Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 24 June 2015

பெரும் தியானம் சுலபமாக

எங்கள் பிள்ளைகள் அம்மா தினத்தையும் அப்பா தினத்தையும் கண்டுகொள்வதேயில்லை. உண்மையான பாசத்தை  தள்ளுபடி கொடுத்துகொச்சைப்படுத்தும் வர்த்தக தினம் என்பது அவர்கள் அசைக்கமுடியாத கருத்து
அவர்கள் கருத்தில் எங்களுக்கும் உடன்பாடே.
ஆனால் அரசியல் ரீதியாக வந்த யோக தினத்தைப்பற்றி என்னால் அவ்வாறு  நினைக்கமுடியவில்லை. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இதைக்குறித்து
தந்த தகவல்கள் மகத்தானவை!
என் பங்கிற்கு நானும் கொஞ்சம்.........
அழகான இந்த எழுத்துக்கள் என் வசமான போது மகிழ்ந்தேன், சுவைத்தேன். யான் பெற்ற பேற்றை இவ்வையகமும் பெருக என்ற ஒற்றை நோக்கோடு உங்கள் முன் அதையே சமர்ப்பிக்கிறேன். மெள்ள மெள்ள உள் நோக்கி சென்று சுகம் காணுங்கள்! 

  • தான்என்ற அகங்காரத்தால் நீங்கள் போட்ட முடிச்சை மெல்ல அவிழுங்கள்
  • உங்கள் கோபத்தால் ஏற்பட்ட முடிச்சை அவிழுங்கள்
  • உங்கள் பொறாமையால் ஏற்பட்ட முடிச்சையும் அவிழ்த்துவிடுங்கள்.
  • உஙகள் ஏமாற்றங்களால் ஏற்பட்ட படு முடிச்சுகளை மெல்ல அவிழ்த்துவிடுங்கள்
  • முடிச்சுகள் அவிழ்பட்ட உங்கள் உடம்பு இப்போது லேசாக இருப்பதை மெல்ல மெல்ல உணருங்கள்.
  • இப்போது தளர்வாக அமருங்கள்       
  • நேராக நிமிர்ந்து அமருங்கள்
  • தனிமையாக அமருங்கள்                     
  • இனிமையாக அமருங்கள்
  • தன்னுள் அன்பாக அமருங்கள்            
  • சுகமாக அமருங்கள்
  • சுகந்தமாக அமருங்கள்                           
  • சுகந்தத்திற்குள் அமருங்கள்
  • இலகுவாக அமருங்கள்                         
  • இலேசாக  கண் மூடி அமருங்கள்
  • கண்ணின் மேல் இமை கீழ் இமையோடு உறவாடி நிற்பதை கண்டு  அனுபவியுங்கள்
  • அதிகாலைக் குள‌த்தின் குளிர்ச்சியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து அமர்ந்திருங்கள்
  • இந்த உணர்வினை காலை மாலை 10 நிமிடங்கள் அரும் பெரும்  தியானத்தை அனுபவியுங்கள். 

Thursday, 18 June 2015

அசைவத்தில் மாட்டிக்கொள்ளும் சில சைவங்கள்

அசைவ விருந்து நடக்கும் பல கல்யாணங்களில் சைவக்காரார்கள் பாடு சவலப்பிள்ளைகள் மாதிரிதான்
“ரொம்பப்போனா பத்து பேருதான் சைவ சோத்த தொடுவானுக  ...... கடையிலேர்ந்து வாங்கிக்கிலாம்...... வேல மெனக்கட்டு அதுக்கு ஆள் வக்காதீங்க.... சாப்பாடு மீந்து போய் சீப்பட்டுக்கெடக்கும்.........”
அசைவ கல்யாணங்களில் சைவ விருந்து “ஏனோ தானோ யாருக்கு வந்த விருந்தோ?” தான்.......
அனுபவ ரீதியாகக் கண்டறிந்த உண்மை இது........உங்களில் சிலரும் இது போன்ற அல்லது இதைவிட மோசமான  நிலையை எதிர் கொண்டிருப்பீர்கள்.
ஒரு கலியாணத்திற்குப்போயிருந்தோம்......
“சைவ சாப்பாடா…? மேல போங்க.......” கை கும்பிட்டு எங்களை வரவேற்றார்கள்
சிரிப்பு ஒன்றை உரித்தாக்கிவிட்டு மேலே போனோம் ஹாலைத்தேடி….
அங்கே........சமையல்கட்டுக்குப் பக்கத்தில் இரண்டு மேஜைகள் சைவ சாப்பாட்டுக்கு தயார் ஆகிக் கொண்டிருந்தன! எரிந்து போன ... விறகுகளை வெளியே எடுத்து வைத்ததில் அங்கு புகை மண்டிக்கிடந்தது...... கரண்ட் கட்...வேறே...... கீழே மட்டும் ஜென்செட் சத்தம் கேட்கிறது... ஒண்ணுகுத்தலாய் வெந்த சோறு... ( எனக்குள் ஒரு பெரிய சந்தேகம் கல்யாண சமையலில் சோறு ஒன்று குத்தலாகவோ அரை வேக்காடாகவே இருப்பது ஏன்?)  வேர்க்க விறு விறுக்க அள்ளிப்போட்டுக்கொண்டு வெளியே வந்தோம்.
இன்னொரு கல்யாணம்........ அசைவத்திற்கும் சைவத்திற்கும் சரி சமமாக அழகான ஏற்பாடு... பொண்ணு மாப்பிளையை வாழ்த்திவிட்டு
தெரிந்தவர்களையும் விசாரணை பண்ணிவிட்டு வந்த எங்களுக்கு அந்த அழகான இடம் மட்டுந்தான் காத்திருந்தது... சாப்பாடு..... அது என்றைக்கோ தீர்ந்து போயிருந்தது!!
இன்னொரு கல்யாணம்... எப்போது போல அசைவக்ககூட்டம்தான் பெரியது பெரிய ஹாலில்  அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் சரியான ஒன்றே. சைவ சாப்பாட்டிற்கும் அழகாக சாமியானா போட்டு ஆங்காங்கே பெரிய ஃபேன்கள் வைத்திருந்தார்கள். குறைவில்லாமல் தினுசு தினுசாய் அயிட்டங்கள்.......வரிசை வைத்து வந்தன. சட்டை போடாமல் அக்கிளிலே விளையாடும் பரிசாகர்களைப்பார்க்காததே எங்களுக்குப் பெரிய சந்தோஷமாய் இருந்தது.  முக்கியமான கல்யாண வீட்டுக்காரர்களின் முகம் மலர்ந்த உபசரிப்பு வேறே.......... நிறைய யோஜனை பண்ணித்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! ஆனால் காலுக்குக் கீழே......... மண் தரை....... பறிமாறும் ஆட்கள், உட்கார்ந்து எழும் விருந்தாளிகள் ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகள் என அந்தப்பகுதியே புழுதிப்படலமாய்.......வாயில்  சுவையான பண்டங்களோடு  நொய் மண்ணும்.........!!
இனி அசைவக்கல்யாணங்களில்  சைவ சாப்பாட்டு பக்கம் போகக்கூடாது என்பதற்கு நாங்கள் சில பல திட்டங்கள் தீட்டியிருக்கிறோம்.
இந்த நல்ல நிகழ்வில் “யாருக்கும் உடம்பு சரியாயில்லை” மருத்துவ மனைக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்பது போன்ற வருத்தமான உத்திகளைத் முதலில் தவிர்த்துவிட்டோம்.
1. பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்தி பரிசையும் எங்களையும் விடியோவிற்கும் போட்டோவிற்கும் ஆஜர் கொடுத்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் அப்படியே வெளியே வந்துவிடலாம்.
அப்படி முக்கியமான ஆட்களிடம் மாட்டிக்கொள்ள நேர்ந்தாலும் திட்டங்கள் கைவசம் இருந்தன.
2 .“சாப்பாடு ஜோர் வெத்ல பாக்கு எங்கே?“ கேட்டுக்கொண்டே முழுப்பூசனிக்காயை சோற்றிலே மறைத்துவிடலாம்.
அது பண்ண இயலாத நேரங்களில்
3 .“இண்ணைக்கி இன்னொரு விசேஷம்,  நாங்க இல்லாட்டி ஒண்ணுமே நடக்காது....... வெவரம் அப்பறம் சொல்றோம்....“ காலில் சுடு தண்ணி ஊற்றிக்கொண்ட அந்த அஸ்திரத்தோடு ஓட்டமும் நடையுமாய் வெளியேறிவிடலாம்.
இப்படியாக எங்கள் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் பையனிடமிருந்து ஒரு போன்.......
“அப்பா   நீங்களும் அம்மாவும் கட்டாயம் சீவச்சன் கல்யாணத்துக்கு பொயிட்டு வந்திடுங்கப்பா..... அவன ஞாபகம் இருக்கா என் கல்யாணத்தில உழுந்து உழுந்து எல்லாத்தயும் உபசரணை பண்ணிகிட்டு கெடந்தானே......... அவனே இங்கேருந்து லேட்டாதான் கெளம்புறான்.. அவுங்க  அப்பா வந்து உங்களுக்கு பத்திரிக்கை வப்பாங்க... வேற யாரையும் அனுப்புச்சிடாதிங்க ப்ளீஸ்.....” ஒபாமாவின் நாட்டிலிருந்து இது உத்தரவாகத்தான் வந்தது. ஒரு இந்தியப்பெற்றோருக்கு வரும் வேண்டுதல் மாதிரி இல்லை!
சிவகங்கைப்பக்கம்  அந்த கல்யாணம்.......... வழியைத் தவற விட்டு  டயரில் காத்துப்போய் பொட்டை வெயிலில் அசந்து போய் மதிய சாப்பாட்டு நேரத்திற்குப் போனவர்களை நல்ல வேளையாக தெரிந்த ஒரே முகமான அப்பா எங்களை வரவேற்று  “ பொண்ணு மாப்பிளையெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்று நேராக பந்திக்குக்கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தாட்டு இலைகளில் அயிட்டங்கள் குவிந்து கொண்டே போகிறது. முதலில் விழும் இனிப்புக்காக மனசு ஏங்குகிறது. அதேசமயம் எங்கோ ஒரு நெருடல்..... தினுசு தினுசாக அசைவ அயிட்டங்கள் அல்லவா இலையில் விழுந்திருக்கின்றன  முக்கனி வைத்துப்பறிமாறும் பெருங்கல்யாணம் போல ஆட்டுக்கறி பொரியல், எரால் பொரியல் கோழி வறுவல் முட்டை தொக்கு சகிதம் மட்டன் பிரியாணி....... கிள்ளிய வயிற்றுப்பசிக்கு கொக்கும் நரியும் விருந்து வைத்துக்கொண்ட கதையாகிப்போயிற்று எங்கள் நிலை!!  நீட்டுப்பந்தியிலிருந்து மெல்ல கழன்று கொள்ள முயல்கிறோம் “ உக்காருங்க உக்காருங்க கோச்சுகாதிங்க..... வாப்பா...... வாப்பா.......  நிண்ணு கவனிங்க” சொந்தக்காரர்கள் முடுக்கிக்கொண்டு நிற்கிறார்கள் என்ற எண்ணம் பந்தி உபசரிப்புக்காரருக்கு. இதற்குள் நண்பரும் அங்கு வந்துவிட்டிருந்தார். மெள்ள எங்கள் சைவ நிலையை விளக்கினோம். ஒரு குறையுமிருக்கக் கூடாது என  நாப்பது ஆடு வெட்டி, வெசைப்படகு எரால் வாங்கி பண்ணைக்கோழியை வெலை பேசி தட்டுதட்டாக முட்டைகளைக் குவித்து விமரிசையாக கலியாணம் நடத்தி கொண்டிருந்த அவர் கையைப்பிசைந்தார். வெகு தூரத்திலிருந்து வந்திருக்கும் நண்பர்கள் பந்தியிலிருந்து எழுந்திரிக்க வேண்டிய சூழ் நிலையில் அவர் ஆடித்தான் போய்விட்டார்.
“நீங்கள்ளாம் அசைவம்ணுல நெனச்சுகிட்டு இருந்தேன்?”
“வீட்ல எல்லாரும் அசைவந்தான்…….. எங்க ரெண்டு பேரத் தவிர”
பொதுவாக எங்க கிராமப்பக்கங்களில் எவ்வளவு பெரிய கலியாணமாக இருந்தாலும் கலியாண சாப்பாடு மட்டும் சைவச்சாப்பாடுதான்.மருவுக்கு அழைக்கும்போதுதான் கவிச்சை சேர்ப்பார்கள்.
“வாங்க வாங்க நீங்க கூடத்துக்கு வாங்க............. நிமிசத்துல எல்லாம் ரெடி பண்ணிடுரேன்....... யப்பா பர்ஸ்ட்டு ஓடிப்போயி ரெண்டு கலர் வாங்கிகிட்டு ஒடியா”
“கலர் குடிக்கமாட்டோம்ணு” வாய் வரை வந்தது எங்கோ காணாமல் போய்விட்டது! அவர் மனசை எவ்வளவுதான் நோகடிக்கப்பது.......?
குக்கிராமத்தில் சாப்பாட்டுக்கடைகளா இருக்கும்....?. வண்டி சிவகங்கை ஓடியிருக்க வேண்டும். பசியெல்லாம் அம்சை அடங்கிப்போன நேரத்திற்கு ஒண்ணு குத்தலா வெந்த சோறு, காரசாரமா ஒரு சாம்பாரு, அதே காரத்திற்கு பேர் சொல்லத்தெரியாத ஒரு காய், புளியாமரத்திலிருந்து இறக்குன ரசம் மொடாத்தண்ணி மோரு........பதத்து செவந்துபோய்க் கெடக்கும் அப்பளம்........... “ஏண்டா ராசப்பன் கடையிலதான வட பாயாசத்தோடு சாப்பாடு எடுத்துகிட்டு வரச் ஒன்னேன், எங்கயோ போய் பாடாவதி சோத்த வாங்கிகிட்டு வந்துருக்க?”
“ஐயா........ நம்ம கலியாணத்துக்கு வரணுமுண்ணு ராசப்பண்ண இண்ணைக்கி அவுக கடைய மூடிட்டாக........”
“என்னங்க சாப்பாடு சுமாரா இருக்கா...? ராசா சாப்பாடு சாப்பிட வேண்டிய நீங்க....... இந்த வெத்த சோத்த திங்கிறிங்க ....... எப்பயுமே கறி மீனு திங்கறது இல்லியா?” விஷயம் கேள்விப்பட்டு விழுந்தடித்து வந்த நண்பரின் அப்பா, பையனின் தாத்தா.......
“இல்லங்க நடுப்பறதான் உட்டுட்டோம்...”
“அதல்லாம் பண்ணாதிங்க... ஒடம்பு சத்தத்துப்பொயிரும்....... இந்த பருப்பு சோத்த திண்ணா வெறுமனத்த வாழ்வுதான் (வாய்வு) மிச்சமாவும். வெள்ளிக்கெழமயிலயும் அமாவாசையிலயும் அத திங்கறதுக்குள்ள எங்குளுக்கு ஏம்பாடு ஓம்பாடு ஆயிப்போவுது......... ! பக்கத்தில ஒரு கச்ச கருவாடாச்சும் கெடந்தாத்தேன் சோறு தொண்டைக்குள்ள எறங்குது......”
எங்களுடைய சைவத்திற்கு ஈடு கட்டும் வகையில் பிரியாணி இன்னபிற அயிட்டங்களும் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்சல் கட்டப்பட்டது.
”ரெண்டு நாளைக்கிக்கெடந்தாக்கூட கெட்டுப்போவாது... செட்டி நாட்டு சமயக்காரனுவ பதுமையா பாத்துப்பாத்துப்பண்ணுவானுங்க..... பிள்ளைங்களயாவது நெறவா சாப்புடச்சொல்லுங்க.........” பார்சல்களை வண்டியில் வைக்கும் வரை தாத்தாவின் பதனமான கவனிப்பில் திக்கு முக்காடி விட்டோம்.
அசைவ இடங்களில் காய்கறி சாப்பிடுபவர்களை ஒரு பாவப்பட்ட ஜந்துக்களாகவே நினைக்கிறார்கள்.பிரதமர் மோடி ஜூன் முதல் வாரத்தில் பங்களாதேஷ் போயிருந்தபோது அந்த நாட்டு ஜனங்கள் “ ஐய்யோ பாவம்......... மீன் சாப்பிட மாட்டாரா, இரால் சாப்பிடமாட்டரா.......இதெல்லாம் நீர் வாழைக்காய்தானே....? வேறு என்னத்தைதான்  அவருக்குக்கொடுப்பது?“  அங்கலாய்த்துத்தான் போய்விட்டார்கள்!!
வண்டி கிளம்பும் நேரத்திற்கு தாத்தா கண்ணாடியில் எட்டிப்பார்க்கிறார். திறக்கிறோம்... ஐயா....  நீங்கள்ளாம் மெத்தப்படிச்சவங்க....
இருந்தாலும் வயசானவன் ஒண்ணு சொல்றேன் “ நடுவால உட்டது திலும்ப நடுவால வந்து சேந்துகறதுல தப்பு ஒண்ணும் இல்லிங்க......செத்த  இந்த செவகங்கக்காரன் சொல்றத கொஞ்சம் ரோசன பண்ணிப்பாருங்க......... சரிங்களா......பத்தரமா பொயித்து வாங்க..........

கும்பிட்டுக்கொண்டே நின்ற தாத்தாவின் அசைவ அன்புக்கும் அடைக்கும் தாழ் இல்லாமற் போய் எங்கள் கண்களில் நீர் மல்கிப் போயிற்று!

Saturday, 6 June 2015

யாருப்பா இந்த ப்ஃளக்ஸ்?

ரொம்ப நாள் சந்தேகம் எனக்குள்ளே......... இதை எப்படி தீர்த்துக்கொள்வது? மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிராந்து புடிக்கிறமாரி அப்படியாக்கொண்ட பெரிய சந்தேகம் என்ன மனசுக்குள்ளே....... நாங்கள்ளாம் இல்லியா ? அத தீத்து வைக்க மாட்டோமா?
ஒண்ணுமில்லிங்க இந்த ப்ஃளக்ஸ் கலாச்சாரத்தின் பூர்வோத்ரம் எனக்குத்தெரிஞ்சே ஆகவேண்டும். இது எங்கதான் ஆரம்பிச்சதுண்ணு தெரியில... ஆனா எங்க தமிழ் நாட்ட பேயா புடிச்சு ஆட்டி வைக்கறது முட்டும் எனக்குக் கண்கூடாத் தெரியுதுங்க.......
என்னாம்மா நீ இவ்வளோ பெரிய மக்கா....... இல்ல மக்கு மாதிரி நடிக்கிறியா......? கைப்புண்ண பாக்கறதுக்கு ஒனக்குக் கண்ணாடி வேணுமா? நம்ம அரசியல் வாதிகளின் பூர்வோத்ரம் சினிமாதான். அப்பல்லாம் புதுப்படம் வெளிய வரையில வரைஞ்சு விளம்பரப்பலகை வப்பாங்க. இந்த சினிமாக்காரங்கள்ளாம் அரசியல்ல நொழஞ்சி ஆட்சிய புடிக்கிறப்ப விளம்பரப்பலகைங்கிற பெரிய அஸ்திரத்த கையோட தூக்கிகிட்டு வந்துட்டாங்க. இந்த மகா சக்தி வாய்ந்த அஸ்திரந்தான் தொழில் நுட்ப வளர்ச்சியடைஞ்சி விளம்பர பலகையையெல்லாம் தூக்கி  அடிக்கிற மாதிரி அத விட ரொம்ப சீப்பா அதவிட அழகா ஜம்முண்ணு ப்ளக்ஸா நிக்குது!
தமிழ் நாட்டு மக்கள் நாம யாரு........? பெரிய சினிமாரக்கார குடும்பந்தானே? அவங்க வெளம்பர காலாச்சாரமும் விக்கிரமன் கதயில வர்ர வேதாளம் மாரி  நம்மள ந்செம புடியால்லா புடிச்சிகிடுச்சு! தாலியில்லாம கலியாணம் இல்லாதமாரி இண்ணைக்கி ப்ஃளக்ஸ் இல்லாம ஒரு வைபவமும் தமிழ் நாட்ல கெடையவே கெடையாது!
விளாவாரியாக விவரம் சொன்ன நண்பர் குழாமிடம் என் பிழை பொறுக்க வேண்டி நின்றேன்.
சென்னை திருச்சி பை பாசில் அடிக்கடி பயணம் செய்யும் எங்களுக்கு ஒரு ஊர் வரப்போகிறது என்றாலே திக் திக் என்று இருக்கும். நீங்களும் இந்த திக் திக்கை உங்கள் பயணத்தில் அனுபவித்திருப்பீர்கள்!
பெரியதொரு ப்ஃளக்ஸ்.......  தப்பறை கொட்டி நிற்கிறது..... அங்கே பால் வடியும் முகத்துடைய ஒரு பெண்......... அதற்கு பூப்பெய்திய கொண்டாட்டமாம்........... மஞ்சள் நீராட்டுகிறார்களாம். அந்த முகத்தில்..... செங்கொரங்கு மாதிரி ரெண்டு கன்னங்களிலும் ரவுஜ்..... கண்களுக்கு மேல் பச்சை ரோஸ் கலர் மஸ்காரா, பென்சிலால் புருவம் திருத்தி கண்களுக்குள் கொள்ளாத மையிட்டு, டிவியின் உபயமாக பெங்காலி கலியாணப்பெண்கள் இடும் வெள்ளைப்பொட்டுகளின் வளைவோடு....... மலயாளப்பெண்களின் சந்தனப் பொட்டையும்  சேர்த்து...... இதோடு விட்டுவார்களா........? ம்ஹூம்.....  பரத கலாச்சாரத்தின் விளைவாக சூர்ய பிறை சந்திர பிறை ராக்கொடி நெத்திச்சுட்டி இன்ன பிற தலை சாமான்களோடு பூச்சடையும் தைத்து.......
கழுத்தை ஒட்டி  நெக்லேஸ் பூத்தாலி டாலர் செயின் மல்லிகை மொக்கு ஆரம் காசு மாலை....... இதோடு விட்டுவார்களா........? ம்ஹூம்......
பிறந்த வீட்டு புகழ் சாற்ற வேண்டாமா...... என்ன? மாமன் சீர் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையை அவள் மேலே மூச்சுத் திணறத் திணற ஏற்றி அந்த பாலகியை பெரும் வேஷாதாரியாக  மஞ்சள் நீராட்டுவிழாவின் பலியாடாக........... 
நாம் அனைவரும் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கவேண்டிய ப்ஃளக்ஸ் விளம்பரம் இது!
 பைபாஸ் வராத அந்தக்காலத்தில் ரோடுகளில் ஆங்காங்கு எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருப்பார்கள். அதில் ஒன்று எச்சரிக்கை அதி பயங்கர வளைவு என்று சொல்லும். அந்த பாணியிலேயே புதிய பைபாசில்  நான் அதி பயங்கர ப்ஃளக்ஸ் ஒன்றைக் கண்டேன் .
ஐய்யனாரப்பனுக்கு கெடா வெட்டுதலும் குழந்தைகளுக்குக் காது குத்தலும்
ப்ஃளக்ஸின் ஒரு பக்கத்திலே குதிரைமேலே உருட்டு முழிகள், விரித்துப்போட்ட தலையில் ஒரு கிரீடம், கெடா மீசை சகிதம்  பெரியதொரு பட்டாக்கத்தியை வீசிக்கொண்டு ஐய்யனாரப்பன்.......... நான் சொன்னால்  நீங்கள் நம்பப்போவதில்லை ப்ஃளக்ஸின் மற்றொரு பக்கத்திலே பயந்து போய்  நிற்கும் மூன்று மழலைகள்.... !! ஐய்யானரைப்பார்த்து குழந்தைகள் பயந்து போனதாக  நான் சொல்லவில்லை... ப்ஃளக்ஸில் குழந்தைள் போட்டோ தனி... என்பது நாம் அறிவோம்..... ஆனாலும் இரண்டும் கூட்டு சேருகையில் குழந்தைகள் ஐய்யானாரைப்பார்த்துதான்  நடுங்கி நிற்கின்றன என்ற உணர்வைக் கொடுக்கின்றது 
அவசியந்தானா......... ?  நம் வீட்டு விசேஷங்கள் வரும்பொழுது இதைக்குறித்து கட்டாயம் யோசிப்போம்
ஊருக்குப்போயிருந்தேன். தென்கச்சி (தென்கச்சிபெருமாள் நத்தம்கொள்ளிடத்தில் ட்ராக்டர் கொள்ளா ஜனங்களுடன் இட்டிலி கேசரி சகிதம் தண்ணிக்குள் உட்கார்ந்து ( ஆமாம் உட்கார்ந்து குளிக்கும் தண்ணீர்தான்! இந்த கோடையில் கொள்ளிடம் கரை புரண்டா ஓடும்? மேலும் பலா டவுணிலிருந்து வந்திருக்கும் பலா தரப்பட்ட குட்டிப்படைகளை மேய்க்க இந்த அளவு தண்ணிர்தான் சரியானது!) கதை அளந்து கொண்டிருந்தோம்
  என்னாப்பா கட நல்லா ஓடுதா? தண்ணீரில் படுத்துக்கொண்டு மாமா பையனைக்கேட்கின்றேன். அதை ஏன் கேக்குறிங்க அத்தாச்சி? அமாவாசை பவுர்ணமிண்ணா கோயில் கொளங்கள்ளதான் கூட்டம் மொய்க்கும். இப்ப என்னடாண்ணா கட்சி கூட்டங்க கட்சி மகாநாடுகள்தான் ஜே ஜேண்ணு நடக்குது....... எந்த பாவத்த கழுவறதுக்குண்ணுதான் தெரியில.... முந்தா நாளு பாருங்க நம்ம கடைக்கி நேரா அடச்சு ஃபிளக்ஸ் போஸ்டர் ஒட்ட குழி தோண்டுறாங்க. அப்பா இந்த பக்கம் பஞ்சாயத்து வெட்டுன குழி ஜன்மமா அப்புடியே கெடக்குநீங்க இங்குட்டு ஃபிளக்ஸ் வச்சா சின்ன கடக்காரங்க எங்குளுக்கு ரெண்டு நா பொழப்பே இல்லாம பொயிரும் கொஞ்சம் தள்ளி வைக்கப்பாருங்கண்ணு கொரல ஒசத்தாமத்தான் சொன்னேன். கிராமங்கள்ளே முன்னாடியெல்லாம் பதில் சொல்லையில ஒரு மரியாத இருக்கும்அப்புடிங்களாண்ணு.... நிதானிச்சி ஆரம்பிப்பாங்க. இந்த மெட்ராஸ் கலாச்சாரம் எங்குட்டும் பரவி இங்க பாரு வெடத்த காட்டி குழிதோண்டச்சொல்லிதான் எனக்கு உத்தரவு மேல என்னாச்சும் இருந்தாக்க கேக்க வேண்டியவங்கள கேட்டுக்க. மட்டு மரியாதி இல்லாம பேசினவன் பெரிய கடப்பாரய ணங்குண்ணு சாச்சுட்டுட்டு எங்குட்டோ பொயிட்டான்.
என்னய்யா என்னுமோ தகரால் பண்ணுறியாமில்ல.......? எங்க தலைவர் மெஜால்ட்டியா ஜெயிச்ச வெடம் இதுண்ணு ஒனக்குத் தெரியாதா? அவுரு ப்ஃளக்ஸ ஒங் கடைக்கி மின்னாடி வப்போம்…….. கெழக்காண்டை வப்போம்……  மேக்காண்ட வப்போம்………  ஐயா பெரிய  டுபாயி சூப்பரு மார்க்கெட்டு வச்சிருக்காருல்ல...... அத இழுத்து கூட மூடிப்புடுவோம். ஒன்னால முடிஞ்சத பாத்துக்க.
இவன் நிச்சயமா உள்ளூரு கட்சிக்காரன் இல்லண்ணு எனக்குத்தெரிஞ்சி போச்சு....... அவங்கண்ணா வச்சி பேசுவாங்க.... நீக்கு போக்கா நடந்துகுவாங்க...... இவன் பந்தாவக் காட்டுறத்துக்குண்ணே வந்திருக்கான். வாய தொறக்காம வண்டிய எடுத்துகிட்டு வெளிய கெளம்பிட்டேன்.
அப்பறம்....?
அப்பறம் என்னா... எங்கடைக்கி துக்குளி சந்து உட்டுபுட்டு அடுத்த கடைய அடச்சிப்பிட்டான்!
  இதுண்ணாச்சும் ஒரு நா கூத்துப்பா......... எங்க ஊர்ல இந்த வெறுமனத்த  ப்ஃளக்ஸ் படுத்துன பாட்ட கேட்டீங்கண்ணா............ வெளியூர் சித்தப்பா ஆரம்பித்தார்
அண்ணைக்கி  நம்ம ஊர்ல பொண்ணூட்டு கலியாணம். மாப்புள ஊட்டு சனங்கள்ளாம் பஸ்கள்லருந்து திமு திமுண்ணு வந்து எறங்குதுவ. புள்ளியார் கோயில்லேருந்து பொண்ணழைக்கிறதா ஏற்பாடு......... பரிசம் போடுறதுக்கு எல்லாம் ஜரூரா நடந்திகிட்டு இருக்கு...... இந்த சமயத்துல பாத்து மாப்புள ஊட்டு  பக்கம் ஒரே கசாமுசா..........
இந்த கசா முசா பெரிய சத்தமாப்போயி நடு கூடத்து  நச்சத்திரமா வந்து நிண்ணுபோச்சு. வெறுமனத்தாளெல்லாம் கொத்து சங்கிலி போட்டுகிட்டு பல்ல இளிச்சிகிட்டு நிக்கையில் நாங்க என்னா எளச்சி போன சாதியா....... ஒத்த சங்கிலி போட்டாவ தெருவில ஒட்டில்ல என் குடும்பத்த அவமானப்படுத்துறானுக.......  பாருங்கடி சனங்களா....... போட்டாவ...... அந்த பக்கத்து மாமியா மருமவகளுக்கு  களுத்து கொள்ளாத நவ...
நம்மளப்பாரு.... நாம  பிச்சக்காரங்களா என்னா......? ஏம் பேரன் படுச்சிருக்க படிப்புக்கும் வாங்குகிற சம்பளத்துக்கும் ஆயிரம் பேரு ஏன் வாசப்படியில தவமா தவங்கெடந்தாளுக......... இண்ணைக்கி பாரு..........இந்த மருவாத கெட்ட சென்மங்கள் கிட்டல்ல மாட்டிகிட்டு கெடக்கோம்………… ஐயா
மாரிமுத்து………. இன்னம் பரிசம் போடுல.......... பொண்ணழைக்கில...... கை நனைக்கில........ அப்புடியே கெளம்பிடுவோம். அதே முகூர்த்தத்தில நம்மூரு கலிய பெருமா பொண்ண முடிச்சிபுடுவோம் ஒரு செல்லப்போட்டு கூப்புடு.......அவன... தங்கமுண்ணு தாங்குவான்.... ஏலம்ணுல்ல ஏந்துவான்  நம்ம சம்பந்தத்த  நம்ம கொலக்கோயிலு அஞ்சு மொவப்புல அளவு சிந்த நிக்கும் விருத்தாசலத்து விருத்தீஸ்வரர் கோயிலுல மொத முகூர்த்தத்தில நம்ம புள்ள கலியாணத்த முடிச்சிருவோம்......அப்பறம் ஊர வளச்சி ஓல அனுப்பி இவனுக பிச்சாத்து ப்ஃளக்ஸ்ஸெல்லாம் தூக்கி அடிக்கிறமாரி ஊர்வோல வழி நெட்டுக்கு பெரும் ப்ளஃக்ஸா அடிச்சி ஒட்டிப்புடுவோம்.......... ஆங்காரமயிருந்தார் அப்பாயி!! துணை சகோதரிகளும் தயார் நிலைதான்!
 பெண் வீட்டு பாட்டி கழுத்தில் கொள்ளை நகை………. மாப்பிள்ளை பக்கத்து அப்பாயி கழுத்தில் ஒத்த வடம்.
 இதெற்கெல்லாம் காரண கர்த்தா நம்ம மாப்பிள்ளைப் பையன்தான். ப்ஃளக்சில் போட பெண்வீட்டார் போட்டோ கேட்டபோது முகங்கள் தெளிவாக இருக்கிறதா என்று பார்த்தானே தவிர அவர்கள் கழுத்து நிறைய  நகை நட்டுக்கள் போட்டிருக்கிறார்களா என்பதைப் பார்க்கவேயில்லை. இப்போது அப்பாயின் ஆத்திரம் இவ்வளவு ருத்திரமாய் வெடிக்க ஆடித்தான் போய்விட்டான். அதற்குக்காரணம் அப்பாயி வீட்டில் மிகு செல்வாக்கு உடையது.அது வார்த்தை எங்கும் நிற்கக்கூடிய சக்தி கொண்டது.
பையன் இருதலைக்கொள்ளி எறும்பாக துடித்தான். துடிப்பில்  வெகு முக்கியமானது என்று ஒன்றும் இருந்தது. இந்த கல்யாணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்றாய் இருந்தாலும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக செல் போன் சாட் ஸ்கைப் என உறவு பல்கிப்பெருகி  நிச்சயிக்கப்பட்ட ந்த கல்யாணம் இன்று அவனது காதல் கவிதையாகவல்லோ ததும்பி நிற்கிறது.
ஒண்ணும் கவலப்படாதீங்க அப்பாயிய மட்டும் நான் இருக்கிற ஏர் கண்டிஷன் ரூமுக்குக்கூட்டிகிட்டு வந்து உட்டுடுங்க கவலை தோய்ந்த அவனுடைய போனுக்கு அரு மருந்தாக அப்பியது அந்தப்பக்கத்திலிருந்து பெண்ணின் பதில்!
அப்பாயி உள்ளே நுழைந்துதான் தாமசம்  கல்யாணப்பொண்ணு அவுங்க கால்ல நெடுஞ்சாங்கடையா உழுந்துடுச்சு. அப்பாயி திக்கு முக்காடிப்போயி அந்த புள்ளய அப்புடி தூக்கி புடுச்சு நல்லா இரு தாயிண்ணு சொல்ல வாய எடுக்கையில அது கழுத்தப்பாக்குது. துக்குளியோண்டு ஒத்த சங்கிலிதான் அது கழுத்துல கெடக்கு. நீங்கதான் அப்பாயி எங்குளுக்கு முக்கியம் ஒத்த சங்கிலியில கலியாணம் பண்ணிக்கண்ணு சொல்லுங்க அதுதான் எனக்கு தேவ வார்த்த. நாங்க கலியாணம் பண்ணி சென்னைக்கி போகையில எங்குளுக்குத்தொணையா எங்களோடயே வந்து இருந்துடுவிங்களா அப்பாயி?"
 பூரிச்சி போயி நிண்ண அப்பாயிக்கி ப்ஃளக்ஸ்செல்லாம் மறந்து போச்சு கொத்து சங்கிலியும் மறந்துபோச்சு ஒத்தயும் மறந்து போச்சு
ஆயா பொண்ணழைக்க நேரமாவுது....... போயி நவ நட்டெல்லாம் எடுத்து போட்டு கிட்டு சம்முண்ணு வா?
இந்தப்பக்கம்  மனோதத்துவ ரீதியில கல்யாணப்பெண்அண்ட் கோ அப்பாயி அண்ட் கோவை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்க கல்யாணத்தை நிறுத்தக் கூடிய அதி சக்தி வாய்ந்த ப்ஃளெக்ஸ் பூகம்பம்  வெகு தீவிரமடைந்து பெண்ணின் அப்பா முன்னும் நின்றபோது அவர் தன் நண்பர்களைக்கூப்பிட்டு யப்பா  நட்புக்குண்ணு நீங்க பத்து ஃப்ளக்ஸ் வச்சீங்க. ஆனா இந்த ப்ஃளக்ஸே  என் பொண்ணு வாழ்க்கைக்கி ஒல வச்சுறும் மாரி இருக்கு. இப்ப  நீங்க என்னா செய்வீகளோ ஏது செய்வீகளோ அந்த ப்ஃளக்ஸுங்க அங்கன நிக்கப்புடாது. காதும் காதும் வச்ச மாரி  அந்த வேல நடந்தாவுணும். இது நம்ம பொண்ணோட கட்டளை சொல்லிபுட்டு அவர் தலய பிச்சுகிட்டு ஓடுனாரு
கெட்டிகாரனுவதாம்பா அந்த தோழமக்காரனுவ! எம்புட்டு ஆளுகள புடுச்சாந்தானுகளோ தெரியில, எம்புட்டு  வாழக்கொல்லைய அழிச்சானுவளோ தெரியில பொண்ணழப்பு மண்டபத்துக்கு வரங்காட்டியும் நெட்டுக்கும் கொலை தள்ளிய வாழ மரங்களா நட்டு சீரியல் செட்டை அது மேல பின்னிவுட்டு.......  ப்ஃளக்ஸா.......... அப்புடின்னா என்னாங்கண்ணு........ கேக்குற அளவுக்கு அந்த வெடங்கள சோடன பண்ணி அமக்களப்படுத்திட்டானுவ.....
தான் பேச்சு மெஜால்ட்டியா நிண்ணுபோனதுல மருமவ பேத்தியோட உறவாடி மகிழ்ந்ததுல அப்பாயி  எல்லாத்தையும் மறந்து ஒரு நெலக்கி வந்துடுச்சு!
அந்த  விருத்தாசலத்து விருத்தேஷ்வரரும் ஒரு பொண் பாவத்திலிருந்து அண்ணைக்கி தப்பிச்சிகிட்டாரு போ!!!!!!
அவருடைய ஹாஹா ஹோ ஹோ சிரிப்பில் மட்டுமல்ல பக்கெட் கரண்டி சகிதம் அங்கு உலா வந்த கேசரி இனிப்பிலும் ப்ஃளக்ஸ் கலாச்சாரம் நமக்கில்லை காண் என்ற உறுதியிலும் அன்று கொள்ளிடத்து.தண்ணியில் கும்மியடித்தே மகிழ்ந்தோம்!!