கப் பிடிப்போட வாழுறாங்க.. அதனாலதான் வழிகாட்டியா இருக்காங்க..... நான் சொல்லப்போற பையனோட குடும்பம் ரொம்ப  சாதாரணமானது...... இந்த சாதாரண பையன் ஒரு சாதாரண தேங்கா பை வழியா நமக்கு ஒரு பெரிய கொள்கயயில்ல வெளிக்காட்டியிருக்கான்..... கதயக்கேளு.”
அவனோட அம்மா ஒரு விதவ..... கஷ்ட ஜீவனம்....அதோடயே தன் பையன  எஞ்சினியரிங் டிப்ளமா படிக்க வச்சிது.... டிப்ளமா முடிச்சதும் வேலைக்கி பொயிருவாண்ணு பாத்தா டிகிரி பண்ணிப்புடுறம்மா...... அத பண்ணிபுட்டா சுலபமா நெறயா சம்பளத்தோட வேல கெடச்சிரும்முண்ணான்.... கடன ஒடன வாங்கி படிச்சிட்டா வேலைக்கி போன ஒடன வட்டியும் மொதலுமா அடச்சிப்புடலாமுண்ணும் சொன்னான். தன் பையனப்பத்தி அம்மாவுக்கு நல்லாவே தெரியும். தொல்லதராத ஒரு பிள்ள..... வீட்ல பழய சோறு  கெடந்தாக் கூட  பேசாம தின்னுட்டு போறவன்....... அம்மா பையன படிக்கவச்சுது.....மூணு வருஷம் பல்ல கடிச்சிகிட்டு கட்டுசெட்டா இருந்து டிகிரிய கையல வாங்கியாச்சு. ஆனா சரளமா இங்கிலிஷ் வராத அவனுக்கு வேல கெடைக்கிறது சுலமாயில்ல... இந்தம்மாதான் தெரிஞ்சவங்க கொண்டவங்க காலப்புடிச்சி சுமாரான வேல ஒண்ணும் வாங்கிகுடுத்துடுச்சு... அடுத்தது கலியாணம்.....
கலியாணத்துக்கு முந்தின நாளு சாய்ங்காலம் வீட்ல தேங்கா பை வந்து எறங்குது...... அவனோட பிரண்டு பசங்கள்ளாம் பை போடுறதுக்கு கூட்டமா
உக்காந்திருக்கானுக.... பையன் கட்ட அவுக்குறான்... பையில “தங்கள் நல்வரவுக்கு நன்றி”ங்கிற வார்த்தைக்குக் கீழ அவனோட சித்தப்பா சித்தி பேரு அடிச்சிருந்தது.......
“அம்மா இங்க வா...” கொரல் ஓங்கிக்கெடந்துச்சு
“என்னாப்பா..?”
“இது என்னா வேல பண்ணியிருக்க....?
பையத்தூக்கி அம்மாகிட்ட  காட்டுறான்.
“ஏம்ப்பா... தேங்கா பையிதான்.......  பையி அழகா இருந்துச்சு......கொஞ்சம் வெல கூட..... பரவால்லண்ணு வாங்கிபுட்டேன்........நீதான் பத்திரிக்கையே வேணாமுண்ணுட்ட... கம்பீட்டர்ல் அனுபுச்சுபிடலாமிண்ணுட்ட…. சொந்த பந்தத்துக்கெல்லாம் பழங்காலம் மாதிரி நேரிடையா வெத்தல பாக்கு ஓல குடுத்துட்டோம்.. நீயி இம்புட்டுகொள்ள கஸ்டப்பட்டு படிச்சிருக்கியே அது ஊரு ஒலகத்துக்கு தெரியவாணாமா...? ஒனக்கு வாய்க்கப்போறவளும் பெரிய படிப்பில்ல படிச்சிருக்கா......இந்த படிப்பயெல்லாம் கலியாணப்பையில போடம நானு எங்குட்டுபோடுவேன்? சரி சரி அதுக்கு போயி இந்த நேரத்துல வேகப்படாத...... செலவப்பத்தியும் கவலப்படாத.........அம்மா ஜமாளிச்சிருவேன்....”
அவனுக்கு கோவம் இன்னம் பொத்துகிட்டுவந்துச்சு.....
“வெல கூட குடுத்து வாங்குன பையப்பத்தி நான் பேசுல எம் படிப்பப்பத்தியும் பேசுல...... அதுல வேற என்னா அச்சடிசிருக்க.......?”
“ஏம்ப்பா சித்தப்பா சித்தி பேருதான் ஒன் அப்பாவோட கூட பொறந்தவரு அவுரு ஒண்டிதான கெடக்காரு....”
ஓகோ வெஷயம் அப்புடிபோவுதோ......? அந்த அப்பா செத்தப்பறம் நம்மள பிச்சக்காரங்களா ஒதுக்கி வச்சாரே  அவுரு பேரு..... நான் காலேஜுக்கு போரதப் பாத்து கரிச்சிக்கொட்டினாரே அவுரு பேரு...... நீ இந்த வேல தான் ஒஸ்தி  இந்த வெல மட்டம்ணு பாக்காம எனக்காக ஒழச்சப்ப காறித்துப்பினாரே அவுரு பேரு..... என் கலியாணத்தில தேங்கா பையில இண்ணைக்கி ஏறி நிக்குணும்...... இல்ல......
நீ ஒம்பேர போட்டுல்ல அடிச்சிருந்திருக்குணும்.”
“இல்லப்பா...... அதுதான் மொற....... எம்பேரு மங்களமான
இந்த காரியத்துல...... வரப்புடாது”
“ஒம்மொறயத்தூக்கி குப்பையில போடு...... ஒம்பேர போடுறதுதான் எனக்கு மொறம்மா......மங்களம்மா.......  இங்க பாரு இந்த தேங்கா பைய நீ குடுக்கத்தான்போறண்ணா எனக்கு இந்த கலியாணமே வேணாம்... பேசாம பொண்ண கூட்டிகிட்டி போயி ரெஜிஸ்டர் கலியாணம் பண்ணிகிட்டு வந்துருவேன்” பையன் உறுதிபடச்சொன்னான்...
நண்பர்களோ “பரவால்லப்பா...  அம்மா மனச கஷ்டப்படுத்தாதே ......இத ஏன் பெருசு பண்ற? கொஞ்சம் உட்டுக்குடுத்து தான்போயேண்ணு” சொன்னதெல்லாம் அவன் காதில் ஏறவேயில்லை... ஒரே புடியாத்தான் நிண்ணான்.
அம்மா உடனடியாக அவங்களுக்கு வேண்டியப்பட்டஒருத்தருக்கு போன் பண்ணி இதைப்பற்றி புலம்ப “பையன் சரியாத்தாம்மா சொல்றான்.. சரி சரி கவலப்படாத.... நான் பாத்துக்குறேன்...” என்றவர் உடனடியாக பாரிசில் ஆண்டர்சன் தெருவுக்குப்போய் (சென்னை) பொத்தாம் பொதுவுல ”நன்றி” ண்ணுமட்டும் போட்டிருக்கிற பைய வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவரு  நண்பர்களைப்பார்த்து “மடமடண்ணு பை போடுற வேலயப்பருங்கப்பா..” என்ற கட்டளையைக்கொடுத்துவிட்டு “தம்பி ஒங்களோட ஒசந்த எண்ணங்கள மனசார பாராட்டுறேன்.....  ஒங்க எடத்துல நானே இருந்திருந்தாக்கூட இந்த மாதிரியான ஒரு முடிவ எடுத்திருப்பனாங்கறது சந்தேகந்தான்...... இந்தப் பைகள என்னுடைய  கலியாணப்பரிசா ஒங்குளுக்கு குடுக்குறண்ணு சொல்றதவிட இந்தபை வழியா  எனக்கு நீங்க பெரிய வாழ்க்கைப்பரிசு  குடுத்துருக்கீங்க.........ரொம்ப சந்தோஷம்.” என்றார்.  பையன் அவர் காலைத்தொட்டுக்கும்பிட்டான். நிறைந்த மனதுடன் அவரது பைகள் கலியாணத்தில் கலந்துகொண்டன. அச்சடித்த ஒசத்திப்பைகள் இன்று என் வசம்... போதுமா கத......!?
 “அப்பறம் மனு...... ஒரு விஷயம்.........இந்தப்பைகள் தீருறமுட்டும் ஒரு சாதாரணப்பையனின் அந்த கொள்கை பறைசாற்றுப்பை உங்களுக்கு வந்து கொண்டேதான் இருக்கும் .... ஆட்சேபணை ஒன்றும் இல்லையே?!!
நான் சிரித்தேன்!!

உணர்ச்சிவசப்பட்டுப்போனான்  மனு!!

Monday, 2 November 2015

குவிபிள் தீவு கல்லறையில் கும்குவாட் பழங்கள்

நவம்பர் 2ந்தேதி உத்திரிக்கிற ஆத்துமாக்கள் திருநாளின் போது நீங்கள் சென்னையின் குவிபிள் தீவு கல்லறைக்கு வர நேர்ந்தால், அங்கு ஒரு கல்லறை எல்லாவற்றையும் போல பூக்களால் அலங்கரிக்கப்படாமல் கும்குவாட் பழங்களால் நிறைக்கப்பட்டிருப்பதை பார்த்தீர்களென்றால் அதற்குப்பின்னால் அருமையான ஒரு கதை ஒன்று உறங்கிக் கொண்டிருக்கிறது என இன்று தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.

கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது. சுலபமான கல்கத்தா வாழ்க்கை...... தலையீடு ஒன்றும் இல்லாமல் மூளைக்கு சவால் விடும் பிரியமான வேலை... போதுமான சம்பளம்...... இருந்தாலும் சொந்தமாக ஏதாவது ஆரம்பிக்க உள்ளே ஒரு இடைவிடா குத்தல்...............

கையில் பி எஃப் பணம்....... மனசு கொள்ளா நம்பிக்கை.. இந்த முதலீட்டுடன் தான் எங்கள் சென்னை வாசம் தொடங்கியது...... ஒன்றுமே முடியாத கட்டத்தில் இரண்டு பேரின் படிப்பு என்ற நம்பிக்கை கவசம் காவல் சம்மனசுபோல் கூடவே நின்றது.
பிரச்னைகளுக்குக் குறைவில்லை.
வங்கியில், உற்பத்தி செய்த பொருட்களை(இந்தியா எங்கும்) விற்பதில் விற்ற பொருளின் பணத்தை வாங்குவதில்....... இப்படி ஏகம் ஏகமாக.......

இந்த மாதியான ஒரு  நிலையில்தான்  பொன்னைய்யா அங்கிளின் எதிர்பாராத நட்பு கிடைத்தது (அந்த நட்பு மலர்ந்த அபூர்வ சம்பவம் குறித்து ஏற்கனவே ஒரு ப்ளாகில் எழுதியுள்ளேன்.)

அங்கிள் வீட்டிற்கு வரும் நேரங்களில் இவர் தனது அன்றாட பிரச்னைகளின் பகிர்ந்து  கொள்ளுவார். அங்கிளும் அவர்களுக்குத் தெரிந்த அரசாங்க மற்றும் பத்திரிக்கை உலகின் பெரும் புள்ளிகளுக்கு இவரை அறிமுகப்படுத்தி இவர் ஆரம்பித்திருக்கும் கம்பெனியை முன்னுக்குக் கொண்டுவர தங்களால் முடிந்த உதவி செய்ய கேட்டுக்கொள்வார்கள்.
" ராஜா புலி வால புடுச்சிட்டிங்க...... ஏறி உட்காந்துதான் ஆவணும் அது உங்களால முடியும் என திண்ணமான  அவர் குரல் எங்கள் மனதில் பதிந்து போனது
ஒரு நாள்  நாங்கள் எல்லோரும்  பேசிக்கொண்டிருக்கையில் அவர்ராஜா என்னப்பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க?” என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்.
"என்னா அங்கிள் இப்டி கேட்டுட்டிங்க ஒங்க பேருக்குப்பின்னாலதான் மொழம் நீளத்துக்கு டிகிரி இருக்கே.. எவ்வளோ பெரிய பதவியில இருந்திருக்கிங்க... ரிட்டயர் ஆகியும் எமிரெட்டஸ் சயிண்ட்டீஸ் எங்குற கவுரம்..... என்ன கொற ஒங்களுக்கு..........”

"ராஜா இண்ணைக்கி நான் ஒங்குளுக்கு ஒரு கத சொல்லப்போறேன் கேளுங்க. அந்த வீட்ல அண்ணன் தம்பிகள்தான்....... படிப்பில எல்லாரும் சூரப்புலிகள்... ஒன்றைத்தவிர..... அம்மாவுக்கு இருந்த ஒரே கவலை இந்த ஒத்த பையன் மேலதான்..... மக்கு மாதிரி இப்டி தத்தியா . உக்காந்திருக்கானே....... கடவுளே எல்லாப்பிள்ளைகளையும் அருமையாக் குடுத்திருக்க.
இந்த ஒரு பையன ஒம்புள்ளையாவே வச்சுக்கும். இந்த மக்கு பயல எப்புடியாவது எஸ்எஸ்எல்சி பாஸ்பண்ண வச்சு ஒரு கெவுர்மெண்டு வேல வாங்கிக்குடுத்துடும்....... இதுதான் நீ எனக்கு பண்ணுற பெரிய உபகாரம்ணு 24 நாலு மணி நேர வேண்டுதல் அந்த அம்மா மனசுல......
 அந்த மக்குப்பயலும் தட்டி கொட்டி எஸ்எஸ்ல்சி பாஸ் பண்ணித்தொலச்சிட்டான்.... அண்ணல்லாம் காலேஜுல படிக்கிறாங்க நானும் போரேண்ணு ஒரே புடியா நிண்ணான்.... சரி அவன் ஆசையத்தான் கெடுப்பானேன்ணு காலேஜுக்கு அனுப்பி வச்சாங்க......
காலேஜுக்குள்ள நொழஞ்ச அந்த மர மண்டய எந்த  சாமி வந்து தொட்டுச்சுண்ணு தெரியில.. அந்தப்பயல ஆராலயும் புடிக்க முடியில..... பிஸ்சி படிச்சான் எம்எஸ்சி படிச்சான்.... அதிசயத்துக்கு மேல அதிசயமா அவனுக்கு அமெரிக்காவுல மேல் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் வேற கெடச்சுது......
அந்த மக்குப்பய யாருண்ணு நீங்க இப்ப தெரிஞ்சிகிட்டு இருப்பிங்க......... அவந்தான்..... அந்த மக்கு அங்கிள்தான்...  பெரிய தோட்டக்கல நிபுணரா இண்ணைக்கி ஒங்க முன்னால ண்ணு சொல்லிட்டு கைகொட்டி சிரித்தார்

"போங்க அங்கிள் எங்கள உற்சாகப்படுத்த ஒங்களயே மட்டம் தட்டிக்காதிங்க என்றேன் நான்
" அம்மா இது உண்மையிலும் உண்மம்மா. எங்கம்மா வேண்டிக்கிட்ட மாதிரி நானும் ஒங்குளுக்கு வேண்டிக்கிறேன்...... இப்ப இருக்க பல தினுசான அடப்பெல்லாம் விடுபட்டு  நீங்க ஓகோண்ணு இருக்கத்தான் போறிங்க பாருங்க என்றார் அவர்.

அவர் வாய் முகூர்த்தம்...... ஃபேக்டரி கட்டினோம்...... அங்கிளே முன்னின்று அழகான தோட்டம் ஒன்று அமைத்துக்கொடுத்தார். அந்த தோட்டத்தின் நடுவே இரண்டு கும்குவாட் செடிகள்.
"அங்கிள் என்ன செடி இது..?”
"அம்மா இது பேரு கும்குவாட்... இது தென் கிழக்கு ஆசியாவின் அதிர்ஷ்ட மரம்....ஒரு தடவ தோட்டக்கலை மகாநாட்டுல சில நிபுணர்கள் இந்த கும்குவாட் தென்னிந்தியாவில் வளரவே வராது என்று சொன்னார்கள் அதையே நான் ஒரு சாலஞ்சாக எடுத்துக்கிட்டு பக்குவமாக வளர்த்து நிறைய கன்றுகளை உற்பத்தி பண்ணினேன் தெரிந்தவர்கள் நண்பர்கள் போவோர் வருவோர்க்கெல்லாம் எல்லாருக்கும் அள்ளிக்குடுத்தேன். தென் இந்தியாமுழுவதும் அது வேர் புடிக்கிணுமில்ல.........இண்ணைக்கி ஒனக்கும் இரண்டும்மா.... இது ஆயிரம் ஆயிரமா காச்சு இந்த எடத்தையேயே அழகு பண்ணப்போவுது பாரு.... அங்கிளின் வாக்குப்படியே.. எல்லாம் நடந்ததுபூக்கும் காலத்தில் எம்மிடத்தை அவைகள் மணத்தால் நிரப்பின! அங்கிளைப் போலவே வருபவர் போவோர் மற்றும் ஆசைப்பபட்டவர்க்கெல்லாம் கன்றாய் பழமாய் பழச்சாறாய் ஊறுகாயாய்  அந்த மரங்கள் அக்ஷய பாத்திரமாய் அணையா அடுப்பாய் கொடுத்துக் கொண்டேதான் நிற்கின்றன!

அங்கிள் பி.டபிள்யு.எக்ஸ்.பொன்னைய்யா நம்மோடு இன்று இல்லை ஆனால் கும்குவாட் என்றாலே அவர் தவிர வேரு எவருமில்லையென யாதுமாகி மகிழ்ந்து உயர்ந்தே நிற்கிறார்!

அவர்கள் கல்லறைக்குச் செல்கையில் பொங்கி வரும் பழைய நினைவுகளோடு அவருடைய பழங்களாலேயே அவர் நினைவுச் சின்னத்தை அலங்கரித்து எங்கள் வாழ்வின் ஊக்குவியான அவருக்கு அன்பையும் நன்றியையும் உரித்தாக்கிவிடுகிறோம்!