அந்த கோடை கால
விடுமுறை....... கும்பகோணத்தின் அடைசலுக்கு ஒன்றரை மாத சுதந்திர விடுதலை.
முழுவருஷப்பரிட்சை
எழுதும்போதே மனம் துள்ளித்துள்ளி கொள்ளிடத்தின் அக்கரையில் போய் நின்றுகொள்ளும்!
கும்பகோண கெணத்துல குளிக்கிறது ஒரு குளியலா?
மனசு எரிச்சல்
படும். எண்ணைக்கோ ஒரு நாள் அப்பா உருளையில் ஓடும் வாளி தளும்பத்தளும்ப மொண்டு
மொண்டு அடிக்கும் அருவிக்குளியலை விட்டால் ஏதோ கடமை கழிக்கும் செயல்தான் எங்கள்
குளியல்.
ஆனா இந்த
எடங்கண்ணியின் ஒண்ற மாசம்......... கையில
புடிக்கமுடியுமா எங்கள?!! கும்பகோணத்திலிருந்து
நீலத்தநல்லூர் பஸ் பயணம்....எட்டு மைல் தொலைவுதான். ஆனால் அதற்குள் வண்டியின்
வெளிப்புறத்தை குடும்பத்தின் ஏகோபித்த
வாந்தி விளையாட்டால் மெழுகி எடுத்துவிடுவோம்! இந்த விளையாட்டால் களைத்துப்போய்
கீழே இறங்கினால் வைக்கோலால் நிரப்பி மேலே பழைய ஜமக்காளம் சகிதம் ரெட்டை மாட்டு
கூண்டு வண்டி வைத்தியோடு கொள்ளிடத்தின் இக்கரையில் காத்துக்கிடக்கும். விட்ட குறை
தொட்ட குறையாக உள்ளே பதுங்கிக்கிடக்கும் சொச்ச மிச்ச வாந்தியை வெளிக்கொணர வல்லது
இந்த வாடை நிறை வாகனம்! இதில் என்ன ஒரு
சவுகரியம் என்றால் வாந்தி வருகையில் ஜனங்கள் கீழே இறங்கி வண்டியோடு ஓடிக்கொண்டே
காரியங்களை முடித்துக்கொள்ளலாம்!!
போற வழியில
போனஸ் மாதிரி கொள்ளடத்துல ஒரு குளியல்........ பரிசு(ஓடம்?) ஓடாத காலம் இந்த கோடை காலம்......பிள்ளைகளை அங்க போவாத இங்க
போவாத சுழல் பக்கம் அம்புட்டுக்காத என்று
மிரட்டாமல் முழங்காலுக்குக் கீழே ஒடும் தண்ணீரில் குதியாளம் போட ஃப்ரீயாக விடும்
அருமையான காலம் இந்த கோடைதான்!! அம்மாவின் புளி சோறு தயிர் சோறு மற்றும் தோலோடு
வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கை கை கொள்ளாது நிரப்பிக்கொண்டு கொள்ளிடத்துத் தண்ணியில்
லேசாக இழுபட்டுக்கொண்டே வாய்க்கு நேரடியாக சாப்பாட்டைத்தள்ளுவது...... ம்..ம்ம்...
மக்கள்
பாரமில்லாமல் கொள்ளிடத்தில் நடை போடுவது இரண்டு மொட்டைமாடுகளுக்கும் சுகமான
நேரந்தான்!
உறு மீன் வரும் அளவும் காத்து நிற்கும் கொக்கு
போல காய்ந்து கிடக்கும் பொன்னாற்றங்கரையில் எங்கள் பட்டாளம் மொட்டைமாடுகள் பூட்டிய
கூண்டு வண்டிக்காக வழி மேல் விழி வைத்து
காத்துக்கிடக்கும் காட்சியை நினைத்தாலே மகிழ்ச்சி தாங்கமுடிவதில்லை!
வண்டியிலிருந்து குதித்து பட்டாளத்தின் ஜோதியில் கலக்கும் அந்த நொடி......!!!
வீடு வந்து
சேர்ந்தவுடன் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகி விடுவோம்!
பாப்பாகுளக்
குளியல்தான்......
கிளம்பும்
போது ஆஞ்சிம்மாவின் படு பயங்கர எச்சரிக்கை. "பிள்ளைகளா கொளத்தில குளிக்கையில
ஒண்ணுக்குப்போவப்புடாது என்னா பிரியுதா? அப்புடி ஆராச்சும்
செஞ்சிங்கண்ணு வச்சுகுங்க...... நடுத்தீர்வ அண்ணைக்கி சாமி தண்ணியையும் ஒண்ணுக்கையும்
ஒங்கள பிரிச்சி எடுக்கச் சொல்லுவாரு எடுக்க முடியுமா....? ரோசன பண்ணுங்க...... பிரிக்க முடியாத பிள்ளைவளயெல்லாம் அடி
நரவத்துக்கு புடிச்சிகிட்டு போறத்துக்கு அங்கன லூசி பிசாசு எச்சி ஒளுவ தயாரா
நிண்ணுகிட்டு கெடக்கும். நாஞ்சொல்றது பிரியுதா?
சாமிக்கி
பயப்புட்டோமோ இல்லியோ லூசிப்பிசாசுக்கு பயந்தே சந்துக்கு பொயிட்டு வந்துருவோம்
வயல்களும் சந்துகளுமே அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்பட்ட காலமது!
கோடையில்
தண்ணீர் கஷ்டம்...... மருதங்குட்டையின்
தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமே. லேசான காப்பித்தண்ணி கலர்தான்......... இருந்தாலும்
குடிப்பதற்கு கொளத்து வாசனையுடன் அது ஒரு
மாதிரி ருசியாக இருக்கும். அதற்குத் தனிக் காவல். பாப்பாகொளம் தண்ணி
குளிப்பதற்கும் மற்றும் பொழங்குவதற்கும்....... இதற்கும் ஒரு வெட்டியான் உண்டு.
வெள்ளையன் நமக்குத் தெரிந்த பார்ட்டிதான். கொளத்தில் எங்கள் தலையைகண்டவுடன்"
எப்ப வந்திங்க சின்னாச்சி? சின்ன பிள்ள வளந்து போயில்ல
கெடக்காரு"என்று குசல விசாரணையுடன் தொடங்கிய சம்பாஷணை " சரி பிள்ளிவளா
தண்ணிய அலம்பாம வெள்ளன கரையேறுங்க." என்ற அறிவுறையில் போய் நிற்கும்.
பூம் பூம்
மாடாட்டம் அவருக்கு தலயாட்டிவிட்டு அவர் ஒரு எட்டு போவதற்குள் பித்தளை கொடமெல்லாம்
தலை கீழே தண்ணீருக்குள் கவிழ்க்கப்பட்டு
நீச்சல் கருவிகளாக மாறிவிடும். ஒடம்பை அதில் ஒதஞ்சிகிட்டு ரெண்டு காலாலயும்
தம்பட்டம் போட ஆரம்பிச்சா ஊரே அதிந்து போவும். இந்த சின்ன பொம்பள பிள்ளக குளிக்க
கட்டியிருக்க பாவாடையில யாரு பெரிய பலூன் பண்ணுராங்கங்கிற போட்டியில
கெடக்குங்க..... கோரையில கெடக்குற குஞ்சு குளுவான் மீனெல்லாம் இதுகளோட
சேந்துகிட்டு சுருக்குசுருக்குண்ணு ஆளுகள கடிச்சிகிட்டு நீந்தும்!
அம்மாச்சி
தொறையில பெரிய மாமா சமயத்துல வித்த காட்டுவாங்க. ரெண்டு கையையும் கும்புட்ட
மேனிக்கி வச்சுகிட்டு அப்புடியே அந்த கரைக்கி மெதந்து கிட்டயே போவாங்க. திரும்பி
வர்ரப்ப அங்க கெடக்க அல்லிப்பூ ஒண்ண பறிச்சி கும்புட்ட கைகளுக்கு நடுவுல
வச்சுகுவாங்க. தொறைக்கி வந்துட்டாங்கண்ணா இங்கேருந்து கைத்தட்டல்தான்....
பிகிலுதான்.... சத்தம் தாங்க முடியாத வெட்டியான்
" இப்ப கரையேறப்போறிங்களா இல்ல பெரிய பிள்ளைக்கிட்ட சொல்லுட்டுமா.....
நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன் இந்த தெக்குத்தெரு புள்ளிவள அம்ச அடக்கவே
பிள்ள(முடியில)...... எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்குதுவ..... ரொம்ப சத்தமா
பக்கத்துத் தொறைக்கெல்லாம் கேக்குறமாதிரி
கத்துவாரு. "நான் பாரபட்சம் இல்லாம வேல பாக்குறேண்ணு" மத்த
தொறைக்கெல்லாம் தெரியருத்துக்குத்தான் இந்த சத்தம்போடுறாருண்ணு
எங்குளுக்குத்தெரியும்!! ராத்திரி சாப்பாடு வாங்க வரும் போது அவுருக்கு பதனமா
பண்டங்ககள எடுத்து எடுத்து வைக்கறது
நாங்கள்ள?!
கொள்ளிடம் ஊர்லருந்து
கொஞ்ச தூரத்துல இரு ந்தாலும் பெரிய ஆளுக போவாட்டி எங்கள அனுப்பமாட்டாங்க. ஆனா
அவுங்களோட போறதுக்கு சும்மா கெடக்கலாம். ரொம்ப கண்டிஷன் பண்ணுவாங்க. தண்ணியில்
ஒக்காரரத்துக்குள்ளே கறையேறு கரையேறுண்ணு சத்தம் போடுவாங்க... இந்த தொல்லைக்கு
ஜாலியா பாப்பா கொளத்துலயே மணிக்கணக்கா ஆட்டம் போடலாம்!
இந்த
வயசிலயும் பாப்பா கொளத்த பாத்தா எறங்குணுமுண்ணு ஆசையாத்தான் இருக்கு.... ஆனா பணம்
பண்ண ஆசைப்பட்ட பஞ்சாயத்து பாப்பா கொளத்த பாப்பாவெல்லாம் குளிக்காத கொளமா மாத்திட்டாங்க! அழுவிப்போன காய்கறி இன்ன
பிற மீனுக்குகந்த மிதப்புகள் அதை மீன் குளமாய் மாற்றி விட்டிருக்கிறது! இந்த நம்ம
கொளத்த பழைய அழகுக்கு எதாவது ஒரு நல்ல உள்ளம் செய்யாமயா போப்போவுது!
"கும்பலோடு குதியாளம் ரொம்பதான்
போட்டிருக்கிறாய் இதோ பிடி சாபம்!" என எந்த கடவுள் விட்டதென்று எனக்குத் தெரியவில்லை. அந்த
அப்பார்மெண்டின் நான்கு வீடுகளின் நீச்சல்
குளம் என்னுடைய ஏகாதிபத்தியமாய் இருந்தது! சேறு இல்லை சகதி இல்லை. குஞ்சு குளுவான்
மீன்களின் கடி இல்லை. தினப்படிக்கு சுத்தம் செய்யப்பட்டு குளோரின் போடப்பட்டு
மகாராணி குளியலுக்கு அது எக்கணமும் தயார்
நிலையில் இருந்தது. அந்த சிங்கப்பூரின்
நான்கு வீடுகளில் வேலையில்லாமல் வெட்டியாய் இருந்தது நான் ஒருத்தி மட்டுமே!
மாமாவைப்போல கை கும்பிட்டு தண்ணீரில் மிதக்கிறேன். தட்டவும் ஆளில்லை, அங்கே திட்டவும் யாருமில்லை!
பழைய மாணவர்
சங்கம் பொதுவாக எல்லாக்கல்லூரிகளிலும் செயல்படும் ஒன்றுதான். ஆனால் ஒரு வருடத்தை
சார்ந்த பழையமாணவர்கள் வருடா வருடம் கூடுவதென்பது கொஞ்சம் வருடங்களுக்கு
நடக்கக்கூடும்.. பின் இந்தக் கூடல் அப்படியே விட்டுப்போய் பொது மாணவர் சங்க
சந்திப்புகளில் சங்கமாகிவிடும்.ஆனால் இந்த 1965ஐச் சேர்ந்த எஞ்சினியர்
மாணவர்களோ நாங்களா கொக்கா என ஒரு சவால் விட்டுக்கொண்டு
எழுபதைத்தாண்டிய இளைஞர்களாக வருடா வருடம் இரண்டு நாட்களுக்கு குடும்பத்துடன்
கூடித்தான் மகிழ்கின்றனர்! இந்த வருட சந்திப்பு மைசுரு. அங்கே வசிக்கும் நம் பழைய மாணவரும் அவர் குடும்பத்தின் மொத்த
பேரும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த இரண்டு நாளை எங்களுக்கு சுகப்பொழுதாக ஆக்கித்
தந்தனர்.
முதல் நாள் தலைக்காடு செல்வதாகத்திட்டம். காவேரியில் குளிக்கலாம் எனச்
சொல்லியிருந்தார்கள். அகண்டு போய் சிலு சிலுவென்று நின்ற காவேரிக்கரையை அடைந்த
அந்த நொடியில் செருப்பையும் துண்டையும் கரையில் விட்டெறிந்து விட்டு நான் உள்ளே புகுந்துவிட்டேன்.
சிறிது நேர ஆசுவாசத்துக்குப்பின்னால் கரையைப் பார்க்கிறேன். அத்தனை பெண்களும்
காவேரியையே வேடிக்கைப்பர்த்துக் கொண்டிருந்தனர் . சுற்று முற்றும் தண்ணீருக்குள்
பார்க்கிறேன்
ஐந்தாறு
ஆண்களே பிரதிநிதிகளாய் தண்ணீருக்குள் இறங்கியிருந்தனர்.
ஒரே ஒரு ஒற்றைப்பெண்.....
என்கூட இறங்கிருந்தால் நான் காட்சிப்பொருளாய் மாறியிருக்க மாட்டேனோ? அதற்கு மேல் இந்த சிலு சிலு தண்ணியில் நின்று கொண்டு
பச்சாதாபப்பட்டுக்கொண்டிருக்க
நேரமில்லாமல் "தலைக்கு மேலே போனபின் சாண் போனாலென்ன மொழம் போனாலென்ன?" என என் காரியங்களில் கண்ணானேன். இந்த வயசுல "தண்ணிக்குள்ள
நீந்துறது நரம்புகள தளத்தி
வுட்டுடும்" என்ற யாரோ ஒருவரின்
தத்துவ சத்தம் இந்த பாப்பா கொளத்துக்காரியின்
காதில் விழவேயில்லை!