Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 24 March 2018

உத்திரவாதமும் நிபந்தனையும்


 "சாமான் ஏதும் பிரச்ன குடுத்ததுண்ணு வச்சிக்குங்க... நேரா....... நம்ம கடைக்கி எடுத்துட்டு வந்துருங்க..... இல்ல இந்த நம்பருல கூப்புட்டா அவுங்களே நேரா வந்து ஒங்க வீட்டுக்கு வந்து  சரி பண்ணி குடுத்துடுவாங்க.. கவலையே படாதிங்க....."
இதுக்கு மேல வாழ்க்கையில என்ன உத்திரவாதம் வேண்டிக்கெடக்கு?!!  சந்தோஷமாக வீட்டிற்கு வந்தோம்... 
எந்த நேரத்தில் கடைப்பெண் இவ்வளவு உத்திரவாதம் அளித்ததோ தெரியவில்லை  அந்த மின்சார அடுப்பு ரிப்பேராகிப்போயிற்று. கடையில் நுழைகையிலேயே அந்தப் பெண்ணைப் பார்த்ததில் திருப்தியாகி  அவள் பெயர் சொல்லி "என்னம்மா எப்படி இருக்க?" என்று முகமன் கூறி என்னுடைய அயிட்டத்தை எடுத்துக்காட்டுகிறேன். அவள் முகத்தின் சிரிப்பு உடனடியாகக் காணாமல்போக  "இதெல்லாம் இங்க எடுத்துகிட்டு வரக்கூடாதுங்க..... கம்பெனி நம்பருக்கு போன் பண்ணுங்க."  வாங்கிய அன்றின் குழையடி மறந்து போய் மனிதரை துச்சமாக மதிக்கும் அராசாங்க ஆபிஸ் ஒத்த அவள்  தொனியில் அதிர்ந்து போனேன். "இங்கயும் எடுத்துகிட்டு வரலாம்ணு நீதானம்மா சொன்ன? இதுதானே வீட்டுக்கு பக்கமா இருக்கு?"
"நான் சொல்லியிருக்க மாட்டேனே....?
நாங்கள் இரண்டு பேர் பத்து நாட்களுக்கு முன் காது கொடுத்துக்கேட்டதை இல்லை என முழுப்  பூசணிக்காயை சோற்றுக்குள்ளே திணிக்கிறாள்!
"பொருளை எப்படியாவது விற்க வேண்டும். எனக்கு வர வேண்டிய ஊக்கத்தொகையை  நான் அடைய வேண்டும்" என்ற உந்துதலில் அவள் அந்த வார்த்தையை கோர்த்திருப்பாளோ? அவள் ஞானம்  அவ்வளவுதான்.....
"நீங்க இந்த நம்பருக்கு போன்பண்ணுங்க...... டோல் ஃ ப்ரீதான்." எனக்கு சமாதானமாய் ஒரு நம்பரை நீட்டினாள்.
இந்த டோல் ஃ ப்ரீஎன்கிற  சிக்குகோலத்திற்குள் நம்மில் பலர்  பல் வேறு விஷயங்களுக்காக மாட்டியிருப்போம். நம்பரை அமுக்கியவுடன் நமக்கு வணக்கம் கூறி   நாம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒரு வாடிக்கையாளர் என  ஐஸ் வைத்தபின் நம் மொழித்திறனை ஆராயும் பொருட்டு 1,2,3,4 அமுக்கி விளையாடச்சொல்வார்கள். "நீங்கள் வரிசையில் நிற்கிறீர்கள் தயவு செய்து காத்திருங்கள்." என்ற குரல் கேட்டவுடன் விருப்போ வெறுப்போ இன்றி விட்டேத்தியாய் மேற்கித்திய இசையிலும், 'காத்திருங்கள்' என்ற அறிவுரையிலும்  நாம் காத்துக்கிடந்தபின் "உங்க கம்ப்ளென்ட்ட சொல்லுங்க." என்ற குரல் ஒலிக்கிறது. விவரமெல்லாம் சொல்லி "நீங்கள் வீட்டிற்கு உடனடியா ஆள் அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்... அட்ரஸ் தரட்டுமா?" என்கிறேன்.
"இதுக்கெல்லாம் ஆள் அனுப்பமாட்டோம் மேடம். நீங்க நேரா எங்க ரிப்பேர் சென்டருக்குத்தான் எடுத்து கிட்டு போகணும்."
 பொய்யிலே பிறந்த அந்த பெண் இன்னொரு பொய்யோடு என்  கண்ணுக்கு முன்....  இந்தக் கடையில் இன்னொரு நாள் காலெடுத்து வைக்கிறனா பாரு..." மனசுக்குள் கங்கணம்
"அந்த ரிப்பேர் சென்டர் எங்க இருக்கு?" எரிச்சலான    கேள்வியை போனில்  எழுப்புகிறேன். விவரம் சொல்லுகிறது அந்தக்குரல்
"உங்கள் பேர் சொல்லுங்க குறிச்சு வச்சுக்கிறேன்."
"பேர் வேண்டியதில்லை மேடம் இதே நம்பர மட்டும் உபயோகிச்சுக்குங்க."
சிக்கு கோலத்தில் நம்மை  மாட்டி விட்ட அந்தக்குரல் என்ன அழகாக தப்பித்துக் கொள்கிறது பாருங்கள்?!
ரிப்பேர் சென்டரின் கதவு எண்ணை தெருவின் இருபுறமும் எண்ணி எண்ணி அந்த துக்குளியோண்டு கடையைக் கண்டு பிடித்தது பிரம்ம ப்ரயத்னம்தான்! ஆனால் அங்கு மனிதர்கள் முகம் பார்த்து நமது குறைகளைக் கேட்டது மனதுக்கு இதமாக இருந்தது!!  
இது இன்னொரு கடை.... "போன் ஒரே கமரலா இருக்குப்பா பேசறது ஒண்ணும் புரியில ஒரே எரச்சலா இருக்கு ... மாத்தி குடுப்பிங்களா?"  அதிர்ஷ்டவசமாக கடை ஓனரின் பெர்சனல் நம்பர் என் வசம்...
"மேடம் இப்ப வர்ற போனெல்லாம் 'யூஸ் அண்ட் த்ரோதாங்க'
ஒரு காலத்தில் வீட்டிலே சுகமே வசித்துவந்த   ரேடியோ, ஈசிச்சேர், ஃ பேன் மாதிரி இந்த போனும் சுகவாசியாய்த்தான்  வெகு நாள் வசித்து வந்தது.
 "கை நெறையா ... ..." ங்கிற மாதிரி இப்ப  வீட்டிலே வேண்டாத போன் நாலஞ்சு.....! இதையெல்லாம் தூக்கி எறிவதா.....? எறிந்தால்  பிளாஸ்டிக் மாதிரி இதுவும் பூமியை மாசு படுத்தி விடுமோ என்ற மன உதைச்சலில் என் வீட்டு ஷெல்ஃபின் ஒரு ஓரத்தில் காவல்தெய்வங்களாய் இவை கட்டியம் கூறுகின்றன!   
வீட்டிற்கு வந்த நண்பர் இந்த சம்பவத்தை  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
வயதான அம்மா...... வெளி நாட்டில் குடி  கொண்ட மக்களோடு வாழுவதை விரும்பாத சென்னையின்  சுகவாசி! அவ்வப்போது பிள்ளைகள் சென்னை வருகையில் அம்மாவின் வசதிகளை  நவீனமாக்கி விடுவார்கள். இந்ததடவையும் அப்படித்தான் ஒருபுது வரவு  40" டி.வி. ஆனால் அம்மாவுக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை. அவர்களுக்கு  பென்ஸ் காரும் பழைய அம்பாசிடர் காரும் ஒண்ணுதான்....... பிரச்சினை இல்லாமல் சேர வேண்டிய இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகும் காரியத்தை அது  செய்கிறதா? அவ்வளவுதான் வேண்டியது என்று நினைக்கும் பழமைவாதி!
ஒரு நாள் அவர்கள் டி.வி பார்த்துக் கொண்டிருக்கையில் படால் என்ற சத்தத்தோடு டிவி நின்று போனது! வயசான அவர்கள் சிக்குக்கோலத்திற்குள் மாட்டிக்கொண்டு டோல் ஃப்ரீ நம்பர்களோடு விளையாடி அலுத்துப்போய் உளைச்சல் அற்ற ஒரு சிறப்பான காரியத்தை செய்தார்களாம்.
"வாங்கினவர்கள் வந்து கணக்கு தீர்த்துக் கொள்ளட்டும்" என புது டிவியைத் தூக்கி எட்ட வைத்துவிட்டு தூசி தட்டிய பழசில்   எப்போதும் போல தனக்குப் பிடித்ததை ரசிக்க ஆரம்பித்து விட்டார்களாம்! 
தண்ணீர் விஷயத்திற்கு வருவோம் சென்னையின் போர் தண்ணீர் கசக்கும்  உப்பாக இருந்தாலும் நல்ல தண்ணீராய் மாற்றி அற்புதம் செய்யும்  இந்த ஆர்.ஓ. ப்ளாண்ட் என்னும் சீரிய கருவி நகரத்தார் நமக்கு அரும்பெரும் சொத்து! ஆனாலும் அதனிடமும் ஒரு குறை....... வீட்டிலே ஒத்தை விருந்தாளி நுழைந்ததைக் கண்ட மாத்திரத்தில் மூஞ்சியைத்  தூக்கி வைத்துக்கொள்ளும் சென்னை வீட்டு ஓனர்கள் போன்ற அற்ப குணத்தைக்கொண்டது!
முந்தின நாள் வரை 70 சதவிகித தண்ணீரைத் துப்பிவிட்டு 30 சதவிகிதத்தை நந்நீர் அமுதமாய்  தொட்டியை நிரப்பிக்கொண்டிருந்த அந்தக் கருவி கூட்டத்தைக்கண்ட மாத்திரத்தில் 99 சதவிகிதத்தை துப்பித்தொலைத்துவிட்டு மிச்சமிருந்த அந்த ஒரு சதத்தை மருத்துவ மனையின் ஏற்றும் ட்ரிப்ஸ் மாதிரி சொட்டு சொட்டாய் இறக்கிக் கொண்டிருந்தது! 
கம்பெனியோடு நேரடியாகப்பேசினாலாவது சந்தர்ப்ப சூழ் நிலையை முன் வைத்து  யாராவது உதவி பண்ணுவார்கள். மனசு ஏங்கியது.ஆனால் இப்போது சிக்குக்கோலத்தின் குரல்களுக்குள்ளே அல்லவா மாட்டிக்கொள்ள வேண்டும்? எல்லாவற்றையும் கடந்து கடைசி நிலைக்கு வந்து என்னுடைய பிரச்னையை சொல்லுகிறேன்.
"AMC வைத்திருக்கிறீர்களா...... இல்லாவிட்டால் பழுதான உதிரிக்கும் சர்விசிற்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்...." 
AMC யா......?
"ஆன்யுவல் மெயின்டெநன்ஸ் காண்ட்ராக்ட் மேடம்....."
மக்கு பிள்ளைக்கு சொல்வது போல் விளக்கம்!
ஃபைல் (File) இவர் வசம். ஒடிப்போய் கண்டுபிடிக்கிறேன். நல்ல வேளை அந்த AMC கையில் இருந்தது. ஆனால் அந்த AMC தொகையைப்பார்த்து அசந்து போனேன். தமிழில் ஒரு அழகான பழமொழி இருக்கிறது."பெத்த பிள்ளசோறு போடாட்டினாலும் வச்ச பிள்ள கஞ்சி ஊத்தும்ணு" தென்ன மரத்தின் வள்ளல் தன்மையைக் குறித்தே இந்த பழமொழி. அது போல ஆர்.ஓ. ப்ளாண்ட் எப்படி இருந்தாலும் இந்த கொண்டேமுட்டியான் AMC தொகை அந்த ஆர்.ஓ. கம்பெனியை நிச்சமாய் காப்பாற்றிவிடும்!!
கதைக்கு வருவோம். சிக்கு கோலத்தில்  திரும்பவும் நுழைந்து கடைசிக்கட்டத்தைப் ஒரு வழியாகப்பிடித்து என்னுடைய AMC நம்பரைக்கொடுக்கிறேன்.
" தேங்க்ஸ் மேடம் இன்னும் 24  மணி நேரத்திற்குள்  உங்கள் மெஷின் சரி செய்யப்பட்டுவிடும்."
 வீடு பத்திகிட்டு எரியுதுண்ணா இவன் குளிச்சு முழுவி சந்தானம் பூசிகிட்டுல்ல வர்றேங்கிறான். என்னையும் மீறி போனில் கத்துகிறேன். "அப்செட் ஆவாதிங்க மேடம் எவ்வளவு சீக்கிரம் அனுப்பமுடியும்ணு பார்க்கிறேன்"  எப்போது அந்த நேரம் என்ற  நிபந்தனையற்ற ஒரு பதில் கேட்டு  ஆத்திரமாய்  செல்லை அமுக்கி மூடுகிறேன். பாட்டில் பாட்டிலாக தண்ணீர் வாங்கி கேசை கரியாக்கி தண்ணீரைக் கொதிக்க வைத்து வெளி நாட்டு விருந்தாளிகளின் வயிற்று சுகத்தைக் ஒரு வழியாய்க் காப்பாற்றினேன்!
எல்லாமே உங்களுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுத்ததா? புலம்பித்தள்ளுகிறீர்களே..... சில அதிர்ஷ்டக்காரர்கள் கேட்கலாம்.
கம்பெனிகள் ஒரு காலத்தில் தங்கள் பொருட்களை தாங்களாகவே உற்பத்தி செய்து தரக்கட்டுப்பாட்டை முன் வைத்தனர்.  இன்றைக்கு எந்தெந்த வகைகளில் லாபத்தைப்பெருக்க முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே எங்கும் நிலவுகிறது.பொருட்களை குறைந்த விலையில் தயாரிக்க வெளி நாடுகளுக்குக்கூட சப் காண்ட்ரக்கில் விட்டு விட்டு அவர்கள் பெயரை மட்டும் பொருட்கள் மீது போட்டுக்கொள்கிறார்கள். தரம் இரண்டாம் பட்சமாகிப்போகிறது. யூஸ் அண்ட் த்ரோ கலாச்சார காலம் இது!  காரண்டி வேண்டுமா? பேசாமல் AMC போய்விடுங்கள் என்கிறார்கள்!
அன்று ஒரு நாள் எங்களது பழைய ஆபிசில் வேலை பார்த்த ஒரு பெண் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்திருந்தது. பெரிய பையன் முதன் முறையாக அரசாங்கத்தேர்வு எழுதுவதால் ஆசீர்வாதம் வேண்டி வந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கையில் " மேடம் எங்க கல்யாணத்திற்கு நீங்கள் வாங்கிக்கொடுத்த மிக்சி இன்னும் அருமையாக வேலை பண்ணுகிறது" என்ற அவளது  வார்த்தை என்னைப் புல்லரிக்க வைத்தது . எங்கோ ஒரு கம்பனி தங்கள் தரத்தை முன் வைத்து 16 வருடங்களுக்குப்பின்னும்  நம்மை மகிழ்விக்கிறார்களே!!
நமக்கு நெருங்கிய உறவினர் ஒருவரை  விசேஷம் ஒன்றில் சந்தித்தபோது பேச்சு வாக்கில் அவரது  அப்பா 50 வருட கேரண்டியுடன் வாங்கிய ஒரு கடிகாரத்தைப்  பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். 1960ல் வாங்கிய அந்த கடிகாரம் 2018ல்  இன்றும் அருமையாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்!  வருடங்களை எண்ணிப் பார்க்கிறேன். 2010ல் 50க் கொண்டாடி முடித்து இன்னும் ஆளுமையோடு உழைக்கும் அக்கருவி எங்கே? பத்தே நாளில் பல்லிளிக்கும் இன்றைய பொருட்கள் எங்கே?
"எப்டி சொல்றிங்க 50 வருஷம்ண்ணு... கேரண்டி பேப்பரை பத்திரமாக வைத்து இருக்கிறீர்களோ?"  அவர் சிரித்துக்கொண்டே "மாகி......  அந்த உத்திரவாதத்தை கடிகாரத்தின் மேலேயே தெளிவாக  எழுதியிருக்காங்க." என்றார்
"நம்பமுடியவில்லை...... நம்பமுடியவில்லை..." சிவாஜி மாதிரி மனசு கத்திப்  பாடியது......!
"வாரண்டி கார்டுக்குள் பொடிசு பொடிசான எழுத்துக்களில் நமக்கு அளிக்கப்படும்
உத்திரவாதமும் 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என என்ன நிபந்தனை என்று தெரியாத பாமர மக்களாகிய நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் இன்றைய கலாச்சாரம் எங்கே? தலைமேலேயே உத்தரவாதத்தை தூக்கிக்கொண்டு திரியும் அந்த கடிகாரத்தின் உச்ச கலாச்சாரம் எங்கே?
"அப்பா அத ரொம்ப பத்திரமா பாத்துக்குவார்..... மாகி  தினப்படி அந்த கடிகாரத்துக்கு அவர் மட்டுந்தான் சாவி குடுக்கணும். ரொம்ப ஒடம்பு முடியாதப்பதான் எங்கிட்ட அந்த பொறுப்பக்குடுத்தார்."
ஒரு காரைக்கூட அக்கு அக்காய் எடுத்து திரும்ப பூட்டிவிடும் திறன் கொண்ட இந்த வல்லவர் இந்த கடிகாரத்தில் வரும் சின்ன சின்ன ரிப்பேர்களை தானே சரி பண்ணி  சிக்குக்கோலத்திற்குள் நுழையும் அவசியம் ஏதுமின்றி இன்றும் அழகாக ஓடவைத்துக் கொண்டிகிறார்.  
அந்த கலாச்சாரத்தின் பிரதிநிதியான அந்த கடிகாரத்தையும் அதை அன்புடனே பராமரித்துக் காக்கும்  அருமை நண்பரையும்  இன்றைய பிளாக்கின் ஹீரோயினாய்...... ஹீரோவாய்..... ஆக்குவதில்  மகிழ்வடைகிறேன்!!!

Sunday, 4 March 2018

கிளைத்த சில வேர்கள்


எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக தொடக்கப்பள்ளியை வலம் வந்தேனோ அவ்வளக்கவ்வளவு ஆறாவதில் சேர்ந்த புதிய பெண்கள் பள்ளி புயல் போல என்னைத் தாக்கியது நிஜம்!
நிறமும் அழகும் இவ்வளவு முக்கியமானதா  என்னைத்திகைக்க வைத்தது இப்பள்ளிதான்! ஒரே வகுப்பில் இரண்டு பெண்கள் ஆளுமையோடும் புத்திசாலியாகவும் இருக்கும் பட்சத்தில் சிவப்பான அழகான பெண்ணே வகுப்பு லீடராக ஆயிருப்பாள். வகுப்புக்குள்ளேயே இருக்கும் நான்கு
ஸ்குவாடுகள் நான்கு இந்திய வீராங்கனைகள் சாந்த்பீபீ பத்மினி தமயந்தி ரசியா பெயர் கொண்டது. இதில் போனால் போகிறதென்று ஒன்றிரண்டு கருப்பினம் இருக்கும்.
இதுவே இப்படி என்றால் கொண்டாட்டங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். சிவப்புத்தோலும் அம்மாங்கள் சொல்லுகிற தினுசில்  பட்டும் பகட்டுமாய் டிரஸ் தைக்கக்கூடிய பவுசு உள்ளவர்களும் கூட்டமாய் கிடக்கிற அந்தப்பள்ளியில் இரண்டு கோணத்திலும் அடிபடும் நாங்கள் எம்மாத்திரம்?! அமையா சமயத்தில்  கிரிக்கெட் விளையாட்டில இருக்கும்  ஸப்ஸ்ட்டிடுட்டுகள் மாதிரி யாராவது காச்சல் கீச்சலா படுத்துட்டா என்ன பண்றதுங்குற கவலையில் அம்மாங்க   எங்களையும் பழக்கி வப்பாங்க..... கடைசி நாள் முட்டும் நாங்க திரிசங்கு சொர்க்கத்துலதான்!
பழைய பள்ளிக்கூடத்துல இந்த வேலையே கெடையாது.
"அம்மாவோட பழைய பட்டுப்பொடவையில தச்ச பாவாட இருக்கு சார்...."
"அப்ப சரி அதையே கட்டிகிட்டு வா."
இத்தோட முடிஞ்சிது கத!
ஒரு ஜன்னல் மூடப்பட்டா ஒரு கதவு கட்டாயம் தொறக்கும்ண்ணு நம்பிக்கையூட்டும் ஒரு உலகப் பழமொழி இருக்கு. செவப்பு நெறங்களால ஏமாந்து போய் நிண்ண எனக்கும் ஒரு அழகான கதவு காத்துகிட்டுதான் இருந்துச்சு.....  
1950அக்டோபர் 24ந்தேதி உலக சமாதானத்துக்காக இந்தியாவும் பல் வேறு நாடுகளும் சேர்ந்து  ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கின. 1951-52 களில் இது எங்கும் பிரபலமாற்று. எங்கள் பள்ளி நிர்வாகமும் மாணவியர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உற்சாகம் காட்டினர்.
இந்த நோக்கோடு ஒரு பெருந்திட்டம் தீட்டப்பட்டது. உலகப்படத்தை பெரிய அளவில் வரைந்து  அதில் ஐநா நாடுகளையெல்லாம் குறிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
"இதிலென்ன பெரிய திட்டம் வேண்டிகிடக்கிறது? கூகுளில்  போய் நமக்கு வேண்டிய மேப்பை செலக்ட் பண்ண வேண்டியது அத ஃப்ளக்ஸ் போர்டு பண்றவங்கள்கிட்ட குடுத்தா ஒண்ணு என்ன ஆயிரம் பண்ணிடுவாங்களே!"
"அது இந்தக்காலம்....!! அப்பல்லாம் அசெம்ளி ஹால் நீட்டத்துக்கு பெரிசா ஒரு மேப் பண்ணணும்னா  நிறைய நுட்பமான கணக்கு எடுக்கணும் சின்ன மேப்ப பெருசாக்க ட்ரேஸ் பண்ணணும் ஸ்கேல வச்சு அளவெடுத்து  கட்டம் போடணும்....... அச்சு பிழறாம வரையணும் ரொம்ப ரொம்ப நுணுக்கமான வேல!!"
முழு முனைப்புடன் அம்மாங்கள் இதில் ஈடுபட்டனர். அழுத்தமான வெள்ளைத்துணியில் மேப் உருக்கொண்டவுடன் ஐம்பது சொச்சம்  ஐ.நா.நாடுகளும் வரையப்பட்டது. அடுத்து இந்த நாடுகளையும் தனிப்படுத்திக்காட்டும் வேலை.....  கலர் கலரான எம்பிராய்டரி  நூல்கள். ஒவ்வொரு நாடாக அம்மாங்கள் நாடுகளுக்கு தகுந்த மாதிரி சின்ன ஃப்ரேம் தொடங்கி சைஸ் வாரியான ஃ பிரேம் களில் வைத்து  டைட் பண்ணி கை எம்பிராய்டரி போடும் வேகத்திற்கு ஊசி நூலை அவர்கள் கேட்கும் அளவிற்கு கோத்து கோத்துக் கொடுப்பது ராமருக்கு அணில்உதவி செஞ்சமாதிரி எங்கள் வேலை! அம்மாங்களுடைய கைவேலையில் நான் பிரமித்துதான் போய்விட்டேன். அது வரை உலகத்திலேயே நான் பார்த்த ஒரே தையல் கிழிந்த துணிகளைத் தைக்க அம்மா போடும் மூட்டுத்தையல் மட்டுமே. இந்த அம்மாங்களோ ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தினுசான தையல் இல்ல  கைவசம் வச்சிருந்தாங்க!! சங்கிலித்தையல்,குறுக்குத்தையல்,மீன்முள்தையல்,
கம்பளித்தையல், அம்புத்தையல், இறகுத்தையல் பிரஞ்சு முடிச்சு டானிஷ் முடிச்சு, பட்டன் ஹோல் முடிச்சு இப்படி அவர்கள் கைவண்ணம் அனுமார் வாலாக நீண்டுகொண்டேதான் போயிற்று!!
மரச் சுவரில் பொருத்தப்பட்ட அந்த மேப் பெரும் சித்திரம் போல் கண்ணைக்கவர்ந்தது!! ஐநா உயர் அதிகாரிகள் மட்டும் இந்த அழகைப்பார்த்திருந்தால் பெரியதொரு பரிசை  வருடா வருடம் எங்கள் பள்ளிக்குக்  கொடுக்கத் தவற மாட்டார்கள்!!
அந்த அக்டோபர் மாதம் ஐநா கொண்டாட்டம்  பெரிய அளவில் பள்ளியில் நடைபெற்றது! பாட்டு டீச்சர் இந்த நாளுக்காக கீழே தொடங்கும் வகையில் ஒரு பாட்டு கட்டினார்கள்
"ஐ.நா. சங்கம் வாழ்கவே உலகில்
அமைதி எங்கும் நிலவவும்
இன்பம் எங்குமே தழைக்கவும்
உலக மக்கள் யாவருமே அன்பு கொள்ளவும்"
அழகான வார்த்தைகளைக்கொண்ட இந்த பாட்டை பள்ளியே சேர்ந்து கூவிப் பாடியது. நிறைய போட்டிகளும் நடந்தன 
1.எல்லா ஐநா நாடுகளையும்  பிழையில்லாமல் குறைந்த நேரத்தில் மேப்பில் குறியிட்டுக் காட்டுதல்,
(அந்த மேப்பை அழுக்காகாமல் இருக்க நாடுகளை ஒரு குச்சியால்தான் காட்டினோம்.)  
2. ஐநா உறுப்பினர் நாட்டுக் கொடிகளை வரைதல்
3.அந்த கொடிகளை டீச்சர்  காட்ட அது எந்த நாட்டுக்குரியது என சொல்லுதல்.
4.அந்த நாடுகளைப்பற்றிய விவரங்களை சிறு நாடகங்களாக  நடித்தல்.
சிகப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத அழகான போட்டிகள் !!
பள்ளியின் சந்தோஷமான கொண்டாட்டம்!!
ஒன்றிரண்டு பரிசுகள் எனக்கும் கிடைத்ததில்  என் சந்தோஷம்  ரெட்டிப்பாகியது!!
அம்மாங்கள் பள்ளியில் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணாய் இருப்பது ஒரு கஷ்டமான விஷயந்தான்.  அவர்கள் எங்களை அர்ச்சிஷ்டவர்கள் ஆக்கியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி உழைத்தார்கள். வெள்ளி சாயங்காலம் பள்ளி முடிந்தபின் பக்கத்திலிருக்கும் பெரிய கோயிலுக்கு பாவசங்கீர்த்தனத்திற்கு பட்டிக்குசெல்லும் கால்நடைகள் போல ஓட்டிச்சென்று விடுவார்கள். ஒரு நாள் வீட்டிற்கு சீக்கிரமாக போகும் நப்பாசையில் நான் அம்மாங்களிடம் "சிஸ்டர் இந்த வாரம் எனக்குப் பாவமேயில்ல" என்று ஒரு கரடி விட்டேன்.என்னுடைய வார்த்தையில்  சிஸ்டர் அதிர்ந்துதான்  போய் விட்டார்கள். ஒரு நிமிஷம் என்னையே உற்றுப்பார்த்தவர்கள் அவர்கள் பக்கத்தில் என்னைக்கூப்பிட்டார்கள். கோயில் மேல்  படியில் நாங்கள் இருவரும் நிற்க மற்ற கூட்டம் எங்கள் இருவரையும் சுற்றி கட்டியம் கூற
"மாகி இந்த வாரம் முழுவதும் பாவமே பண்ணுலயாம்"
 சிஸ்டர் பக்தியாய் கை கும்பிட்டு  என்னைப்பார்த்தார்கள்
கூட்டத்தின் சங்கேதமும் சிஸ்டருக்கு சாதகமாக இருந்தது!
"அதனால இவளுக்கு இண்ணைக்கி என்ன ப்ரைஸ் குடுக்கலாம் சொல்லுங்க?" 
"இந்த அம்மாகிட்ட மாட்டிக்காம சும்மாயிருப்பதே சுகம்ணு" கூட்டம் அமைதி காத்தது
"சரி நாம எல்லாரும் சேர்ந்தே ஒரு ப்ரைஸ் குடுக்கலாமா?"
ஆட்டுமந்தை  வெகுவாக தலையை ஆட்டியது.
இப்ப நம்ம எல்லாரும் கோயிலுக்குள்ள போறோம்  அங்குட்டு இருக்க சூசையப்பர் சுருவத்த கீழ எறக்கிட்டு இந்த பிள்ளைய உக்கார வச்சிரலாமா?"
சிஸ்டர் தன் ஜோக்குக்கு தானே கைகொட்டி சிரிக்க மந்தையும் அதையே பின் பற்ற மனசுக்குள் எனக்கு ஏக  எரிச்சல்.
அண்ணையிலிருந்து ஒரு முடிவு........
ஓர் ரெண்டு ரெண்டு ரெண்டிரெண்டு நாலு மூவிரண்டு ஆறுண்ணு வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி  ரெண்டு செட் பாவங்கள் தயார் பண்ணி வச்சுகிட்டேன். வார வாரம்  மாத்தி மாத்தி என் பாவசங்கீரத்தனம் தங்கு தடையில்லாமல்  ஜோரா போச்சு!!
அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பிலும் நல்லா படிக்காதவர்களைப் ஃபெயில் ஆக்குவது ரொம்ப சாதாரண விஷயம். இப்ப போல ஆட்டமேட்டிக்கா பாஸ் அப்ப கெடையாது. 
 அந்த வருஷம் எனக்குக் கடைசி வருஷம்... அதை ஆறாம் படிவம் அல்லது எஸ்எஸ்எல்சிணு சொல்லுவோம். அப்பதான் அரசாங்கத்தேர்வு. சும்மாவே எல்லா கிளாசுலையும் வடிகட்டும் அம்மாங்க பள்ளிக்கூடத்துக்கு நல்லபேர் வருணும்ங்கிறத்துக்காக அரை வருஷப்பரிட்சைய செலெக்ட்ஷனா வச்சு ஒரு மார்க் கொறஞ்சா கூட   கண்ண மூடிகிட்டு சுத்தற வழிச்சு தள்ளிடுவாங்க!   
சந்தோஷமா கிறிஸ்மஸ், ஜனவரி காப்பரிசித்திருநா எல்லாத்தையும் உண்டு களிச்சு முடிச்சு  பள்ளிகூடத்துக்குள்ள நொழஞ்ச மொத நாளே கண்ணுக்கு முன்னால இந்த செலெக்ஷன் பூதம் மாதிரி நிக்குது.
பேர் வரிசைப்படி ஒத்தைக்கி ஒத்தையா ஹெட்மிஸ்ட்ரஸ் அம்மாங்கள அவுங்க ரூம்ல போய் பாக்கணும்.
"நான் ஜெயிச்சிட்டேன்"  கர்வத்தோட  செலது கிளாசுக்குத் திரும்ப செலது  கண்ணீரும் கம்பலையுமா டெஸ்க்ல வந்து குப்புத்தடிச்சி படுத்துக்கொள்ள அந்த ரூமே கொந்தளிச்சு  கெடந்தது.
என் மொறயும் வந்திடுச்சு ......
கணக்குப்பாடம் எனக்கு வராதது என்னுடைய தப்பே இல்ல...... அது என் அப்பன் எனக்களித்த சொத்து...... கணக்குக்கு  பயந்தே  காலேஜ் போகாத பேர்வழி அவுங்க..... கணக்கில்லாமலும் காலேஜில் படிக்கலாம் என்று எடுத்துச்சொல்ல ஆளில்லாத காலத்தவங்க!
காலெல்லாம் வெட வெடக்க ரூமுக்குள்  நுழைந்து  நடுக்கத்தை உள்அடக்க வல்ல  சத்தமான  "குட்மார்னிங் சிஸ்டர் " சொல்கிறேன்
"கணக்குப்பரிட்ச எப்டி பண்ணின ?"
"சரியா மாட்டிகிட்டேன்."
"நல்லா பண்ணி இருக்கேன் சிஸ்டர்." வாய்தான் பேசினதே தவிர " அழிந்தாய் நீ மாகி " என்று மனசு டமாரம் கொட்டியது.
"ம்ம்ம் .... அடுத்தாப்ல  என்ன பண்றதா உத்தேசம்?"
"சிஸ்டர் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிட்டு........ நம்ம
ஸ்கூலுக்கு சேவசெய்ய.......
நான் சொல்லி முடிக்கவில்லை
"கெட்டு குட்டிச் சொவுரா  போ....... போயி  ஒன் அக்காவ கையோட கூட்டி கிட்டு வா.."
அக்கா அங்கதான் டீச்சர்.... கணக்கில புலி ...... அம்மா வழி ஜீனாகத்தான் இருக்கணும்! தாத்தா பொம்பள பிள்ளக படிக்கக் கூடாதுண்ணு புடியா நிண்ணதுனால அவங்கள எல்லாம் காலேஜுக்குப் அனுப்ப முடியில. வகுப்புக்கு வெளியே நிண்ணு அக்காவுக்கு  சைகை காட்டுகிறேன். வெளியே வந்தவர்கள்  யார் காதிலும் விழாதபடி மெல்ல கேட்டகிறார்கள்
" என்னா கணக்கில ஃபெயிலா....?"
என்னால் வாயே திறக்க முடியவில்லை. கண்ல மட்டும் தண்ணி தளும்புது.
அக்கா கையை இறுக்கி பிடித்துகொண்டேன்.
""குட்மார்னிங் சிஸ்டர்..... கணக்கில மார்க் கொறஞ்சிருக்கா சிஸ்டர்? இந்த மூணுமாசத்தில நான் அத சரி பண்ணிடுறேன்......" அக்கா என்னன்னுமோ எனக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்க
"ஜோஸ்பின்......மொதல்ல நான் சொல்றதகொஞ்சம்  கேளு ..."
"சொல்லுங்க சிஸ்டர்....."
" ஒன் தங்கச்சிக்கு நெறையாபடிச்சு முன்னுக்கு வருணும்கிற ஒரு ஆசையே இல்ல..... அடுத்து என்னா பண்ண போறேண்ணா டீச்சர் ட்ரெயினிங் போப்போறேங்குது..... நீயாச்சும் அவள காலேஜுக்கு அனுப்புற வழியப்பாரு."
"சரிங்க சிஸ்டர்... அம்மா அப்பாவ கேட்டுட்டு முடிவு பண்றோங்க சிஸ்டர்."
 எனக்கு தலைய சுத்துச்சு...... ஒரு பக்கம் செலக்ஷன் கெடச்ச சந்தோஷம் இருந்தாலும்  கும்பகோணத்திலேர்ந்து திருச்சி போய் ட்ரெயினிங் படிக்கிணுகிற என் ஆசையில சிஸ்டர் மண்ண அள்ளி போட்டுட்டாங்களேண்ணு ஒரே வருத்தம் !
ட்ரெயினிங் போனா கும்பகோணத்திலேர்ந்து திருச்சிக்கு நெறையா நேரம் ட்ரெயின்ல உக்காந்துகிட்டு போவலாம்!
அப்பறம் திருச்சியில  ட்ரெயினிங் படிச்ச அக்கா மலக்கோட்டயப்பத்தியும்,அங்கிருந்த மாமா வீட்டுப்பிள்ளைகளோட வாரக்கடைசியில ஜாலியா இருந்ததபத்தியும்  சொல்லும் போதெல்லாம் மனசுக்குள்ள இதெல்லாம் நம்மளுக்கும் உண்டுண்ணுல்ல கோட்டை கட்டியிருந்தேன்!
காலேஜ் பாத்திங்கண்ணா உள்ளூராகிய  கும்பகோணத்திலேயே தப்படி தூரத்துலேயே காவேரிக்கரையிலேயே "கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா"ண்ணு பேர் வேற வச்சுகிட்டுல்ல ரெடியா   உக்காந்திருக்கு!! பழைய கும்பகோணத்தில்தான் பழையபடிக்கி வாசம்!
புடிச்சோ புடிக்காமலோ நான் எங்க கிராமத்துக்கு மொத பெண் பட்டாதாரி ஆயிட்டேன்..... அதோட நிக்கில  அப்பா அம்மாவின் உந்துதலாலும் தியாகத்தாலும் பட்ட மேற்படிப்பும் எனக்கு வரமாகக் கிடைத்தது!
என் குழந்தைத்தனமான திட்டங்களை விட்டெறிந்துவிட  வழிப்படுத்திய சிஸ்டர் எமரன்ஸ்சையும் ஜோஸ்பின்அக்காவையும் அவ்வப்போது அன்புடனே எண்ணிப்பார்த்துக் கொள்ளுகிறேன்!