Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 11 March 2015

மார்க்கீசியமும் சங்கம் சரணம் கச்சாமியும் சங்கமம் கொண்டால்!

கம்யூனிசமும்,புத்தமும் கலந்து உறவாடி இந்திய பிரஞ்சு கலாச்சாரங்களும் கை கோர்த்து களிகூறும் இடம் ஒன்று யான் கண்டு மகிழல் வேண்டும்என ஒரு ஆசையோ ஏக்கமோ அல்லது க்யூரியாசிட்டி  உங்களுக்குள் இருந்தால்………..
லாவோஸ் செல்லுங்கள்ஒரு சிறிய கம்யூனிஸ்ட் நாடு. தாய்லாந்திற்கு அடுத்த வீடு!
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டு நாட்டில் இவ்வளவு புத்த மடங்களா? ஊர் முழுவதும் ஆண் பெண்  துறவிகள் நீக்கமற நிறைந்திருக்கமுடியுமா என்ன?
அப்படியானால் இது கம்யூனிச புத்த நாடோ?
அப்படியும் வரையறுக்க முடியவில்லை. இந்த அழகான லாவோஸ் நாடு கம்யூனிச புத்த மற்றும் இந்திய பிரஞ்சு கலாச்சாரங்களின் புதினமான குழைவு!

நாங்கள் சென்ற இடம் லுவாங்பிரபாங். லாவோஸின் இந்த பழைய தலை நகரை யுனஸ்கோ உலக கலாச்சார மையங்களுள் ஒன்றாகத் தத்தெடுத்துள்ளது!
நமது கங்கை பிரம்மபுத்திரா போலவே இங்கு ஓடும் மீகாங்க் நதிக்கும் இமயமலைதான் தாய் வீடு.அகண்ட காவேரிபோல் விரிந்து பரந்து கரை கொள்ளாமல் நிற்கிறாள்! லுவாங்பிரபாங்கில் மீகாங் நதியின் மேல் போக்கு வரத்து வெகு பிரபலம்! படகுகள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே மிதக்கும் பெட்ரோல் ஸ்டேஷன்களும் படகுகளைக் கூடவே துரத்திச்செல்கின்றன....... தேவையான அளவுக்கு பெட்ரோலை சிந்தாமல் சிதறாமல் படகுகளுக்கு நிரப்பிக்கொடுக்கின்றன!

 மீக்காங்கின் கரையோர விசாலமான படித்துறைகள் நிழல் தரும்  மரங்களோடு நம் காவேரிப்படித்துறையைi ஞாபகப்படுத்துகின்றன.ஆனால் மொட்டைத் தலையோடு காவி கட்டி நீந்திக்கொண்டும்,மேல்துண்டு சில்லென்ற காற்றில் பறக்க படிகளில் விளையாடிக்கொண்டும், சவகாசமாக படிகளில் உட்கார்ந்து கொண்டு தம் பிடித்துக் கொண்டும் இருந்த இளம் சந்நியாசிகளின் கூட்டம்ஆகா நாம்  திருச்சியின் காவேரிப் படித்துறைகளில்இல்லைஎன திட்டவட்டமாகக்  நமக்குத் தெரிவித்தன.

இந்த இளம் சந்நியாசிகளைப்பற்றிய விவரம் கேட்கையில் சிறு வயதிலேயே குழந்தைகள் சந்நியாசிகளாய் ஆவதை பெற்றோர்கள் பெரும் வரப்பிரசாதமாகவே கருதுவார்களாம்
 இந்த இளம்சந்நியாசிகள் மடத்தின் 10 கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதுமானதாம். ஆனால் முழுத் துறவியர் கடைப்பிடிக்கவேண்டியவை மிகக் கடினமான 250 கட்டளைகள் ஆகும். எது எப்படி இருந்தாலும் தம்மடிக்க எந்த கட்டளையும் விதி விலக்கு அளிக்காது என்றே நான் நினைக்கிறேன். “இந்தபடித்துறை தம்மடி சுகவாசிகள்மடத்தலைவருக்கு டிமிக்கி கொடுப்பவர்கள்தான் என்பது என் யூகம்!! 

நாங்கள் இருந்த விருந்தினர் விடுதிக்கு எதிர்த்தாற் போல் ஒரு  புத்த மடம்; மடத்தின் பெயர் நம்ம நீடாமங்கலம் சூரமங்கலம் போல வஜ்ரமங்கலம்! காலை நான்கு மணிக்கெல்லாம் மடத்தின் கண்டாமணிகள் ஒலிக்கின்றன.இரண்டு மணி நேர ஓதுதல் ஆறு மணிக்கு அடிக்கும் ஒற்றை மணியோடு முடிகிறது. முடிந்த கையோடு வரிசை வைத்து வரும் எறும்புகள் போல கையில் திருஓட்டோடு புத்த சாதுக்கள் மடத்தைவிட்டு வெளியே வந்து தெருவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறேன். லேசாக மழை தூறுகிறது. தெருவில் நடமாட்டமே இல்லை. யாரும் சாப்பாடு கொடுக்காமலேயே இருந்துவிடுவார்களோ? சிறியதொரு கவலை.அந்த மழையிலேயே அவர்கள் காத்துக்கொண்டு  நிற்கிறார்கள். மனது தவிக்கிறது. அப்போது ஓட்டமும் நடையுமாக ஒருபெண்மணி பெரிய பாத்திரத்தோடு வருகிறார். அப்படியே நடுத்தெருவில் மண்டியிட்டு துறவிகளை வணங்கி சாப்பாட்டை திரு ஓடுகளில் நிரப்புகிறார். துறவிகள் அடுத்த தெரு நோக்கிச் செல்கிறார்கள் லூவாங்பிரபாங்கில் உள்ள எல்லா  புத்த துறவிகளுக்கு உணவளிப்பது அந்த ஊர் மக்களின் பொறுப்பாம். அதை ஒரு தவமாக, புண்ணியமாக பெரும் பாக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். இன்னொரு அதிசயமான விஷயம் இங்குள்ள புத்த சாதுக்கள் பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள். புத்த மதத்தின் ஒரு சாரார் அசைவர்களாம்!
சாதுக்கள் தெருக்களில் கிடைத்த சாப்பாட்டை காலை பதினொரு  மணி அளவில் சாப்பிடுகிறார்கள். 24 மணி நேரங்கொண்ட அந்த ஒரு நாளைக்கு அந்த ஒரு வேளைதான் அவர்களுக்கு சாப்பாடு!  “ஆடிக்கொருதரம் அமாவாசைகொருதரம்” .ஒரு வேளை சாப்பிடாவிட்டால்இன்று நான் விரதமாக்கும்என பெரியதொரு தியாகம் செய்ததுபோல் பீத்திக்கொள்ளும்  நாம் என்னமாதிரியான அறிவிலிகள்!

நின்று நிதானிக்கிறேன்........ எவ்வளவு இருக்கிறது என் வாழ்வில்.... ஆனால் இல்லாத ஒன்றுக்காக மனம் ஏங்கிப்போய் நிற்பது ஏன்? ஏன் என் ஆசைகளுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது? ஏன் மனது அநாவசியமாய் தவிக்கிறது? ஆத்திரம் கொள்கிறது...? பொறாமைப்படுகிறது? கவலைப்படுகிறது? மெத்தப்படித்த இந்த மேதைகள் திருஓடுகளை எதற்காக கையில் எடுக்கவேண்டும்ஏன் என்ற கேள்வியே இல்லாமல் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என யோகிகளாய், பற்றற்றவர்களாய் இந்த சாதுக்களால் எப்படி இது சாத்தியமாகிறது? மனமெனும் குரங்கை அவர்கள் எந்த மாதிரியான கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் இது சாத்தியப்படுவதற்கு? பெரியதொரு பாடம் அன்று எனக்குள்!
கம்யூனிஸ்ட் ஆட்சி இங்கே என்பதற்கு அத்தாட்சியாக ஆங்காங்கு ஒரு சில சிவப்புக்கொடிகளை மட்டுமே நான் கண்டேன். நான் பயணியாய் இருப்பததால் இந்நிலமையோ? எனக்குத்தெரியவில்லை.ஆனால் புத்த வேதாந்தம் இன்றைக்கும் மனதை நிறைத்து நிற்பதுதான் லாவோஸ் எனக்குத் தந்து கொண்டிருக்கும் பெருங்கொடை
தங்கியிருந்த ஒரு நாள் இந்தியாவைக் நாங்கள் லாவோசில் கண்டோம். அந்த ஊரில் இருக்கும் ஒற்றை நாடக அரங்கில்  நடக்கவிருந்த நாடகம் ராமாயணத்தின் ஒரு பகுதி......! சீதை பொன் மானுக்கு ஆசைப்படும் பகுதி.....!! தமிழ் நாட்டின் தெருக்கூத்து போல நடிகர்கள் நடுவில் ஏகத்துக்கும் இழுத்து இழுத்துப்பாடித்தீர்க்கிறார்கள்! இந்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் மிகவும் மென்மையாக வாசிக்கப்படுகின்றன. நம்மூர் போல உச்சஸ்தாயிக்குப்போய்சபாஷ்மற்றும்அப்ளாஸ் வாங்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை போலும். சப்பென்று தொடங்கின மேனிக்கே முடித்து விடுகிறார்கள். நடனமும் அதே மென்மைதான். அழுத்தமான அடவுகளில், வேகமான தில்லானாக்களில் சுகம் கண்ட பரத நாட்டிய ரசிகர்கள்  நாம்  நேரம் செல்லச்செல்ல அசந்து போய்விடுகிறோம்!
ஏப்ரல் 14 ந்தேதி இந்தியாவின் பல பகுதிகளில் வருஷப்பிறப்பு கொண்டாடுவது போல பல தென் கிழக்கு ஆசிய நாடுகளும் அதை சொங்க்ரான் என்ற பெயரில்  கொண்டாடுகிறார்கள். வருடம் ஒருமுறை கோயில்களின் புத்தர் சிலையை அன்றுதான் கழுவுகிறார்கள். கழுவப்படும் அந்த தண்ணீர் தீர்த்தமாகக் கருதப்படுகிறது. சொங்க்ரான், நம்மூர் ஹோலிமாதிரியே.ஆனால் கலர் பொடி எதையும் தொடாமல் சுகாதார சுத்தமாக பச்சைத்தண்ணீரை போகிறவர்கள் வருகிறவர்கள் மேலெல்லாம் வாரி அடிக்கிறார்கள் குதுகலிக்கிறார்கள். இதில் ஆண் பெண் உள் நாட்டார் வெளி நாட்டார் என்ற பாகுபாடு ஒன்றும் இல்லை. எதிர்பாராத இந்தத் தெருக்குளியலில்  நாங்களும் மாட்டிக்கொண்டு சிறு அதிர்ச்சியோடு மகிழ்ந்தோம்.

சாப்பிடும் பல பொருட்கள் அவர்கள் ஒரு காலத்தில் பிரஞ்சு ஆதினத்தில் இருந்திருக்கிறார்கள் எனப்படம் போட்டு நமக்குக் காட்டுகிறது. தெருக்களில் பிரஞ்சு ரொட்டியானபகெட்டைமானாவாரியாக விற்கிறார்கள். அதைத்தவிர கேரட் கேக்குகள் ஆப்பிள் கேக்குகள் வாழைப்பழ கேக்குகள் என இன்னும் பல கேக்குகள் பிரஞ்சு நாட்டின் கேக் செய்யும் கலைக்கு கட்டியம் கூறி கவர்ந்திழுக்கின்றன. இங்கே காபி கப்பில் கொடுப்பதில்லை. பிரஞ்சு காபியைப்போல (இப்போது பிரான்சில் இந்த காபி கிடைக்கிறதா என்பதை யான் அறியேன்!) 
கண்ணாடித்தம்ளர்களின் அடியில் கெட்டியான மில்க் மெய்டு போன்ற பால் உட்கார்ந்திருக்க அதற்கு மேல் கெட்டித் டிகாக்ஷன் ஊற்றித் தருகிறார்கள். லேசாகக் கலக்கி கலக்கி மெள்ள மெள்ள சுவைத்து இதை அருந்த வேண்டுமாம். மீகாங் நதிக்கரையில் அமர்ந்து அதை மெள்ள மெள்ளவே ருசித்தோம்!

கடைசியாக ஒரு விஷயம். நம்மூர் போலவே புளியம்பழங்கள் இங்கும் நிறையவே! ஒரே ஒரு வித்தியாசம் புளியம் பழம் புளிக்கும் என்ற நம் உரைச்சொல்லுக்கு எதிர்மாறாக இங்குள்ள புளியம்பழங்கள் ஒரே இனிப்பு.
படகுப்பயணத்தின் போதெல்லாம் இந்த புளியம்பழங்கள்விக்டோரியா ப்ளம் பழங்கள் சுவையோடு அருமையான தீனியாய் இருந்தது.


வெளி நாடு போய் இந்தியா திரும்புபவர்கள் நிறைய சாக்லெட் வாங்கி வருவார்கள். நானோ பை நிறைய்... புளியம்பழங்கள் கொண்டு வந்தேன்! “யப்பா இது ரொம்ப சூடு.... ரத்தத்தைக் சுண்டிவிடும்....... தப்பா எடுத்துக்காதிங்கஎன்றவர்களைப்பற்றி பற்றி நான் கவலைப்படவுமில்லை தப்பாகவும் எடுத்துக்கொள்ளவுமில்லை!அவர்கள் நஷ்டம் எனக்கு லாபம்தானே!!

6 comments :

  1. சங்கராந்தி என்றால் சூரியன் ஒரு ராசி கட்டத்தில் இருந்து அடுத்த ராசிக்கு ஊடுருவது என்று பொருள்.

    சொங்க்ரான் என்ற பெயரோடு மகர சங்கராந்தியும் அங்கு ஊடுருவி இருக்கிறது.

    கருத்து ஆழம் அற்புதம்.

    ReplyDelete
  2. என்னம்மா கண்ணு , லாகோஸ் புளியம்பழம் அவ்வளவு இனிக்கிதோ ? அம்மாச்சி வீட்டு குப்பை மேடு புளியம் பழத்தை மறந்து போச்சா ?
    இந்நேரம் லாகோஸ் புளியான்கொட்டை கஸ்தூரி வசம் கொடுத்து இந்நேரம் இந்திய புளியான் செடியாக மாறியிருக்கும் என நினைக்கிறேன் ! அன்புத் தம்பி கபி

    ReplyDelete
  3. சங்க்ராந்தி குறித்த விவரங்களுக்கு நன்றி ராம்! ப்ளாக்கை படிப்பதற்கு சேர்த்தும்
    மாகி

    ReplyDelete
  4. ஆமாம்மா கண்ணு....... வளந்து 6 வருஷமாச்சு...... காய்க்குமோ காய்க்காதோ அந்த லுவாங் பிரபாங் புத்தருக்குத்தான் வெளிச்சம்!!

    ReplyDelete
  5. இனிப்பு புளியம்பழம் சாப்பிடுவதற்காவது
    லாவோஸ் செல்லவேண்டும் , அதோடு நீர் ஓடும் ஆறு தமிழ்நாட்டில் பார்க்கமுடியாது
    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  6. எங்கள் அம்மாச்சி வீட்டிலும் அந்த மாதிரி ஒரு இனிப்பு மரம் இருந்தது தாய்லாந்திலும் ஏகமாக உண்டு. லூவாங்க் பிரபாங்கின் இன்னொரு அருமையான இடம் ஜனங்களே புழங்காத பளிங்குபோல் விழும் சின்ன நீர் வீழ்ச்சி! புளியம் பழத்தோடு இதில் ஒருமணி நேரம்......... சுகமான சுகம் இரட்டிப்புதான்

    ReplyDelete