Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 27 March 2015

லீ குவான் யூயும் எனது நட்பும்

அது ஒரு விநோதமான நட்பு. இதை கவிஞர் பிசிராந்தையார் மன்னன் கோப்பெருஞ்சோழனின் காணா நட்பு போல என்னலாமோ? ச்சீ......... பெரியவர்களையெல்லாம் அநாவசியமாக இழுக்கக்கூடாது! ஒரு தலை நட்போ? அப்படியும் தெரியவில்லை.ஆனால் இந்த நட்பு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வினோதமான ஒன்றாய்த்தான் தோன்றுகிறது. 1999ல் சிங்கப்பூர்  நாங்கள் இருவரும் சிங்கப்பூர் எம் டி எல் லில்  நிலைகொண்டபோது ஆபீஸ் நண்பர் ஜாக்கி படித்துப்பாருங்கள் உங்களுக்குப்பிடிக்கும் எனக் கூறி அந்நாட்டு பிரதமர் லீ எழுதிய  “தெ சிங்கப்பூர் ஸ்டோரி” என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். நானோ ஒரு கதை விரும்பி. சுய சரித்திரங்கள் மேல் அதுவும் ஒரு நாட்டின் சுயசரித்திரத்தின் மேல் அதுவும் அந்நாட்டு பிரதமராலேயே எழுதப்பட்ட ஒன்றில் எனக்கு நாட்டமில்லை. இருந்தாலும் அன்பளிப்பின் மரியாதைக்காக புத்தகத்தைத் திறந்தேன். பேய் பிடி எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். லீ குவான்யூ எழுதிய அந்த சிங்கப்பூர் கதை முதல் பக்கம் தொடங்கி கடைசி வரி முடிய என்னை சிக்கு சிக்கு எனப் பிடித்தாட்கொண்டது உண்மையிலும் உண்மை!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக ( இந்தியாவில் தமிழ் நாடு போல்) சிங்கப்பூர் சேர்ந்து சில வருடங்களே ஆகியிருந்தன. ஆனால் மலேசிய பிரதமர் கணக்குப்படி சிங்கப்பூர் ஒரு வேண்டாத விருந்தாளியாகவேதான் இருந்தது. ஒரு நல்ல நாளில் மலேசியா நீ தனியாகவே போய்விடு என அதை வெட்டி எறிந்துவிட்டது 1965ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம்  நாள் சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. மலேசியா இயற்கை வளங்களும் கனிமங்களும் கொண்ட ஒரு நிலப்பரப்பு. இவ்வளவு  நாட்களாக சிங்கப்பூர் மலேசியாவின் வர்த்தக வியாபார முனையமாகத்தான் செயல் பட்டு வந்தது. தனக்கென்று சொல்லிக்கொள்ளும் வகையில் அந்த நாட்டில் வளம் ஒன்றும் இல்லை.இதை வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்ய இயலும் என மனம் குன்றி நின்றார் அந்நாட்டுப் பிரதமர் லீ. சுதந்திர தினத்தன்று நடைபெற்ற பத்திரிக்கையாளரின்  நேரடிக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர் உணர்வுகளை அடக்க முடியாமால் 20 நிமிடங்களுக்கு நிலை  குலைந்துதான் போனார். புத்தகத்தின் முதல் அதிகாரம் இப்படித்தான் மனதைத்தொட்டுத் தொடங்கியது. மற்ற அதிகாரங்களும் முதற்றுக்கு நாங்கள் ‘இளைப்பில்லை காண்’ என மனதைத் தடவிய வண்ணமே பின் தொடர்ந்தன!
ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த சிறிய மூன்றாந்தர நாட்டை 65% சீனர்களையும் 18% சதம் இந்தியர்களையும் 17% மலேயர்கள் மற்றும் இந்தோனேசியா போன்ற  அண்டை நாட்டரையும் மக்களாகக் கொண்ட இந்த நாட்டைக் கட்டுக்கோப்பாக ஒன்றிணைத்து தன்னுடைய தொலை நோக்காலும், அரசியல் சாணக்கியத்தாலும் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக ஆக்கிக் காட்டிய  இந்த நிபுணனுக்கு நான் என்ன மரியாதை செய்யக்கூடும் என்று எனக்குள் பெரும் யோசனை. தெரிந்தவர் வழியே அவரைப்போய் பார்த்து நன்றி கூறலாமா? அது ஒரு நடிகரை நான் சந்தித்து நீங்கள் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று கூறுவது போலத்தான் இருக்கும். நான் சொல்ல ஆசைப்படும் செறிவோ இல்லை நிறைவோ அதில் இருக்காது.
சின்ன சின்ன விஷயங்களில் கூட தீர்க்கப்பார்வை கொண்டவர் லீ. அவர் சொல்கிறார் கேளுங்கள் “ சுதந்திரம் பெற்ற பின் சிங்கப்பூரில் ஏதாவது மற்றவர்கள் பார்வையை ஈர்க்குமாறு என்ன செய்யலாம் என்ற யோசனை எனக்குள். இந்த  நாட்டை பச்சை மயமாக்கினால்  ஆக்கினால்  மூன்றாந்தரத்தில் இருக்கும் என் நாட்டை இந்த மாற்றங்கள் வித்தியாசப்படுத்திகாட்டும். இதுதான் நாட்டு முன்னேற்றத்தின் முதற்படி. அதிக செலவில்லாமல் நாட்டிற்கு வளமை சேர்க்கும் வழி ”
மரங்கள் நடுவதை வாழ்வின் முக்கிய அங்கமாகக் கொண்ட லீயை செல்லமாக ‘சிங்கப்பூரின் முதல் தோட்டக்காரர்’ என்ற பட்டப் பெயர் கொடுத்து மகிழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்!
இவருடைய மரங்களின் வளமையை முழுமையாக அனுபவித்தவர்கள் நாங்கள்! கணவருடைய வேலை 10 நாட்கள் சென்னையிலும் 20 நாட்கள் சிங்கப்பூரிலும் என இருந்ததால் ஏர்போர்ட்டிலிருந்து ஆரஞ்சு குரோவ்  ரோடிலிருக்கும் வீட்டிற்குச் செல்ல டாக்சியில் ஏறி உட்கார்ந்தோமானால் எங்கள் டாக்சி ரதமாக மாறிவிடும். ராஜாவும் ராணியுமாக அமர்ந்திருக்கும் எங்களுக்கு கட்டியம் கூறி வரவேற்க இருபுறமும் காற்றிலே கலந்து சின்ன சுகந்தத்தை அள்ளித்தரும் மரங்களும் செடிகளும்கொடிகளும்! இந்த பெரும் வரவேற்பை எங்கள் மலர்ந்த முகங்கள் எம்பங்கு பரிசாக அக்கட்டியக்காரர்களுக்கு அள்ளிக்கொடுத்துவிடும்!
திரும்பவும் இந்த லீ க்கு நான் என்னத்தைக்கொடுத்து மரியாதை செய்ய முடியும் என்ற அலை பாய்ந்த மனதிற்குள் ஒரு அருமையான கரு உருக் கொண்டது. “தெ சிங்கப்பூர் ஸ்டோரியை” தமிழாக்கம் பண்ணுவோமா? உடனடியாக ஆரம்பித்த என் பேனாவை என்னாலும் நிறுத்த முடியவில்லை. லீயின் அடுத்த புத்தகம் “மூன்றாந்தர நாட்டிலிருந்து முதன்மை நாடாக” வெளியே வந்ததும் வாங்கிய முதல் கூட்டத்தினுள் நானும் ஒருத்தி! அதற்கும் அதே எழில்மிகு தமிழ்ப் பரிசுதான் காத்து நின்றது! ஆமாம், இதையெல்லாம் புத்தமாக வெளியிடப்போகிறீர்களா?
பக்கம் பக்கமாக ‘ராம ஜெயம்’ எழுதுபவர் அதை வெளியிடப்போகிறாரா என்ன? எனக்கும் அந்த ஆதி அந்தமில்லாதவனுக்கும் உள்ள ஒரு பெருந்  தொடர்பின் சிறு வெளிப்பாடே அது என அவர் உரைப்பார். “சேசுவே இரட்சியும் மரியே வாழ்க” என எழுதுபவர்களின் நோக்கும் அதுதானே?
அது போலவே அரியதொரு நட்புக்கு சிறு அடையாளமாகவே இந்த தமிழாக்கத்தை நான் கருதுகிறேன்.
2015 மார்ச் 23ம் தேதி இறந்து போன லீகுவான் யூவிற்கு மலர் வளையங்கள் குவிந்து கொண்டிருக்கும். மக்கள் முகப்புத்தகம் மற்றும் பல வகைத் தொடர்புகள் வழியே இம்மாமனிதனுக்கு தங்கள் அன்பை, நன்றியை தெரியப்படுத்திகொண்டே இருப்பார்கள். பல்வேறு நாட்டுத்தலைவர்கள் அருமைத் தலைவருக்கு மரியாதை செய்ய வந்து கொண்டிருப்பர் அவைகளோடு கூட எனது எழுத்தாணி மலர்கள் என் மானசீக நண்பனுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்!

Monday, 16 March 2015

யேசுவின் சடங்கில் இடங்கண்ணி மக்கள் யாம்

ஆரம்பிக்கும்போதே ஒரு கும்மாங்குத்து போட்டாரே பாருங்கள், கத்தோலிக்கர் அதிர்ந்துதான் போய்விட்டனர். மனுஷன் 2013 மார்ச் 13 போப்பாக பதவி ஏற்கிறார். 28 ந்தேதி பெரிய வியாழன் கால் கழுவும் திருநாள். வத்திகானின் ஆடம்பரமான மாளிகையில் வெள்ளை வெளேரென்று உடுப்பு போட்டுக்கொண்டு சம்மனசுக்களை ஒக்க வரிசையில் உட்கார்ந்திருக்கும் 12 பல நாட்டு குருமார்களுக்கு, கலை நுணுக்கத்தோடு கூடிய தங்க மூக்கு சொம்பிலிருந்து தண்ணீர் ஊற்றி டர்க்கித்துவாலையால் கால் கழுவித்துடைக்கும் பொறுப்பு அவரது! ஆனால் இந்த மனுஷனோ “இருங்கப்பா இதவிட முக்கியமான ஒரு இடத்துக்கு நான் கால் கழுவப்போகணும்”ணு  துண்ட ஒதறித் தோளுள போட்டுகிட்டு இளைஞர்கள் சிறைக்கில்ல கெளம்பிட்டாரு! அங்க பொம்பளைக ஆம்பளைகண்ணு அவுரு பாக்குல.சகட்டுமேனிக்கு எல்லார் காலையும் கழுவி முத்தம் குடுத்தாரு.
“நான் மக்களை ஆளுவதற்கு வரல,அவுங்களுக்கு தொண்டு செய்யறதுக்காக மட்டுமே இவ்வளவோ பெரிய பதவியில வத்திகான்ல உக்காந்திருக்கேன்.” என்று சொல்லாமல் சொல்லிய எங்கள் அருமைப் பாப்பானவர் ஃபிரான்சீஸ் பதவிக்கு பெருமை சேர்க்கும் ஒரு சீராளன்!
 போப் ஃபிரான்சீஸ் சவாலான இந்த காரியத்தை செய்வதற்கு பல வருடங்கள் முன்னால் ஒரு குரு இதே வேதாந்தத்தோடு இதே காரியத்தை செய்தபோது,
“பொம்பளைங்களுக்கு ஒரு சாமியார் கால் கழுவுவதா?” ஊரே அல்லோகலப்பட்டது! காரித்துப்பியவர் மக்கள் மட்டுமல்ல சில பல குரு மரபினரும் இதில் கூட்டு! மேலிடம் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தது. முறையாக அவருக்கு வர வேண்டிய பெரிய பதவி அனந்த காலத்திற்கும் தள்ளிப்போடப்பட்டது.
இந்த அருமை மனிதர் என் மாமா மெத்தப் படித்தவர். ஆனாலும் போப் ஃபிரான்சீஸ் போலவே
“நர சேவை நாராயணன் சேவை” என்பதில் உறுதியானவர்.”  “ நீ உன்னை அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு செய்”! இறைமகனின் ஒற்றைக் கட்டளையின் அடிமை!
சின்னப்பையனாக கிராமத்தில் திரியும் போதே தபசு காலத்தில்  ஒவ்வொரு வீட்டு பெரியவர்களும் ஒவ்வொரு வியாழனும் முறை போட்டு கொண்டாடும் கால் கழுவும் திருநாளை இவன் பார்த்திருக்கின்றான்..
இந்தக் கால் கழுவும் சடங்கு குருக்களுக்கே உரித்தானது இது எப்படி உங்கள் ஊரில் குடும்ப மக்களுடைய சடங்காயிற்று? உங்கள் மனசுக்குள் கேள்வி ஒன்று எழலாம். முந்தைய முந்தைய சந்ததியில் சாமியார் இல்லாத ஒரு காடாம்பரத்தில் இவர்கள் வாழ்ந்திருக்கலாம். சாமியார் இந்த தவசு காலத்துல சிலுவப்பாதைய தவுத்து வேற என்ன பண்ணச்சொல்லாம்ணு நெனச்சு பாத்து ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வாரம் கால் கழுவுங்கண்ணு சொல்லியிருக்கலாம். கோயில்கள் பக்கத்தில் வந்தப்பறமும் இதை செய்யாவிட்டால் சாமி குத்தம் எதுவும் ஆயிடுமோ என்ற அடுத்த  தலை முறையார். அதற்குப்பின்னால் “இது எங்களுடைய மூதாதையர் பழக்கம்” எனப் பெருமையாக பின் வந்த சந்ததி. இப்படித்தான் இருக்கலாம் என்பது என் யூகம்.
இந்த கிராமத்தின் கால் கழுவும் திரு நாளில் கால்கழுவப்படுவது அந்த தெருவில் இருக்கும் பையன்களுடைய ஏகபோக உரிமை. பெண்களைப்பற்றி யாரும் நினைப்பது கூட கிடையாது. மற்ற சாதி சனம் வேடிக்கை பார்க்க மட்டுமே சேர்த்தி. வருடந் தவறாமல் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமது பையனுக்குள் சின்ன சின்னதாக பல கேள்விகள்.
அந்தப்பையன் ஒரு நாள் பங்கு சாமியார் ஆனபோது ஒரு யோசனை அவருக்குள். “இந்த பெரிய வியாழனன்று நம் பங்கில் 6 பெண்களுக்கும் 6 ஆண்களுக்கும் நான் கால்கழுவுவேன். கோயிலின் முக்காலே மூன்று பகுதி பெண்கள்தானே” என முடிவெடுத்தார். அந்த  துணிகர செயல்தான் அந்த ஊர் அல்லோகலத்தின் காரண கர்த்தா!
கால் கழுவுந் திருநாள் ஆன்மீகத்தையும் லௌகீகத்தை தன்னுள் சேர்த்தடக்கிய விழா!.
சின்னதுகளாகிய எங்களுக்கு தபசு காலம் என்ற 40 நாள் பாலைவனத்தில் அது ஒரு பாலைவனச்சோலை.7 வாரத்தின் 7 வெள்ளிக் கிழமையும் விரதம், (காலை சாப்பாடு கிடையாது அவ்வளவேதான்!) 40 நாட்களுக்கும் சைவ சாப்பாடு, தினப்படி காலைபூசை முடிந்தவுடன் சின்ன சிலுவைப்பாதை வெள்ளிக்கிழமைகளில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் செல்லும் பெரிய சிலுவைப்பாதை அதுவும் விரத வயிற்றோடு. சேசுவின் பாடுகளை தியானிக்கையில் வயிறு அது பாட்டுக்கு பாடாய்ப்படுத்தும். எடங்கண்ணியில் எங்கள் வீட்டு முறை 4 வது வாரம். பொதங்கிழம கருக்கலங்காட்டியும் மாட்டு வண்டி வீட்டுக்கு வந்துடுச்சுண்ணா எங்களை யாரும் கையில புடிக்கமுடியாது.ரெண்டு நா ஸ்கூலுக்கு லீவு,  போறவழியிலமதனத்தூர்பொதார்களிலசொச்சம் மிச்சம்எலந்தபழங்கஉட்டு கிட்டு பொயிருக்காண்ணு பீராஞ்சுபாக்கலாம்.எடங்கண்ணி நண்பிகளோடு கொளைத்திலகும்மாளம்போடலாம். அழிஞ்சிப்பழங்க பறிக்கலாம். நேரங்கெடச்சா ரெண்டு ஆட்டம் சொங்கு கூட அம்மா கண்ணில படாம போடலாம்.(தவசு காலத்தில இதெல்லாங்கூட ஒறுத்தல்அம்மா கணக்கில்!)
எடங்கண்ணி போய்ச்சேரயில சாங்காலம் ஆயிரும்.
கோயில்ல ஜெபம் சொல்லி முடிச்சிட்டு அவங்கவங்க வீட்டுக்குப்போய் சாப்பிட்டு சின்னாச்சிகளும் அத்தைகளுமா அருவாமணைகள தூக்கிகிட்டு வீட்டுக்கு வந்துருவாங்க. காய்கறிக அம்பாரமா கூடத்துல இருக்கும்.300 பேருக்கு விருந்து; யேசுவோட பன்னெண்டு அப்போஸ்தலர்கள குறிக்கிறமாதிரி பன்னெண்டு தினுசு காய்கறி நாளைக்கி ரெடியாவுணுமில்ல. காய்கறிகள தண்ணியில அலசி மூங்கி தட்டு கூடைகள்ள தண்ணியெல்லாம் வடியிறத்துக்கு வச்சுடுவாங்க. சின்னதுகளாகிய எங்களுக்கு காலம்பரகாட்டியும் ஊற வச்சிருக்க மொச்சகொட்ட பிதுக்குறதுதான்வேல, நட்ட நடுவுல ஒரு சட்டிய வச்சுகிட்டு கட்டவிரலுகும் ஆள்காட்டிக்கும் நடுவுல கொட்டய வச்சு பிதுக்கினா அந்த பருப்பு எவ்வளோ ஒயரத்துக்குப்போய் சட்டிக்குள்ள உழுதுங்கிறதில  ஒரே போட்டிதான்! வெள்ள வெளேர்னு இருக்க  அந்த மொச்சபருப்பும் முருங்கக் காயும் போட்டு சோம்பு சின்ன வெங்காயம் பச்சமொளகா தாளிச்சு அம்மா பண்ணுற கூட்டு........ம்ம்ம்ம்! பூசணிக்காய் பறங்கிக்காய் இதுகளை பொளக்கறத்துக்குத்தான் ஆம்பள ஆளுக வருவாங்க பரங்கிக்காய் வெட்டும்போது எங்க ஆள்ல ஒருத்த உள்ள இருக்கறத எடுத்துக்கிறத்துக்கிண்ணே தயாரா நிப்போம். பறங்கி விதைகள் சிக்குவலமாதிரி இருக்கும் சத சத சதைக்குள்ள மாட்டிகிட்டு அவதி பட்டுப்போய் கெடக்கும். அதையெல்லாம் அலசிபுடிச்சி வழுக்கிகிட்டு போற கொட்டைகள கடவா பல்லுல செங்குத்தா வச்சு அமுக்கி பறங்கிப்பருப்ப காய்கறி அரியிற அம்ச அடங்குறமுட்டும் தின்னுகிட்டேதான் கெடப்போம்.
காலையில அம்மாவும் அப்பாவும் விரதம். நாங்கள்ளாம் விதி விலக்கு. தோட்டத்து பக்கத்துல ஆம்ளயாளுக நெட்டுக்கு குழி வெட்டி அடுப்பு ரெடி பண்ணிடுவாங்க. சோறு பருப்பெல்லாம் இந்த அடுப்புகள்ளதான். உள்ளயும் வெறவு அடுப்புதான் இங்க வறுவல் கூட்டு பாயசமெல்லாம் சின்னாச்சிகள் அத்தைகள் அம்மாவோட சேர்ந்து ரெடி பண்ணுவாங்க.
சரியா 12 மணிக்கெல்லாம் 12 அப்போஸ்தல பையங்க பாப்பா கொளத்துல குளிச்சிட்டு நல்ல சட்ட டவுசர் போட்டுபவுடர் அடிச்சு ரெடியா நிப்பானுக. அப்பாவும் குளிச்சிட்டு கோயிலுக்கு
வந்திருப்பாங்க. இதுக்கு முன்னாடி நாங்க பாப்பாகொளத்து மேக்கித்திக்கரையில இருக்க புள்ளியார் கோயில் நந்தவனத்திலேர்ந்து அரளி, செம்பருத்தி ஸ்வர்ண புஷ்பம்ணு பறிச்சிகிட்டு வந்து ஒரு தட்டில லேசா பிச்சுப்போட்டுட்டு வேண்டிய  தண்ணி ஸ்டூலு மணக்கட்டை எல்லாத்தையும் தயார்பண்ணிடுவோம் ஒரு சின்ன ஜெபம் சொன்னவொடனே இந்த சடங்க ஆரம்பிப்பாங்க. ஒவ்வொரு பையனா ஸ்டூல்ல வந்து உக்காந்து மணக்கட்டையில கால வச்சிக்கணும். சரியான அறுந்த வாலு கூட அண்ணக்கி கும்புட்ட கைய எடுக்காம பயபக்தியா இந்தப்பூனையும் பால் குடிக்குமாண்ணு உக்காந்திருக்கறத பாத்தா சிரிப்பு வந்துடும். அப்பா முழங்கால் போட்டுகிட்டு செம்பிலேர்ந்து தண்ணிய காலுல ஊத்தி அவுங்க துண்டால தொடைப்பாங்க. அப்புறம் பூ தூவி கால்ல முத்தம் குடுப்பாங்க. இத இவங்க பண்ணும் போது  கோயில்ல இருக்கவங்க எல்லாம் சேந்து இதுக்குண்ணு பாடுற பாட்ட( சீர் பெருகும் நரேன் இறைவன் நமதேசு சீஷர்கள் முன் கால் கழுவவும்) பாடுவோம். ஆனா இந்த பாட்ட எங்கயோ தொலச்சுபுட்டோம்.யாராவதுஞாபகம் வச்சுருக்காங்களாண்ணு பாத்தா ஒடஞ்ச ரெகார்டு மாதிரி இந்த வரியதான் பாடுறாங்க. கால் கழுவிய தண்ணிரை  கோயிலில் எல்லோருக்கும் காட்டுவார்கள் .தொட்டு சிலுவை போட்டுக்கொண்டு பூவோடு இருக்கும் தண்ணீரை பாப்பா கொளத்தில் ஊற்றிவிடுவோம். பெரிய கோயில்களில் கால் கழுவிக் கொள்பவர்களுக்கு வண்ணக் காகிதத்தில் சுற்றிய பரிசு கொடுப்பார்கள். ஆனால் நம் அப்போஸ்தலர்களுக்கோ ராஜாங்க வரவேற்புடன்  பெரும் விருந்தல்லவா காத்து நிற்கிறது!!
 அப்பா பன்னெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவாங்க. உள்ள நொழயும் போதே ஒரு ஈரத்துண்டை அப்பாவிடம் குடுப்பார்கள். கூடத்தின் நடுவில் ஒரு பாதை விட்டு இரெண்டு பக்கமும்  தலை வாழை இலை போட்டிருப்பார்கள். ஆனால் சாப்பாடு ஒன்றும் இருக்காது எல்லோரும் உட்கார்ந்தவுடன் இலைகளில் சாதம் போட்டு கடைந்த பருப்பும் நெய்யும் ஊற்றுவார்கள். அதற்குள் கூடத்து நடுவில்  அப்பா முழங்காலில் இருந்து துண்டை விரித்து பிச்சை கேட்பார்கள். பிசைந்து வைத்திருக்கும் சாதத்தை ஒவ்வொருவரிடமிருந்தும் முழங்காலிலேயே நகர்ந்து போய் வாங்குவார்கள்.  சில பசங்களுக்கு இதைபண்ணும் போது அழுகையை அடக்கமுடியாது. ஞானத்தை தனியாகப்பிட்டு ஞானஉபதேச வகுப்பு ஒன்று நடத்தாமலேயே ஊரின் சிறந்த பெரிய தலைகள் சிறுவர்களின் பாதங்களைக்கழுவுவதும் முழங்காலில் இருந்து பிச்சை எடுப்பதும்  “தலைவனாய் இருக்கிறவன் முதலில் வேலைக்காரனாய் இருக்க வேண்டும்” என்ற கடவுளின் உயரிய வாக்குக்கு உதாரணம் கொடுத்து மனதுக்குள் மதிப்பீடுகளை பதியச் செய்வது அரியதொரு செயல் இல்லையா?!! 
இந்த சடங்கு முடிந்த பின்தான் விருந்து ஆரம்பிக்கும்.
பிச்சையாக வாங்கின அந்த சாதத்தை பந்தியிலிருக்கும் எல்லா இலைகளிலும் பிரசாதமாக வைப்பார்கள். பன்னிரெண்டு பேரும் சாப்பிட்ட இலைகளைத் தனியாக கூடையில் எடுத்துக்கொண்டு போய் எருக்குழியில் ஒரு பள்ளம் தோண்டி போட்டுமூடிவிடுவார்கள். கூடவே கடவுளுக்கு ஒரு பெட்டிஷனும் “அடுத்த வருஷ வெளச்சலும் அமோகமா இருக்குணும் சாமி”
இரவு தெரு ஜனங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் விருந்து! மீதியான எல்லா அயிட்டங்களையும் பலா பட்டரையாக் கலந்து அரை அண்டாவில் கொதிக்கவிட்டு அதோடு சாதத்தைப்போட்டு பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக பழூர் குளத்தில் பறித்த தாமரை இலைகளில் அள்ளிப்போடுவார்கள். அமிர்தம்....! அது அமிர்தமேதான்........
பல தலைமுறைகள் செய்து வந்த இந்த  அருமையான பண்டிகை நடுவிலே தொலைந்து போனது. கிராமத்தை விட்டு நகர் நோக்கிய படையெடுப்பு ஒன்று என்றால் அங்கு இருப்பவர்களுக்கும் இதில் ஈடுபாடு இல்லாமல் போயிற்று.

மாமாவின் ஞாபகம் மட்டுமல்ல அவர்களுடைய எடங்கண்ணிக் கனவை நிறைவேற்றும் வகையிலும் நாங்கள் தபசு காலத்தின் 5வது வியாழன் இதை சில வருடங்களாக செய்ய ஆரம்பித்திருக்கிறோம். மாமா ஆசைப்பட்ட மாதிரியே ஆண் பெண் பாகுபாடின்றி சாதி சமய வேறுபாடின்றி அழகான ஒரு கூட்டுக்குடும்பத்திற்கு இந்த பண்டிகையை அர்ப்பணம் செய்கிறோம்.

Wednesday, 11 March 2015

மார்க்கீசியமும் சங்கம் சரணம் கச்சாமியும் சங்கமம் கொண்டால்!

கம்யூனிசமும்,புத்தமும் கலந்து உறவாடி இந்திய பிரஞ்சு கலாச்சாரங்களும் கை கோர்த்து களிகூறும் இடம் ஒன்று யான் கண்டு மகிழல் வேண்டும்என ஒரு ஆசையோ ஏக்கமோ அல்லது க்யூரியாசிட்டி  உங்களுக்குள் இருந்தால்………..
லாவோஸ் செல்லுங்கள்ஒரு சிறிய கம்யூனிஸ்ட் நாடு. தாய்லாந்திற்கு அடுத்த வீடு!
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டு நாட்டில் இவ்வளவு புத்த மடங்களா? ஊர் முழுவதும் ஆண் பெண்  துறவிகள் நீக்கமற நிறைந்திருக்கமுடியுமா என்ன?
அப்படியானால் இது கம்யூனிச புத்த நாடோ?
அப்படியும் வரையறுக்க முடியவில்லை. இந்த அழகான லாவோஸ் நாடு கம்யூனிச புத்த மற்றும் இந்திய பிரஞ்சு கலாச்சாரங்களின் புதினமான குழைவு!

நாங்கள் சென்ற இடம் லுவாங்பிரபாங். லாவோஸின் இந்த பழைய தலை நகரை யுனஸ்கோ உலக கலாச்சார மையங்களுள் ஒன்றாகத் தத்தெடுத்துள்ளது!
நமது கங்கை பிரம்மபுத்திரா போலவே இங்கு ஓடும் மீகாங்க் நதிக்கும் இமயமலைதான் தாய் வீடு.அகண்ட காவேரிபோல் விரிந்து பரந்து கரை கொள்ளாமல் நிற்கிறாள்! லுவாங்பிரபாங்கில் மீகாங் நதியின் மேல் போக்கு வரத்து வெகு பிரபலம்! படகுகள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே மிதக்கும் பெட்ரோல் ஸ்டேஷன்களும் படகுகளைக் கூடவே துரத்திச்செல்கின்றன....... தேவையான அளவுக்கு பெட்ரோலை சிந்தாமல் சிதறாமல் படகுகளுக்கு நிரப்பிக்கொடுக்கின்றன!

 மீக்காங்கின் கரையோர விசாலமான படித்துறைகள் நிழல் தரும்  மரங்களோடு நம் காவேரிப்படித்துறையைi ஞாபகப்படுத்துகின்றன.ஆனால் மொட்டைத் தலையோடு காவி கட்டி நீந்திக்கொண்டும்,மேல்துண்டு சில்லென்ற காற்றில் பறக்க படிகளில் விளையாடிக்கொண்டும், சவகாசமாக படிகளில் உட்கார்ந்து கொண்டு தம் பிடித்துக் கொண்டும் இருந்த இளம் சந்நியாசிகளின் கூட்டம்ஆகா நாம்  திருச்சியின் காவேரிப் படித்துறைகளில்இல்லைஎன திட்டவட்டமாகக்  நமக்குத் தெரிவித்தன.

இந்த இளம் சந்நியாசிகளைப்பற்றிய விவரம் கேட்கையில் சிறு வயதிலேயே குழந்தைகள் சந்நியாசிகளாய் ஆவதை பெற்றோர்கள் பெரும் வரப்பிரசாதமாகவே கருதுவார்களாம்
 இந்த இளம்சந்நியாசிகள் மடத்தின் 10 கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதுமானதாம். ஆனால் முழுத் துறவியர் கடைப்பிடிக்கவேண்டியவை மிகக் கடினமான 250 கட்டளைகள் ஆகும். எது எப்படி இருந்தாலும் தம்மடிக்க எந்த கட்டளையும் விதி விலக்கு அளிக்காது என்றே நான் நினைக்கிறேன். “இந்தபடித்துறை தம்மடி சுகவாசிகள்மடத்தலைவருக்கு டிமிக்கி கொடுப்பவர்கள்தான் என்பது என் யூகம்!! 

நாங்கள் இருந்த விருந்தினர் விடுதிக்கு எதிர்த்தாற் போல் ஒரு  புத்த மடம்; மடத்தின் பெயர் நம்ம நீடாமங்கலம் சூரமங்கலம் போல வஜ்ரமங்கலம்! காலை நான்கு மணிக்கெல்லாம் மடத்தின் கண்டாமணிகள் ஒலிக்கின்றன.இரண்டு மணி நேர ஓதுதல் ஆறு மணிக்கு அடிக்கும் ஒற்றை மணியோடு முடிகிறது. முடிந்த கையோடு வரிசை வைத்து வரும் எறும்புகள் போல கையில் திருஓட்டோடு புத்த சாதுக்கள் மடத்தைவிட்டு வெளியே வந்து தெருவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறேன். லேசாக மழை தூறுகிறது. தெருவில் நடமாட்டமே இல்லை. யாரும் சாப்பாடு கொடுக்காமலேயே இருந்துவிடுவார்களோ? சிறியதொரு கவலை.அந்த மழையிலேயே அவர்கள் காத்துக்கொண்டு  நிற்கிறார்கள். மனது தவிக்கிறது. அப்போது ஓட்டமும் நடையுமாக ஒருபெண்மணி பெரிய பாத்திரத்தோடு வருகிறார். அப்படியே நடுத்தெருவில் மண்டியிட்டு துறவிகளை வணங்கி சாப்பாட்டை திரு ஓடுகளில் நிரப்புகிறார். துறவிகள் அடுத்த தெரு நோக்கிச் செல்கிறார்கள் லூவாங்பிரபாங்கில் உள்ள எல்லா  புத்த துறவிகளுக்கு உணவளிப்பது அந்த ஊர் மக்களின் பொறுப்பாம். அதை ஒரு தவமாக, புண்ணியமாக பெரும் பாக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். இன்னொரு அதிசயமான விஷயம் இங்குள்ள புத்த சாதுக்கள் பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள். புத்த மதத்தின் ஒரு சாரார் அசைவர்களாம்!
சாதுக்கள் தெருக்களில் கிடைத்த சாப்பாட்டை காலை பதினொரு  மணி அளவில் சாப்பிடுகிறார்கள். 24 மணி நேரங்கொண்ட அந்த ஒரு நாளைக்கு அந்த ஒரு வேளைதான் அவர்களுக்கு சாப்பாடு!  “ஆடிக்கொருதரம் அமாவாசைகொருதரம்” .ஒரு வேளை சாப்பிடாவிட்டால்இன்று நான் விரதமாக்கும்என பெரியதொரு தியாகம் செய்ததுபோல் பீத்திக்கொள்ளும்  நாம் என்னமாதிரியான அறிவிலிகள்!

நின்று நிதானிக்கிறேன்........ எவ்வளவு இருக்கிறது என் வாழ்வில்.... ஆனால் இல்லாத ஒன்றுக்காக மனம் ஏங்கிப்போய் நிற்பது ஏன்? ஏன் என் ஆசைகளுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது? ஏன் மனது அநாவசியமாய் தவிக்கிறது? ஆத்திரம் கொள்கிறது...? பொறாமைப்படுகிறது? கவலைப்படுகிறது? மெத்தப்படித்த இந்த மேதைகள் திருஓடுகளை எதற்காக கையில் எடுக்கவேண்டும்ஏன் என்ற கேள்வியே இல்லாமல் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என யோகிகளாய், பற்றற்றவர்களாய் இந்த சாதுக்களால் எப்படி இது சாத்தியமாகிறது? மனமெனும் குரங்கை அவர்கள் எந்த மாதிரியான கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் இது சாத்தியப்படுவதற்கு? பெரியதொரு பாடம் அன்று எனக்குள்!
கம்யூனிஸ்ட் ஆட்சி இங்கே என்பதற்கு அத்தாட்சியாக ஆங்காங்கு ஒரு சில சிவப்புக்கொடிகளை மட்டுமே நான் கண்டேன். நான் பயணியாய் இருப்பததால் இந்நிலமையோ? எனக்குத்தெரியவில்லை.ஆனால் புத்த வேதாந்தம் இன்றைக்கும் மனதை நிறைத்து நிற்பதுதான் லாவோஸ் எனக்குத் தந்து கொண்டிருக்கும் பெருங்கொடை
தங்கியிருந்த ஒரு நாள் இந்தியாவைக் நாங்கள் லாவோசில் கண்டோம். அந்த ஊரில் இருக்கும் ஒற்றை நாடக அரங்கில்  நடக்கவிருந்த நாடகம் ராமாயணத்தின் ஒரு பகுதி......! சீதை பொன் மானுக்கு ஆசைப்படும் பகுதி.....!! தமிழ் நாட்டின் தெருக்கூத்து போல நடிகர்கள் நடுவில் ஏகத்துக்கும் இழுத்து இழுத்துப்பாடித்தீர்க்கிறார்கள்! இந்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் மிகவும் மென்மையாக வாசிக்கப்படுகின்றன. நம்மூர் போல உச்சஸ்தாயிக்குப்போய்சபாஷ்மற்றும்அப்ளாஸ் வாங்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை போலும். சப்பென்று தொடங்கின மேனிக்கே முடித்து விடுகிறார்கள். நடனமும் அதே மென்மைதான். அழுத்தமான அடவுகளில், வேகமான தில்லானாக்களில் சுகம் கண்ட பரத நாட்டிய ரசிகர்கள்  நாம்  நேரம் செல்லச்செல்ல அசந்து போய்விடுகிறோம்!
ஏப்ரல் 14 ந்தேதி இந்தியாவின் பல பகுதிகளில் வருஷப்பிறப்பு கொண்டாடுவது போல பல தென் கிழக்கு ஆசிய நாடுகளும் அதை சொங்க்ரான் என்ற பெயரில்  கொண்டாடுகிறார்கள். வருடம் ஒருமுறை கோயில்களின் புத்தர் சிலையை அன்றுதான் கழுவுகிறார்கள். கழுவப்படும் அந்த தண்ணீர் தீர்த்தமாகக் கருதப்படுகிறது. சொங்க்ரான், நம்மூர் ஹோலிமாதிரியே.ஆனால் கலர் பொடி எதையும் தொடாமல் சுகாதார சுத்தமாக பச்சைத்தண்ணீரை போகிறவர்கள் வருகிறவர்கள் மேலெல்லாம் வாரி அடிக்கிறார்கள் குதுகலிக்கிறார்கள். இதில் ஆண் பெண் உள் நாட்டார் வெளி நாட்டார் என்ற பாகுபாடு ஒன்றும் இல்லை. எதிர்பாராத இந்தத் தெருக்குளியலில்  நாங்களும் மாட்டிக்கொண்டு சிறு அதிர்ச்சியோடு மகிழ்ந்தோம்.

சாப்பிடும் பல பொருட்கள் அவர்கள் ஒரு காலத்தில் பிரஞ்சு ஆதினத்தில் இருந்திருக்கிறார்கள் எனப்படம் போட்டு நமக்குக் காட்டுகிறது. தெருக்களில் பிரஞ்சு ரொட்டியானபகெட்டைமானாவாரியாக விற்கிறார்கள். அதைத்தவிர கேரட் கேக்குகள் ஆப்பிள் கேக்குகள் வாழைப்பழ கேக்குகள் என இன்னும் பல கேக்குகள் பிரஞ்சு நாட்டின் கேக் செய்யும் கலைக்கு கட்டியம் கூறி கவர்ந்திழுக்கின்றன. இங்கே காபி கப்பில் கொடுப்பதில்லை. பிரஞ்சு காபியைப்போல (இப்போது பிரான்சில் இந்த காபி கிடைக்கிறதா என்பதை யான் அறியேன்!) 
கண்ணாடித்தம்ளர்களின் அடியில் கெட்டியான மில்க் மெய்டு போன்ற பால் உட்கார்ந்திருக்க அதற்கு மேல் கெட்டித் டிகாக்ஷன் ஊற்றித் தருகிறார்கள். லேசாகக் கலக்கி கலக்கி மெள்ள மெள்ள சுவைத்து இதை அருந்த வேண்டுமாம். மீகாங் நதிக்கரையில் அமர்ந்து அதை மெள்ள மெள்ளவே ருசித்தோம்!

கடைசியாக ஒரு விஷயம். நம்மூர் போலவே புளியம்பழங்கள் இங்கும் நிறையவே! ஒரே ஒரு வித்தியாசம் புளியம் பழம் புளிக்கும் என்ற நம் உரைச்சொல்லுக்கு எதிர்மாறாக இங்குள்ள புளியம்பழங்கள் ஒரே இனிப்பு.
படகுப்பயணத்தின் போதெல்லாம் இந்த புளியம்பழங்கள்விக்டோரியா ப்ளம் பழங்கள் சுவையோடு அருமையான தீனியாய் இருந்தது.


வெளி நாடு போய் இந்தியா திரும்புபவர்கள் நிறைய சாக்லெட் வாங்கி வருவார்கள். நானோ பை நிறைய்... புளியம்பழங்கள் கொண்டு வந்தேன்! “யப்பா இது ரொம்ப சூடு.... ரத்தத்தைக் சுண்டிவிடும்....... தப்பா எடுத்துக்காதிங்கஎன்றவர்களைப்பற்றி பற்றி நான் கவலைப்படவுமில்லை தப்பாகவும் எடுத்துக்கொள்ளவுமில்லை!அவர்கள் நஷ்டம் எனக்கு லாபம்தானே!!