Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 18 February 2015

அபூர்வப் பயணம்

2011ம் ஆண்டில் "நாநா 100" (அப்பா 100) என ஒரு மலர் வெளியிட்டு எங்கள் அம்மா நாநாவின் எடுத்துக்காட்டான வாழ்க்கையை நாங்கள் 10 பிள்ளைகளும்,  அவர்கள் பாசத்தைப் பகிர்ந்துகொண்ட எங்கள் பிள்ளைகளும் பல கோணங்களில் பகிர்வு செய்தோம். புத்தகத்தோடு கூட ஆளுக்கு ஒரு பொருளாய் ஒரு பரிசுப் பை போட்டு அவர்கள் பிறந்த ஊரான இடங்கண்ணி சொந்தங்களுக்கும் கூடி வந்த உற்றார் பலருக்கும் அளித்து மகிழ்ந்தோம். அந்த பரிசுப் பைக்குள் உலகப்பட சுருள் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.  தம்பி அதையும் ஒரு பரிசாக சேர்த்திருந்தான். “நாநாவுக்கு இந்த கிஃப்ட் ரொம்ப புடிக்குமில்ல”
 பழைய நினைவுகளெல்லாம் திரண்டு உருண்டு நிற்க அப்படியே அவனை சேர்த்தணைத்துக்கொண்டேன்! அந்த உலகப்படம் என்னில் ஒரு அபூர்வக்கதையை கதையை வெளிக்கொணர்ந்து நிறுத்தியது!
“நாநா எங்கயாச்சியும் ஊருக்குக் கூட்டிகிட்டு போங்க...........
"வருஷா வருஷந்தான் எடங்கண்ணிக்கிப் போரமில்லமா" சைக்கிளுக்கு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டே நாநாவின் பதில்
“ம்க்கூம் பெரிய எடங்கண்ணி தடுக்கி உழுந்தா அந்த துக்குளியோண்டு சொந்த கிராமந்தான்;........... மாட்டு வண்டியில ....... வைக்கமேல, போன ஜென்மத்தில தொவச்ச ஜமுக்காளத்துமேல உக்காந்துகிட்டு மண்ணு ரோட்டு ஆச்சலிலெ... மொளகழியில முட்டி மண்டைய பேத்துகிட்டு, வைக்க நாத்தத்துல வாந்தி எடுத்துகிட்டு.........”
எரிச்சலாக வந்தது

“மாமா வீட்ல  வருஷம் தவறாம வேளாங்கண்ணிக்கி போறாங்க......... அப்.....ப்பா எவ்வளவு தூரம் ரயில்ல.... எவ்வளவு ஸ்டேஷன்க வரும்... எவ்வளவு வேடிக்க பாப்பாங்க........!!!”
இதல்லாம் மனசுக்குள்ள ஓடும ஒழிய வாயில வார்த்தையா வராது... வரவும் கூடாது.
சத்தமே ஒண்ணும் வரலியே என்று நாநா என்னையும் என்னோடு கூட்டு சப்போர்ட்டிற்கு சேர்ந்திருக்கும் ரெண்டு தம்பிகளையும் பார்ப்பார்கள்.
பஞ்ச்சர் முடித்து கையைத்துடைத்துக்கொண்டே"ஊருக்குத்தான போவுணும்?"
ஆமா நாநா தஞ்சாவூருக்கு போலாம் நாநா ப்ரதீஷர் கோயிலு ரொம்ப பெருசாம் நிழலே கீழ உழுவாதாம்..... போலாம் நாநா........
"ப்ரதீஷர் (நக்கல் அவுங்களுக்கு..!!) கோயில் கெடக்குட்டும்மா, அத விட ஜோரான எடத்துக்குப் போவலாமா!!?”
"திருச்சி மலைக்கோட்டைக்கிகூட்டிகிட்டு போப்போறாங்களோ?”
மலைக்கோட்டை மேல ஏறிட்டம்ணா காவேரி ஆறு தெரியுமாம், கொள்ளடமும் தெரியுமாம், சீரங்கத்து கோபுரம் எல்லாம் தப்புடியில நிக்கிற மாதிரி தெரியுமாம். சுத்துபக்கத்து ஊரெல்லாம் இந்தப்பக்கம் தஞ்சாவூர் முட்டும்அந்தப்பக்கம் மதுரை முட்டும் தெரியுமாம். மேல இருக்க உச்சிபுள்ளியார் கோயில்ல அடிக்கிற காத்து ஆளயே தூக்கிகிட்டு போயுருமாம் ஒருத்தருக்கு ஒருத்தர் கெட்டியா கைய புடிச்சிகிட்டு கும்பலாத்தான் நிக்கிணுமாம். திருச்சிவாசியான மாமாமகன் மே மாசம் எடங்கண்ணிக்கி வந்தா கதைதான் எங்களுக்கு!
மனசு கும்பகோணத்திற்கும் திருச்சிக்கும் நடுவே உள்ள ஸ்டேஷன்களை எண்ணுகிறது
தாராசுரம், சாமி மலை, சுந்தரபெருமாகோயில் அப்பறம் அப்பறம்..........
பாவநாசம், பண்டாரவாடை, பசுபதிகோயில்.......
l
திடீரென்று தம்பி “செவுத்தியார் கோயில்திருநாவுக்குக்கு எப்பக்கா பாவநாசம் போவோம்?”
தம்பி மேல் எரிச்சல் வந்தது.
நாம் திருச்சிக்கு அடி போடும் போது இவன் என்னாத்துக்கு தவ்வளோண்டு தூரத்தில இருக்க பாவநாசத்துக்கு குறுக்குசால் ஓட்டுறான்?
இடங்கண்ணியையே பயணக்கணக்கில் சேர்த்த நாநா வருஷா வருஷம் செபஸ்தியார் திருநாளுக்கு பாவநாசம் போவதையும் இந்தக்கணக்கில் கட்டாயமாக  சேர்த்துவிடுவார்கள்.
" இருதயம் எங்க இருக்கப்பா? ஷெல்ஃபிலருந்து அந்த பெரிய அட்லாசை எடுத்துகிட்டு வரியா? எனக்கு புரிந்துபோய்விட்டது.
 தஞ்சாவூர்........ கெடையாது .............திருச்சி……..? கெடையவே கெடையாது.
"போங்க நாநா நீங்க எப்பயும் இப்புடித்தான்......." கோரசாக சிணுங்குகிறோம்

" தஞ்சாவூரு 40 மைலு , திருச்சிக்கி இன்னொரு 60 மைலு சேத்துக்க மொத்தம் எவ்வளவு மைலு...... 100 மைலுதாம்மா……. இப்ப பாரு நாம்இண்ணைக்கி   6152 மைல் தூரத்துக்கு ரயில்ல போப்போறோம்……….. சரியா?
 இங்கேருந்து திருச்சி போறதுக்கு சாய்ங்காலம் ஆவும் ஆனா நம்ம எத்தினி நாளு ரயில்ல போப்போறோம் தெரியும்மில்ல. ஏழு  நாளு…………..!
ஏழு  நாளு……… ரயில்ல.... அப்ப்பா...........  எவ்வளவு ஸ்டேஷன்க வரும்... எவ்வளவு வேடிக்க  பாக்கலாம்..........  ரயில்லயே தூங்கலாம்............
" அக்கா தூங்குனா தூங்குட்டும் நான் தூங்கவே மாட்டேன் நாநா”
சின்னவனும் அதையே ஆமோதித்தான்
 அந்த ரயிலுக்கு என்னா பேர் தெரியுமா?
நமக்கு தெரிஞ்சதெல்லாம் வெளியே வருகிறது

போட் மெயிலு....?
ராமேஸ்வரம் ஃபாஸ்டு பாசஞ்சர்..........?
“ட்ரான்ஸ் சைபீரியன் ரயிலு.... என்னா அழகான பேருல்ல!”

அட்லாஸ் விரிபடுபடுகிறது. “ரஷ்யா ரொம்ப பெரிய நாடு.”  நாநாவின் நீட்டு விரலோடு எங்கள் கைகளும் சேர்ந்து கொள்கின்றன. அட்லசில் இந்தியாவை வலம் வந்த அந்த கூட்டுக் கரங்கள் அடுத்தாற்போல் ரஷ்யாவை சுற்றி வருகின்றன.
“அப்பா எவ்ளோ பெருசு அந்த ஊரு!!” சின்னவர்
“ஊரு இல்லப்பா நாடு... பெரிய நாட்டுக்கு பெரிய ரயில் வேணுமில்ல. அதுதான் ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்!
கையைப்பிடித்து "என்னா ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்ல ஏறி உக்கந்துரலாமா ?" என்கிறார்கள் நாநா …மாஸ்கோவுல ஏறிட்டோம், குளூரு நடுக்குதில்ல……… போத்திக்குவோமா? பெரிய போர்வைக்குள் எல்லோரும்………..கூடாராமாய்........
"அங்க பாத்திங்களா மாஸ்கோவுல இருக்க பெரிய பெரிய கோயிலுக,
ஜன்னல் வழியா தெரியுதா ஒனக்கு? சின்ன தம்பியை தூக்கிக் காட்டுகிறார்கள்.
“ஊம்ம்ம்ம்ம் ஆமா நாநா” தலையை வேகமாக ஆட்டுகிறான் அவன்
 “பெரிய பெரிய வெங்காயம் மாதிரி அந்த கோபுரங்கள.....”.
 வெங்காயத்தை கோயிலாய் கற்பனை பண்ணி பண்ணி மனசு முடியாமல் தவிக்கிறது
நம்ம வீடு பெருசு இருக்குமா வெங்காயம்?
அதவிட பெருசு......
 சரி சரி சாப்புடலாமா, இந்த பாரு சாப்பாட்டுதட்டெலாம் வந்துருச்சு
“பாத்தியா...... ரொட்டி”
"ஐயய்ய ரொட்டிய ஆரு சாப்புடுவா அத காச்ச காரகாரன்ல திம்பான்.... 
குழந்தை பிறந்திருக்கும் சமயத்தில் அம்மாச்சி அம்மாவுக்கு வளைய ரொட்டியை பாலில்  நனைத்துக் கொடுப்பது ஞாபகத்துக்கு வந்தது. அப்ப அம்மாவ பாத்தா எங்குளுக்கு பாவமா இருக்கும்.
ரயிலுல  ஏழு நாளைக்கும் ரொட்டிதான்
அம்மா பாவநாசத்துக்கு தயார் செய்யும் கேசரியும் உளுந்து வடையும் கெட்டி தேங்கா சட்டினியும்...... பாவ நாசத்து ஸ்டேஷன் ஆலமர அடி பிக்னிக்கும்...... எச்சிலை முழுங்கிக் கொண்டேன்
ஏழு நாளைக்கி  ரொட்டி மட்டுந்தான் ஜீரணிக்க முடியவில்லை.

"வேற என்னா பண்ணலாம்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வெண்ணய தடவிட்டோம்ணு வச்சிக்க........ அதோட ஜாம் சேத்துகுவோமா ஜோரா இருக்கும்!!!”

“ஜாம்ணா?”
“அம்மா வெல்லம் போட்டு மாங்கா பச்சடி பண்ணுவாங்கள்ள அந்த மாதிரி”
“கறி சூப்பு.... புடிக்குமா?”
ஏகமனதாய் தலையை ஆட்டுகிறோம்
நெஞ்செலும்பு சூப், மொளகு சோம்பு சின்னவெங்காயம் போட்டது.... நாக்கு ஊறுகிறது

நாநா ரன்னிங் கமெண்டரியில் ரயில் வேகமாக ஓடுகிறது.
“திருச்சிமாரி பெரிய பெரிய ஸ்டேஷனே இருவது முப்பது இருக்கும்.”
“யப்பாடி...............”
“இப்பபாருங்க  நம்ம பாலைவனத்துக்குள்ள நொழயப்போறோம்........”..
“வெறும் மணலா பொட்டக்காடால்ல இருக்கும்............. பேரீச்ச மரங்கள் தான் இருக்கும்”
“ரொம்ப வெயிலு அடிக்குமே...........”.
இது...... வேறமாதிரியான  பாலைவனம்......... பனிப்பாலைவனம்.......... எப்டி வெள்ள வெளேர்னு இருக்கு பாத்திங்களா............. பச்ச மரங்ககூட வெள்ளையா இருக்கு, குளூரு புடிங்கித்தின்னுபுடும்!!!
 ஆருக்காச்சும் வெள்ளக்கரடி கண்ணுல படுதா பாருங்க
கதையில் ஒன்றிப்போய் கண்ணை சுருக்கிக்கொண்டு அட்லாசைப்பார்க்கிறோம்
“தெரியில  நாநா அது தூங்கப்பொயிருக்குமோ............?”
“ஆமாம்பா....அது சரியான கும்பகர்ணன். ஆறுமாசத்துக்கு ஆத்தில வர்ர செவப்பு சாலமோன் மீனையெல்லாம் ஒரு நாளைக்கி முப்பது நாப்பதுண்ணு கணக்கு பண்ணாம தின்னுகிட்டே இருக்கும்.அப்பறம் ஐய்யா சாமி ஆறு மாசத்துக்கு ஜம்முண்ணு தூங்கப்பொயிடுவாரு!”
“நம்ம கூட அப்புடி தூங்குனா ஜாலியாத்தான் இருக்கும். ஆறு மாசத்துக்காவது காலையில அஞ்சர மணி பூசைக்கி போறதுக்கு யாரும் எழுப்பமாட்டாங்க. ஆறு மாசம் ஸ்கூலுக்குப் போவேணாம்
 ஆனா அந்த ஆறு மாசம் கிறிஸ்மஸ் சமயத்திலயும் வேணாம்.........
முழுப்பரிட்ச லீவ்லயும் வேணாம்.........”
“என்னா எங்க இருக்கிங்க..... விளாடிவாஸ்டாக் வந்துருச்சு........ இறங்கணுமில்ல.........” ரயில் கூவி மெள்ள மெள்ள  நிற்கிறது.
“ரஷ்யாவின் மேற்கு  மொனையிலருந்து கெழக்கு மொன முட்டும். ஏழுநாளு போயிமுடிச்சுட்டோம்................... மாகி நீ சொல்லு........ மாஸ்கோவிலேர்ந்து என்னான்னா ஸ்டேஷன் வந்துச்சு?”
“நாநா மறந்து போச்சே”
“சரி ஞாபகம் வச்சிகிறமாரி  நாலு ஸ்டேஷன் சொல்லிதருட்டா”
மாஸ்கோ ஓம்ஸ்க் டோம்ஸ்க் இர்குட்ஸ்க் விளாடிவாஸ்டாக் பூதக்கண்ணாடியை வைத்து சின்ன எழுத்துக்களை எங்கள் மந்திரவாதி பெருசாக்கிக் காட்டுகிறார்
மாஸ்கோ ஓம்ஸ்க் டோம்ஸ்க் இர்குட்ஸ்க் விளாடிவாஸ்டாக் என்று லத்தீன் மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டே சில்லு விளையாட ஓடுகிறோம்!
இந்த மாதிரி ஊருக்குப்போவதற்கு பித்து பிடித்து திரியும்  நாட்களில் வங்கக்கடலிலும் இந்து மகா சமுத்திரத்திலும் ஏன் அட்லாண்டிக் தாண்டி கூட கப்பலில் பயணித்திருக்கிறோம்!!
வருடங்கள் ஓடிப்போயும்  உலகத்தின் பல இடங்களை  நிஜமாகவே சுற்றி வந்த பின்பும் இந்த “மாஸ்கோ ஓம்ஸ்க் டோம்ஸ்க் இர்குட்ஸ்க் விளாடிவாஸ்டாக்” ....... மந்திரம்...............மனசுக்குள்ளே ஐக்கியமாகித்தான் கிடக்கிறது!! 

Thursday, 5 February 2015

காஜா மலையில் காலை நடை

“ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப கூட இவங்க வாக்கிங்க மறக்குலபாரு" 
போகி றபோக்குல நடைப்பிரியர்கள் கூட்டம் சொல்லிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றது சந்தோஷமாய் இருந்தது..
விசாலமான ஹோட்டல்........
 அதற்கேற்றமாதிரி வெளியே விசாலமான ரோடு. ரேஸ் கோர்சாய் இருந்து அண்ணா ஸ்டேடியமாய் மாறிவிட்ட அரங்கம் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அரசு அலுவலகங்கள், மரங்கள்நிறை பெரிய அலுவலர்களின்  பங்களாக்கள்.
 இன்னும் அசோகர் கட்டளையை மீறாமல் சாலையின் இரண்டு பக்கங்களும் மரங்கள் நட்டிருந்தார்கள்!!
 இதைவிட என்ன வேண்டும் நடைப் பிரியர்களுக்கு?! 
"இந்த பங்களாவில் குடியிருந்தால் ஜோரா இருக்குமில்ல" என் பகிர்வு " அப்பப்பா..... எவ்வளவு கொள்ள மரம்.........!!
" சரிம்மா...... ரிட்டயர் ஆன கையோட ஃப்ளாட்டு நெருக்கடியையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்க" யதார்த்தமாய் அவர் பதில்
நடந்தவர்கள் முக்கால்வாசிப்பேர் தலையை மூடி இருந்தார்கள். குறைந்த பட்சம் காதடைப்பானாவது போட்டிருந்தார்கள். ஓட்டமும் நடையுமாகப்போகிற வருங்கால விளையாட்டு வீரர்கள் இதில் சேர்த்தியில்லை. “ம்ம்ம்... இது என்னா பெரிய பனி...... சென்னையைவிடவா?” என மதர்ப்பாக  நாங்களும் அதில் சேர்த்தியில்லை.
புர்க்கா போட்ட பெண்மணிகளும் ரோட்டில் போட்டி போட்டு நடந்தார்கள்.
" வணக்கம் நாயகத்தம்மா எப்டி இருக்க?" ஒரு முஸ்லிம் முதியவர் தஞ்சாவூர் புர்க்கா போட்ட வயசான அம்மாவுக்கு காலை வணக்கம் தெரிவித்தார். பக்கத்தில் சென்ற எனக்கும் கூட ஒரு வணக்கம் கிடைத்தது!!
இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஒரு பொது நியதி உண்டு. தலை நிமிர்ந்து இருக்கவேண்டும்,ஒரு நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைக்க வேண்டும், கால்  எடுத்து வைக்கும் வேகத்திற்கு இரு கைகளும் வீசப்பட வேண்டும் இன்ன பல
ஆனால் எல்லா நியதிகளுக்கும் மேற்பட்ட செயல் உலகத்தில் நடந்து கொண்டுதானே இருக்கிறது!! 
இடது கையையும் இடது காதையும் ஒருக்களித்துக் கொண்டு தாங்களாகவே சிரித்துப்பேசி செல்பவர் அங்கு ...........நிறையவே!
பொதுவாக தமிழர் நமக்கு கதை கேட்பதும் பாட்டுகேட்பதும் பிடித்தமான காரியங்கள். "நாங்கள் அசல் தமிழர்களே" என வாக்மேனில் “சுப்ரபாதமோ, செந்தமிழ் தேன் மொழியாளோ" கேட்டு…..  சுகமடைந்தவரும் அங்கு.....நிறையவே! 
 சின்ன அலுவலகத்தின் போர்டு கண்ணில் படுகிறது.  நிமிட சிரிப்பை எங்களால் அடக்கத்தான் முடியவில்லை. "டெல்லி வரி" என்று உரக்கச்சொன்னது அந்த போர்டு!!
பழைய காலத்து பட்டயதார்கள் போல டில்லிக்கு திருச்சியிலிருந்து  விசேஷ வரி வசூலிப்பவர்களோ இவர்கள்?!! 
காத்து சிலுசிலுப்பில் கையைவீசிக்கொண்டு இவரைவிட ஒரு தப்படி முன்னே சென்ற என்கால்கள் திடீரெனெ பிடறின;
வீசிய என்கைகள் இவர் கையை இறுக்கின! பின்னால் ஒளிந்து போனது என்வீர நடை! பழைய காலத்து நாய்க்கடி தழும்பு சிலிர்த்து உயிர் பெற்றது!....... 15 க்குக் குரையாத நாய்கள் ஒரு இடத்தில்... ஒரே குழுவாய்...........
"இது என்ன திடீர் பாசம்......கை இறுக்கல் பாசம்....?" என அதிசயித்த கணவர் நாய்களைப்பார்த்தவுடன் "ஓ இதுதான் சங்கதியா" என  சிரிக்க  ஆரம்பித்துவிட்டார்.
"முன்னால் முப்பது பேர் போராங்கள்ள, அவங்கெள்ளாம் முட்டாள்களா? அதுக பாட்டுக்கு செவனேண்ணு தியானத்துல இருக்குக; ஒங்கூட நடக்கிறத விட நல்ல வேல செஞ்சுகிட்டு இருக்குக .... நீ பாட்டுக்கு சைட்ல பாக்காம நேரா நட.... 
தர்க்கம் எதுவுமில்லாமல் அந்த ஒரு முறை அந்த உத்தரவைக் கடைப்பிடித்தேன்!
முக்கில் திரும்புகிறோம்..........கைலி கட்டிக்கொண்டு இருவர் தலை நிமிராமல்பேசிக்கொண்டுசிறு நடையாய் செல்கிறார்கள்
"ஏம்ப்பா இடிச்சிகிட்டு உடம்புல ஒரு காயம் பட்டுடுச்சுண்ணா அத போட்டு குத்திக் குத்தி ரணமாக்குவியா இல்ல மருந்து போட்டு செத்த நேரம் ஆறுறதுக்கு வுடுவியா......? அதே மாரிதான் நம்ம மனசும். பிரச்சனை வந்துருக்கு.....அத ஊதி ஊதி பெரிசாக்கிறாதே.......
அந்த நெனப்ப கொஞ்சம் தள்ளிவுடப்பாரு, கோயில் கொளங்களுக்குப்போ.. மனச அமைதிப்படுத்துற வழியப்பாரு... நான் கெளம்புறேன்  கட தொறக்க நேரமாச்சு.... இனிமே நாள மக்யா நாளுதான் இங்கிட்டு வருவேன்….. ரெண்டு முகூர்த்தம்……. ஒண்ணு கரிய மாணிக்கம்…….. இன்னொண்ணு வெராலிமல”
 வேதாந்தம் புஸ்தகத்தில் படிப்பது  ஒருபுறம், ஆனால் வாழ்க்கையே வேதாந்தமாக....... இது எல்லோராலும் முடியும் ...  அருமையாக  சொல்லிப்போய்விட்டார் அந்த கடைக்காரர்!
நடக்கையிலேயே  தெரிஞ்ச செடியாக இருக்கிறதே என்று உற்றுப்பார்க்கிறேன்.
ஆகா துண்ணுத்திப்பச்சிலை.......... குனிந்து அதன் சின்னக்கதிர்களை உருவி எடுக்கிறேன். அவருக்கும் பங்கு கொடுக்கிறேன். கையில் வைத்து நிமிண்டுகிறோம்........ வாசனை.... சுகமாக முகத்தில் அப்பிக்கொள்கிறோம்.........
தொப்பிகள் மஃப்ளர்கள் போதாதென்று ஹெல்மட் அணிந்த நடைப்பிரியர் எதிர்த்தாற் போல! 
பனிக்கு போட்டிருக்கிறாரா இல்லை ஹெல்மட்டின் பத்திரத்திற்குப் போட்டிருக்கிறாரா.....!?
மக்கள் தலையை மூடிக்கொண்டு நடந்ததன் தாத்பர்யம் சென்னைக்கு  நாங்கள் அரிய பரிசுகளாக சளி, இருமல், சின்ன காய்ச்சலோடு திரும்பிய போதுதான் புலனாயிற்று!!
" திருச்சி கெந்தக பூமி, இந்த ஊர் பனி பொல்லாதது, என்னா வேல பண்ணினீக நீங்க? ஒடம்ப பாத்துகுங்க" திருச்சி செல்போன் ஒன்று உரிமையோடு எங்களுக்கு அறிவுறுத்தியது!